Tuesday, May 12, 2015

தலைவன் - - அறிவியல் கதை


தலைவன்
                                                            ---(1)---
                                                                    வருடம் 2042

நிலவின் இரவில் அமைதி எங்கும் வியாபித்திருந்தது. ஆகாயத்தை நட்சத்திரங்கள் மலர்ச்சரம் போல அலங்கரித்து மின்னிக் கொண்டிருந்தன. நீல நிறப் பந்தாய் தெரிந்த பூமியை ஆஷா கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன மறுபடியும் தாத்தா ஞாபகமா?"

ஆஷாவின் தந்தை அவள் பின்னால் நின்று கொண்டிருந்தார்.

"அவரை நீங்கள் பூமியிலேயே தங்க விட்டு வந்திருக்கக் கூடாது."  

"தாத்தாவை என்னுடன் நிலவுக்கு வரச் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அவர் பிடிவாதம் பற்றி உனக்குத் தெரியாது?"

"நீங்கள் பூமியை கை கழுவி விட்டு வந்திருக்கக் கூடாது. உங்களுடைய சுயநலத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை."

"ஆஷா, உனக்கு இப்போது இருபது வயது. 25 வருடங்கள் முன்பு பூமிக்கு நேர்ந்த கதி நீ கேள்விபட்டிருப்பாய். இருந்தாலும் சொல்கிறேன். ஈரான், இஸ்ரேல் என்னும் இரண்டு சிறிய நாடுகள் இடையே அணு ஆயுதப் போராக ஆரம்பித்தது அமெரிக்கா, ஐரோப்பா,சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளையும் இழுத்தது. அதன் விளைவாக இந்நாடுகள் முழுதும் அழிந்தது. போருக்குப் பின்னும் கதிர் வீச்சின் காரணமாக இப்பிரதேசங்கள் யாரும் வசிக்க முடியாத அளவுக்கு  மாறியது. போரில் நடு நிலைமை வகித்த இந்தியா நாடு மட்டுமே தப்பியது. ஆனால் அதன் பின்னர் கோள வெம்மை காரணமாக இந்நாடும் இயற்கையின் சீற்றத்திற்கு உள்ளாகியது. அதனால் இந்நாட்டில் வசித்தவர்கள் நிலவு, செவ்வாய் போன்ற இதர கிரகங்களுக்கு குடியேறினர். உன் தாத்தா போன்ற சிலர் பூமியிலிருந்து குடிப் பெயர மறுத்தனர்."

"பூமி நமது தாய்க் கிரகமாக இருக்க நாம் ஏன் அதற்கு எந்த உதவியும் செய்யவில்லை"

"நிலவில் வசிக்கும் நாம் விஞ்ஞான வளர்ச்சியில் பெரிதும் முன்னேறினோம். ஆனால் நமக்குத் தேவையான சில கனிமங்கள் பூமியில் மட்டுமே கிடைக்கிறது. பூமியிலோ விவசாயம் செய்ய முடியாத நிலை. அதனால் அவர்களுக்கு வெறும் உணவுப் பொருட்களை நாம் அளிக்கிறோம். அதற்குப் பதிலாக பூமியில் உள்ளவர்களைப் பயன்படுத்தி அங்குள்ள கனிமங்களை எடுத்துக் கொள்கிறோம். சுரங்கங்களில் வேலை செய்யும் இவர்கள் நிலைமை பரிதாபத்துக்குரியது. சுருக்கமாக சொல்லப் போனால் பூமி இப்போது நமது நிலவின் காலனிப் பிரதேசம்."

"சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியா பிரிட்டனின் காலனிப் பிரதேசமாக இருந்தது போல".

"ஆம் சரியாகச் சொன்னாய். பூமியின் சீரமைப்பு மற்றும் அதற்கு முழு வளர்ச்சி  அளிக்க வேண்டும் என்று நான் மற்றும் சிலரும் போராடுகிறோம்.அதற்காக ஒரு கட்சியும் ஆரம்பித்தேன். அடுத்த மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றி அடைந்தால்  பூமியின் நிலையை முற்றிலும் மாற்றி அமைப்பேன். நேரமாகிறது உன் அம்மா தேடுவாள். தூங்கலாம் வா."

அடுத்த நாள் ஆஷா தனது பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். மானிட்டரில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.

"அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக நடத்திய கருத்துக் கணிப்பில் விஷால் குமார் 20 சதவிகித வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்."

செய்தியை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தபோது அவள் நண்பன்  பிரேம்  முதுகைத் தட்டினான்.

"உன்னுடன் தனியாகப்  பேச வேண்டும். வெளியே போகலாம் வா."

ஆஷா பிரேமைப் பின் தொடர்ந்து சென்றாள்.

"நீ பூமிக்கு கள்ளத்தனமாக செல்லும் விண்கலத்தில் ஒரு இடம் வேண்டும் என்று கேட்டிருந்தாய் அல்லவா. நான் பெரிதும் முயற்சி செய்து நாளை செல்லும் விண்கலத்தில் உனக்கு ஒரு இடம் பிடித்து வைத்திருக்கிறேன். உனக்கு சம்மதமா"

ஆஷா தீவிரமாக யோசித்து பதிலளித்தாள். "இல்லை பிரேம். பூமிக்கு இப்போதே செல்ல  அவசியம் இல்லை. அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் என் அப்பா வெற்றி அடைவது உறுதி. அவர் ஜனாதிபதி ஆனால் பூமிக்கு செல்ல இப்போதிருக்கும் எல்லா கட்டுப்பாடுகளையும் தளர்த்தி விடுவார்."

"நன்றாக யோசித்து சொல். உனக்கு இடம் கிடைப்பதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன்."

"இப்போது வேண்டாம். இந்த சமயத்தில் நான் பூமிக்கு திருட்டுத்தனமாக சென்றால் என் அப்பா ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை கடினமாக்கும். அது பூமியின் எதிர்காலத்திற்கும் நல்லதில்லை."

"நாளை வரை உனக்கு டைம் கொடுக்கிறேன். நன்றாக யோசித்து சொல்."

பிரேம் சென்றதும் ஆஷா மெல்ல தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

வீட்டின் கதவு திறந்தே இருந்தது. வீட்டிற்குள் காலை வைத்ததுமே ஆஷாவுக்கு எதுவோ சரியாகப் படவில்லை. தன் தந்தையின் அறைக்குச் சென்றதும் உறைந்துப் போனான். விஷால் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். பிறகு பதட்டத்துடன் படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது அவன் அம்மாவும் இறந்துக் கிடந்தார்.

ஆஷாவுக்கு இடி விழுந்தது போலிருந்தது. வெகு நேரம் கண்களை மூடிக் கொண்டு அழுதாள்.

சற்று சுதாரித்தப் பிறகு தன் போனை எடுத்தாள்.

"பிரேம் எனக்கு உன் உதவி வேண்டும்."

                                                                           ------------******-----------                                                                   -

ஆஷா பூமிக்கு வந்து ஒரு வாரம் கழிந்திருந்தது. அவள் நினைத்ததைக் காட்டிலும் பூமியில் வறுமையும் பசியும் தாண்டவமாடியது. எங்கு பார்த்தாலும் குடிசைகள் நிறைந்த சேரிப் பகுதிகளும், விலா எலும்புகள் தெரிந்த குழந்தைகளும், உணவுக்காக சண்டைப் போடும் இளைஞர்களும் காணப்பட்டனர். ஒரு நாளைக்கு இரு வேலை ரேஷனில் உணவு அளிக்கப்படும்.ஒரு வேலை உணவாக இரண்டு சப்பாத்திகளும், தாலும் சிறிது அரிசியும் ரேஷனில் கிடைக்கும். அதற்காக நடக்கும் அடிபிடி சண்டையைப் பார்த்து ஆஷாவுக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது.

பூமியில் ஆண், பெண்  அனைவரும் சுரங்கத்தில் வேலை செய்பவர்களாக இருந்தனர். கடுமையான சூழ்நிலையில் வேலை செய்வதால்  காச நோய் மற்றும் பல விதமான நோய்க்கு ஆளாகியிருந்தனர். அவர்களை நிர்வாகம் செய்வதற்கு நிலவிலிருந்து சிலர் பூமியில் வசித்து வந்தனர். அவர்கள் சேரிப்பகுதிகளில் இருந்து ஒதுங்கி வசதியான மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.

ஆஷாவிடம் பணம் நிறைய இருந்ததால் தங்குவதற்கு ஒரு நல்ல வீடு கிடைத்தது. அவள் காலைப் பொழுதில் சேரிப்பகுதிக்கு சென்று  தன் தாத்தாவின் புகைப்படத்தைக் காண்பித்து அவரைப் பற்றி விசாரிப்பான். எந்தத் தகவலும் கிடைக்காததால் பெரிதும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஒரு நாள் வெகு நேரம் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்தபோது அவள் பெட்டி உடைக்கப்பட்டது தெரிந்தது. அவளிடமிருந்த பணம், உடைகள், உணவு எதுவும் திருடுப் போகவில்லை. மாறாக அவள் புத்தகங்கள் அனைத்தும் களவாடப்பட்டிருந்தது.

வேலைக்காரன் பஷீரிடம் விசாரித்தாள்.

"இங்கு யாரும் புத்தகங்கள் படிப்பதே இல்லை. ஒரு வேலை உணவுக்கே தாளம் போடும் போது புத்தகம் எங்கு படிப்பது. ஆனால் சேரியில் மூன்று இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் புத்தகம் படிக்கிறார்கள். நிலவிலிருந்து வந்தவர்களுக்காக ஒரு நூலகம் உண்டு. அங்கிருந்து பல புத்தகங்கள் திருடியதற்காக அவர்கள் சிறை சென்றிருக்கிறார்கள். நாளை நீங்கள் சென்று விசாரிக்கலாம்."

ஆஷா   அடுத்த நாள் சேரிப்பகுதி சென்றாள். தான் தேடிய குடிசை வந்ததும் மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள்.

சுற்றி நடப்பது என்னவென்பதே தெரியாமல் மூன்று இளைஞர்கள் புத்தகம் படித்துக் கொண்டிருந்தனர்.

ஆஷா நுழைவதைப் பார்த்து மூவரும் எழுந்தனர்.

"யார் நீ. இங்கு எதற்கு வந்தாய்"

"புகழ் பெற்ற புத்தகத் திருடர்கள் நீங்கள் தானா"

"நாங்கள் எதைத் திருடினால் உனக்கென்ன?"

"நீங்கள் படித்துக் கொண்டிருப்பது என் புத்தகங்கள்."

மூவரும் லேசாகத் திடுக்கிட்டனர்.

ஒருவன் மட்டும் சுதாரித்து, "புத்தகம் வேண்டுமானால் உன்னுடையதாக இருக்கலாம். ஆனால் அதில் உள்ள கருத்துக்கள் இந்த உலகம் அனைத்திற்கும் சொந்தம். அதனால் எங்களைத் திருடர்கள் என்று சொல்லாதே."

"அந்த புத்தகத்தை எழுதியவர் என் தாத்தா என்பதால்  அதிலுள்ள கருத்துக்கள் எனக்கும் ஒரு விதத்தில் சொந்தம் தான்."

அதைக் கேட்டு மூவரும் அதிர்ந்தனர். "என்ன! சரித்திர எழுத்தாளர் ராஜ்குமார்  உன் தாத்தாவா"

"ஆம்"

"உன் தந்தை குடும்பத்துடன் நிலவுக்கு சென்றுவிட்டார் என்றல்லவா கேள்விப்பட்டோம்"

ஆஷா தன் கதையையும், தாத்தாவைத் தேடி தான் பூமிக்கு வந்ததையும் கூறினாள்

"உன் தாத்தா எங்கிருக்கிறார் என்று தெரியுமா?"

"ஒரு வாரமாகத் தேடியும் பலரிடம் விசாரித்தும் பலனில்லை"

"அவர் நிலவின் அடக்குமுறையை எதிர்த்து புரட்சி செய்ய முற்பட்டார் என்று கூறி அந்தமான் சிறையில் அடைத்துள்ளனர்."

"உனக்கு மட்டும் எப்படி இது தெரியும்"

"ராஜ்குமார். பற்றிய எல்லா விபரமும் எங்களுக்கு அத்துப்படி. உன் தாத்தாவைத் தேடும் முயற்சியில் எங்களையும் சேர்த்துக் கொள்."

"சந்திரன்"

"மோகன்"

"நீரோ"

மூவரும் ஆஷாவை நோக்கிக் கை நீட்டினர்.

நால்வரின் கரங்களும் இணைந்தன.

    
                                                                 ---(2)---


ஒரு சிறிய படகு கடலில் சென்று கொண்டிருந்தது. புத்தகத் திருடர்களும் ஆஷாவும் அந்தப் படகில் இருந்தனர். படகை வல்லப் என்ற இளைஞன் செலுத்திக் கொண்டிருந்தான்.

ஆஷா -  "இந்தப் படகில் செல்வது கொடுமையாக இருக்கிறது. அந்தமான் செல்வதற்கு கப்பல்கள் எதுவும் இல்லையா".

சந்திரன் -  "பூமி கற்காலத்திற்கு திரும்பி விட்டது என்பதை இன்னுமா நீ உணரவில்லை. கப்பலை இங்கு இருப்பவர்கள் யாருமே பார்த்ததில்லை. நிலவிலிருந்து வந்தவர்கள் உபயோகத்திற்கு மட்டும் விமான வசதி உண்டு."

ஆஷா, -  "இந்தப் படகில் அந்தமான் செல்ல எவ்வளவு நாள் ஆகும்."

வல்லப் - "மூ மூ மூன்று நா நா"

ஆஷா - "மூன்று நாட்களா?"

ஆம் என்று வல்லப் சைகை செய்தான்.

நீரோ - "டேய் திக்குவாயா. வாயை மூடிக் கொண்டு படகை மட்டும் ஒட்டு".

ஆஷா - "ஏன் அவனை இப்படி மட்டம் தட்டுகிறாய்? அவன் உதவி  இல்லாவிட்டால் நாம் அந்தமான் செல்ல முடியுமா"

நீரோ - "அது சரி தான். ஆனால் இவன் பேச ஆரம்பித்தால் விடிந்தே விடும்."

மோகன் - "யாருடைய பலவீனத்தைய்ம் குறை சொல்லாதே. இது உன்னிடம் இருக்கும் கெட்டப்பழக்கம் நீரோ."

மோகன் வார்த்தைகளைக் கேட்டதும் நீரோ அடங்கினான்.

மூவரும் அமைதியாக ஆளுக்கு ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். மோகன் - 'My experiments with Truth,  நீரோ  - ‘Discovery of India’ , சந்திரன் - ‘Bose – The springing Tiger’   படித்துக் கொண்டிருந்தனர்.

ஆஷா வல்லபிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, "இதைப் படிக்கிறாயா” என்று கேட்டாஉன் தாத்தாவா.

வல்லப்  - "புத்தகம் மட்டும் படித்து நடைமுறை வாழ்க்கையை நடத்த முடியுமா. அது வெறும் முட்டாள்கள் செய்யும் வேலை."

ஆஷா - "இப்போது திக்காமல் பேசுகிறாயே?"

வல்லப் - "அது எப்போதாவது வரும்."

நீரோ - "புத்தகம் முட்டாள்கள் தான் படிப்பார்கள் என்று எந்த முட்டாள் சொன்னது. அப்படி என்றால் ஐன்ஸ்டீன் முட்டாளா? ஸ்டீவ் ஹாக்கிங் முட்டாளா? ந்யூட்டன் முட்டாளா?"

வல்லப் - "நீ சொன்ன ஐன்ஸ்டீன், ஸ்டீவ், ந்யூட்டன் இவர்கள் எல்லோரையும் இந்தப் படகைச் செலுத்த சொல்லேன். ஏன் முதலில் நீ முயற்சித்து பாரேன்."

நீரோ - "இதற்கு நீ முழு ஊமையாகவே இருந்திருக்கலாம்."

மோகன் - "நீரோ! ஏன் வல்லபை வம்பிழுத்துக் கொண்டே இருக்கிறாய்."

நீரோ  புத்தகம் படிப்பதைத் தொடர்ந்தான்.

அனைவரும் அமைதியாக இருக்க ஆஷாவிற்கு நான்கு ஆண்கள் அம்த்தியில் தான் தனித்து ஒரு பெண் என்பது உறுத்தியது. அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருக்கக் கூடும் என்பதை தெரிந்து கொள்ளவும் ஆவல் தோன்றியது.

மோகனும் சந்திரனும் ஆஷா இருப்பதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் புத்தகத்தில் மூழ்கி இருந்தனர்.

நீரோ தன்னை அவ்வப்போது பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்தான். இவன் முகத்தில், சிரிப்பில் ஒரு கவர்ச்சி. எந்தப் பெண்ணையும் அடிமைப்படுத்த்தி விடக்கூடிய கவர்ச்சி. கூடாது. தான் இதில் விழுந்து விடக்கூடாது. கவனம் தேவை.

"களைப்பாக இருந்தால் சற்று உறங்கலாமே?"

வல்லப் அவளைப் பார்த்து கேட்டதில் ஒரு அக்கறை இருந்தது.சகோதரத்தன்மை தெரிந்தது.

மூன்று நாட்கள் கழித்து படகு அந்தமான் கரையை அடைந்தது.

ஆஷா - "சிறை இருக்கும் இடத்தை எப்படி கண்டு பிடிப்பது?"

சந்திரன் - "யாரிடமாவது விசாரிக்கலாம்"

வல்லப்  ஒரு மேப்பை எடுத்து சிறை இருக்கும் இடத்திற்கு செல்லும் வழியை குறித்துக் கொண்டான்.

மோகன் - "பரவாயில்லை நல்ல முன் யோசனையாகத் தான் எடுத்து வந்திருக்கிறாய்"

வல்லப் - "என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்."

நால்வரும் அவன் பின்னே சென்றனர்.

சிறிது நேரத்தில் சிறைச்சாலை தெரிந்தது.

சந்திரன் - "இப்போது ராஜ்குமாரை எப்படி விடுவிப்பது"

ஆஷா - "பலத்த காவல் இருக்கும் அல்லவா"

சந்திரன் - "நம்மிடம் பெரிதாக ஆயுதம் எதுவும் இல்லை. என்னிடம் ஒரு ரிவால்வர் இருக்கிறது அவ்வளவு தான். இதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்."

நீரோ - "ஆஷா உன்னிடம் பணம் இருக்கிறது அல்லவா. லஞ்சம் கொடுத்து முயற்சி செய்யலாமா?"

மோகன் - "அது தவறான அணுகுமுறை நீரோ"

வல்லப் - "இது எதுவும் இங்கு உதவாது. இந்த சிறையை  காவல் காக்க ஒரு ஆள் கூட கிடையாது. சிறைச்சாலை முழுதும் கதிர்களால் காவல் காக்கப்படுகிறது. யாரும் உள்ளேயோ வெளியிலோ செல்ல முடியாது."

நீரோ - "இது எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்"

வல்லப் - "அவசியம் தெரிய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். இப்போது உன் புத்தகங்களா  நமக்கு உதவி செய்கிறது."

ஆஷா - "அப்படி ஆனால் தாத்தாவைக் காப்பாற்ற ஒன்றும் செய்ய முடியாதா?"

வல்லப் - "இந்த சிறையின் கதிர்களை எல்லாம் ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு கம்ப்யூட்டர் மட்டும் என்னிடம் இருந்தால் போதும். சிஸ்டத்தை ஊடுருவி அதனை செயலிழக்கச் செய்ய முடியும்".

ஆஷா தான் நிலவில் பயன்படுத்திய லாப்டாப்பைக் காண்பித்தாள் வல்லப் அதனை ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்தான்.

வல்லப் - "இதைக் கொண்டு ஒரு நிமிடத்தில் சிறைச்சாலையின் சிஸ்டத்தை ஊடுருவ முடியம்."

நீரோ பொறாமையுடன்  வல்லபை பார்த்தான்.

சந்திரன் - "உனக்கு எப்படி கம்ப்யூட்டரை இயக்கத் தெரியும். நம் பூமிவாசிகள் யாரும் கம்ப்யூட்டரைப் பார்த்தது கூடக் கிடையாதே."

வல்லப் - "நீங்கள் புத்தகத் திருடர்கள் என்றால் நான் கம்ப்யூட்டர் திருடன். பூமியில் தங்கியிருக்கும் நிலவுவாசிகளின் கம்ப்யூட்டர்களைத் திருடி இருக்கிறேன். ஆனால் உங்களைப் போல நான் மாட்டவில்லை. செய்யும் தப்பைத்  தெளிவாகச் செய்வேன் நான்."

ஆஷா - "பேச நேரமில்லை. வல்லப் சீக்கிரம் உன் வேலையைத் தொடங்கு."

வல்லப் கம்ப்யூட்டரை இயக்கி பிறகு வெற்றி என்று தன் விரல்களால் சைகை செய்தான்.

ஐவரும் சிறை நோக்கி  வேகமாக நடந்தனர்.

சிறையின் உள்ளே சென்றதும் அங்குள்ள கைதிகள் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கைதிகள் சிலர் பசி  மயக்கத்திலிருந்தனர். இன்னும் சிலர் சித்தம் குலைந்த நிலையிலிருந்தனர்.

வல்லப் - "இங்குள்ள கைதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு வேலை உணவு தான். கைதிகளை சில சமயம் இருட்டறையில்  அடைத்து வைத்தும் விடுகிறார்கள்."

சந்திரன் - "உன் தாத்தாவை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது. அவரை இதற்கு முன் பார்த்திருக்கிறாயா?"

ஆஷா - "இல்லை. அவர் புகைப்படம் என்னிடம் இருக்கிறது. ஆனால் அது 30 வருடம் முன் எடுத்தது"

ஒவ்வொரு அறையாகத் தேடியவர்கள் வயதான ஒரு மனிதர் மயக்க நிலையிலிருப்பதைப் பார்த்தனர்.

அவரைப் பார்த்ததுமே ஆஷா  "இது தான் என் தாத்தா!" என்று உற்சாகத்துடன் கத்தினாள்

சந்திரன் - "நன்றாகப் பார்த்து சொல்லு. அவரை ஒரு முறை கூட நீ பார்த்ததில்லை."

ஆஷா - "சந்தேகமே இல்லை. என் உள்ளுணர்வு சொல்கிறது. இது தான் என் தாத்தா"

சந்திரன் - "இதைத் தான் இரத்த பந்தம் என்று சொல்வார்களா".

வல்லப்  - "சிறையின் செக்யூரிட்டி சிஸ்டம் ஊடுருவப்பட்டிருப்பது இந்நேரம் அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும். நாம் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும். சீக்கிரம் இவரைத் தூக்கி  வெளியேறுங்கள்."

ராஜைத் தூக்கிக் கொண்டு ஐவரும் கரையிலிருக்கும் படகு நோக்கி வேகமாக ஓடினர். சிறிது நேரத்தில் கரையை வந்தடைந்தனர்.

நீரோ - "முதலில் இவர் மயக்கம் தெளிய வேண்டும். நம்மிடம் இருக்கும் தண்ணீர் இவருக்குக் கொடு"

வல்லப் - "ஜீஸ் ஏதாவது இருந்தாலும் கொடுக்கலாம்"

சில நிமிடங்களில் ராஜின் உதடுகள் அசைந்தது. இமைகள் லேசாகத் திறந்து மூடிக் கொண்டன.

நீரோ - "பெரியவருக்குத் தொடர்ந்து நீர் மற்றும் ஆகாரம் அளித்தால் நினைவு வந்து விடும். நாம் சீக்கிரம் தீவை விட்டுக் கிளம்ப வேண்டும்."

வல்லப் - "நாம் எங்கு செல்வது."

சந்திரன் - "நாம் மீண்டும் நம் பழைய இருப்பிடத்திற்கு சென்றால் ஆபத்து. பெரியவரை அங்கு மறைத்து வைக்கவும் முடியாது."

வல்லப் - "அந்தமான் தீவிலேயே சில நாட்கள் மறைந்திருக்கலாமா"

ஆஷா - "வேண்டாம். இன்னும் சில மணி நேரங்களில் இந்த இடம் முழுதும் ரோபோ காவல் வீரர்கள் நம்மை வேட்டையாட ஆரம்பித்து விடுவார்கள்."

நீரோ - "இலங்கைத் தீவுக்கு நாம் போகலாம். அங்கு நிலவுவாசிகளின் கெடுபிடி அவ்வளவாகக் கிடையாது. அங்கிருந்து நம் அடுத்த திட்டங்களைப் பற்றி யோசிக்கலாம்"

ஆஷா - "அதுவும் நல்ல யோசனையாகத் தான் படுகிறது."

சந்திரன் - "உன் தாத்தா கிடைத்தாகி விட்டது. அவரை உன்னுடன் நிலவுக்கு அழைத்துச் செல்லப் போகிறாயா?"

ஆஷா - "இன்னும் முடிவு செய்யவில்லை. தாத்தா இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்"

நீரோ - "பேசி கொண்டிருப்பதில் பலனில்லை. அடுத்து செய்ய வேண்டியது பற்றி நாம் பிறகு சிந்திக்கலாம். எல்லோரும் படகு மீது ஏறுங்கள்.  வல்லப் சீக்கிரம் படகை செலுத்து."

அனைவரும் படகு  மீது ஏறினர். வானம் இருட்டிக் கொண்டது. நிலவு மெதுவாக வானத்தில் தோன்றியது. அலைகளில்   மெதுவாக ஆடியவண்ணம்  அந்தப் படகு வெகு தூரம் கடலில் சென்று  மறைந்தது.

                                                             ---(3)---


ஆஷா தனது நண்பர்களுடன் இலங்கை வந்து ஒரு வாரம் கழிந்திருந்தது. அவள் தாத்தாவின் உடல்நலம் வெகுவாக முன்னேறியிருந்தது.

அன்று அவருக்கு உணவு எடுத்துச் செல்ல அவர் அறை சென்ற போது ஒரு சிறு வியப்பு காத்திருந்தது. எப்போதும் படுக்கையிலிருக்கும் அவன் தாத்தா அன்று காணவில்லை. அறையினருகே இருந்த வெராந்தாவில் நின்று கொண்டு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தன்னருகே வந்து நின்ற ஆஷாவைப் பார்த்து கேட்டார்.

"நீ தான் என்னை இங்கு கொண்டு வந்தவளா? இது என்ன இடம்? நீ யார்?"

"ஆம் நானும் என் நண்பர்களும் உங்களை அந்தமான் சிறையிலிருந்து விடுவித்தோம். என்னை உங்கள் பேத்தி என்று நினைத்துக் கொள்ளுங்கள்."

"ஆம்! எனக்கு ஒரு பேத்தி இருந்தால் உன் வயது தான் இருக்கும். என்னை விடுவித்த காரணம்?"

"தாத்தாவைப் பேத்தி காப்பாற்றுவதை விட வேறு என்ன முக்கிய காரணம் வேண்டும்."

"என்ன சொல்கிறாய்"

ஆஷா தன்னிடமிருந்த போட்டோவைக் காண்பித்தாள்.

"இதில் இருப்பவர்கள் யார் தெரிகிறதா?"

"30 வருடங்கள் முன்னர் என் மகனுடன் எடுத்த போட்டோ இது."

"இப்போது இந்தப் போட்டோவைப் பாருங்கள்"

"இதில் இருப்பது என் மகன். அவன் கையிலிருக்கும் குழந்தை?"

ஆஷா தன் விரல்களால் தன்னைச் சுட்டிக்காட்டினாள்.

"இருக்காது. இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. என் மகன், அவன் போய் விட்டான். என்னை விட்டுப் போய் விட்டான். அவன் பெயரைச் சொல்லி யாரும் என்னைத் தேடி வர வேண்டாம். என்னை நிம்மதியாக இருக்க விடு. என்னை விட்டுப் போய் விடு."

"ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள்"

"வேண்டாம். நீ என்னுடைய உண்மையான பேத்தி ஆகவே இருக்கலாம். ஆனால் உன் முகத்தைப் பார்க்கக் கூட நான் விரும்பவில்லை. உன் அப்பா எனக்கும் அவன் பிறந்த மண்ணுக்கும் துரோகம் செய்து விட்டான். அவன் வாரிசாகிய நீயும் அவனைப் போலத் தான். இங்கிருந்து நீ தொலைந்து விடு. உன்னுடைய நிலவுக்கே போ. நன்றாக வசதியாக வாழ்ந்துக்கொள்."

"அப்பா செய்தது எந்த விதத்திலும் தவறாகாது. நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தீர்கள். உங்களுடைய இறந்த கால நினைவுகளை மட்டுமே சிந்தித்தீர்கள். அப்பா எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தார். தன் எதிர்கால சந்ததியினர் மற்றும் இந்த மனித குல எதிர்காலம் பற்றி சிந்தித்தார். அதனால் தான் அவர் அந்த முடிவெடுத்தார்."

"இதைத்தான் உன் அப்பாவும் என்னிடம் சொன்னான். இதெயெல்லாம் சொல்லி என்னை சமாதானப்படுத்த முடியாது."

"நீங்கள் பூமியிலேயே தங்கியிருந்து இங்கு என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தீர்கள். ஒன்றுமில்லை. ஆனால் அப்பா இங்கிருந்து எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்தார். அதனால் நிலவு சென்றார். பூமியை மீண்டும் சொர்க்கபுரியாக மாற்ற அவரிடம் திட்டமிருந்தது. அவரால் கண்டிப்பாக அது முடிந்திருக்கும். விதி மட்டும் விளையாடாமல் இருந்தால்."

ராஜ்குமார் கேள்வியுடன் ஆஷாவை நோக்கினார்.

"அப்பா பூமியின் புனர் நிர்மானத்திற்காகப் போராடினார். அதனால் எதிரிகள் கையால் அப்பாவும் அம்மாவும் கொல்லப்பட்டனர்."

ராஜ்குமார் இடி விழுந்தது போல அப்படியே நிலை குலைந்தார்.

"எனக்கு முன் நீ இறப்பதற்கா உன்னைப் பெற்றேன்"

கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதார்.

ஆஷாவைத் தன்னருகே வரும்படி அழைத்தார்.

அவனைக் கட்டிப் பிடித்து வெகு நேரம் அமைதியாக இருந்தார்.

அப்போது அவர்களைத் தேடி புத்தகத் திருடர்களும் வல்லபும் அங்கே வந்தனர்.

அவர்களிருக்கும் நிலையைக் கண்டு திரும்பிச் செல்ல எத்தனித்தனர். ஆஷா அவர்களை இருக்கச் சொல்லி நிறுத்தினாபேத்தி.

"இவர்கள் நான்கு பேர் உதவியில்லை என்றால் நான் உங்களை விடுவித்திருக்க முடியாது."

அவர்களைத் தன் தாத்தாவிற்கு அறிமுகப்படுத்தினான்.

சந்திரன் - "உங்களைப் பற்றி எந்த அறிமுகமும் எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் இந்திய விடுதலைப் போர் பற்றி எழுதிய புத்தகங்கள் ஒன்று விடாமல் நாங்கள் படித்திருக்கிறோம்."

ராஜ் - "ஆச்சரியம்! இந்த காலத்திலும் புத்தகம் படிக்கிறீர்களா?"

வல்லப் - "இவர்களில் என்னை சேர்த்துக் கொள்ளாதீர்கள். எனக்குப் புத்தகம் தொட்டாலே தூக்கம் வந்து விடும்"

ஆஷா - "வல்லப், உன்னைப் பற்றி நீயே குறைவாக சொல்லாதே. இவனுக்கு கம்ப்யூட்டர் பற்றி முழுதும் அத்துப்படி. இவன் செய்த சாகசத்தினால் தான் உங்களை அந்தமான் சிறையிலிருந்து விடுவிக்க முடிந்தது."

ராஜ் - "உங்களைப் பார்த்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. தற்போது பூமியிலிருக்கும் மனிதர்களின் நிலையென்ன. அவர்கள் வெறும் செக்கு மாடுகள். உண்ண உணவு கொடுத்தால் போதும், அடிமைகள் போல உழைக்கிறார்கள். அவர்கள் உள்ளே இருக்கும் அந்த நெருப்பு, ஜீவசக்தி முழுதும் அணைந்து விட்டது. அதனால் தான் நிலவின் ஆதிக்கம் அசைக்க முடியாததாக இருக்கிறது. அவர்களிலிருந்து நீங்கள் வேறுபட்டு இருக்கிறீர்கள். உங்களுக்குள் வயிற்றுப் பசியையும் தாண்டி ஒரு பசி இருக்கிறது. ஒருவனுக்கு தொழில்நுட்ப அறிவு பற்றிய பசி, மற்ற மூவருக்கும் புத்தகம் மூலம் கிடைக்கும் உலக அறிவு பற்றி பசி.  உங்களைப் பார்த்ததும் பூமியின் எதிர்காலம் பற்றி எனக்கு ஒரு புது நம்பிக்கை வந்திருக்கிறது."

நீரோ - " எங்களை நீங்கள் மிக அதிகமாகப் புகழ்கிறீர்கள்."

ராஜ் - "உங்களைப் புகழ்வது மட்டும் எனது நோக்கமல்ல. உங்களை வைத்து சில திட்டங்கள் நான் தீட்டியிருக்கிறேன்."

நீரோ - "என்ன திட்டம் அது?"

ராஜ் - "பூமி ஏன் நிலவின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடக் கூடாது?"

நீரோ - "நம்மிடம் என்ன இருக்கிறது. ஆள் பலம், ஆயுத பலம், அறிவு பலம் இவை எல்லாவற்றிலும் நிலவுக்கு எதிராக நாம் வெறும் ஒரு சிற்றெரும்பு போலத்தான்."

ராஜ் - "சிற்றெரும்பு யானையின் காதுக்குள் புகுந்த கதை உனக்குத் தெரியுமல்லவா. யாரையுமே குறைத்து எடை போட வேண்டாம்."

நீரோ - "சரி திட்டம் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்."

ராஜ் - "நீங்கள் நால்வரும் நிலவின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட ஒரு இயக்கம் தொடங்க வேண்டும்."

நீரோ - "நாங்கள் நால்வர் மட்டும் என்ன சாதிக்க முடியம்?"

ராஜ் - "உங்கள் நால்வரில் தொடங்கும் இந்த இயக்கம் பூமியில் உள்ள அனைவரையும் இணைக்க வேண்டும். ஒவ்வொருவர் மனத்திலும் விடுதலை உணர்வை நீங்கள் தூண்ட வேண்டும் புரிகிறதா?"

நீரோ - "எங்களால் முடியும் விஷயமா இது?"

மோகன் - "முடியும். நம்மால் கண்டிப்பாக முடியும். நம்பு. நம்பினால் வழி தானாகப் பிறக்கும்."

ராஜ் - "உங்கள் இயக்கத்திற்கு தலைவன் ஒருவன் வேண்டும். யார் தலைவனாக விரும்புகிறீர்கள்"

மோகன் - "ஆஷாவே தலைவி ஆகலாமே?"

ராஜ் - "ஆஷா தலைவி ஆக முடியாது. என்ன இருந்தாலும் ஆஷா நிலவுவாசி. அவள் இயக்கத்தின் பிரதிநிதியாக இருந்தால் மக்கள் அவநம்பிக்கையுடன் பார்ப்பார்கள். சொல்லப் போனால் விடுதலைப் போராட்டத்தில் ஆஷாவின் பங்கு வெறும் ஆலோசனை வழங்குவது மட்டுமே. பூமியின் மைந்தர்களாகிய நீங்கள் தான் இந்த இயக்கத்தை முன்னின்று நடத்த வேண்டும்."

நால்வர் மத்தியிலும் பெரும் அமைதி இருந்தது.

மோகன் - "நீங்கள் கொடுத்த இந்தப் பொறுப்பு எங்களுக்கு பெரும் மலைப்பைத் தருகிறது. யார் தலைவன் என்பதை நீங்களே தேர்ந்தெடுத்து சொல்லுங்கள்"

ராஜ் சற்று யோசித்து - "நல்லது. தலைவனைத் தேர்ந்தேடுப்பதற்கு முன் உங்களைப் பற்றி நான் நன்குப் புரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்." 

சந்திரன் - "எங்களுக்கு இதில் சம்மதம்."

ராஜ் - "மோகன், முதலில் நீ என்னுடன் அறைக்கு வா.  ஆஷா நீயும் என்னுடன் வா."

அறைக்குச் சென்று மூவரும் அமர்ந்தனர்.

ராஜ் - "நீ சரித்திரம் படித்தவன். வரலாற்றில் பல நாடுகள் ஒவ்வொரு வழியில் சுதந்திரம் பெற்றிருக்கிறது. இதில் நீ எந்த வழியைப் பின்பற்றுவாய்".

மோகன் - "அறப் போராட்டம். அதுவே சிறந்த வழி"

ராஜ் - "வன்முறைக்கு இடமே இல்லையா?"

மோகன் - "வன்முறைக்கு சிறிதும் இடமில்லை"

ராஜ் - "எதிரி வன்முறையைப் பின்பற்றி உன் மக்களை நசுக்கினால்?"

மோகன் - "அனைவரும் ஒட்டு மொத்தமாக உயிரை விடுவோமே ஒழிய, எங்கள் பக்கத்திலிருந்து வன்முறைப் பிரயோகம் சிறிதுமிருக்காது".

ராஜ் - "உன் அறப் போராட்டத்தைப் பற்றி கொஞ்சம் விளக்கு."

மோகன் - "முதலில் எதிரியுடன் பேச்சு வார்த்தை. அது வெற்றி பெறாவிட்டால் ஒத்துழையாமை".

ராஜ் - "நல்லது, நீ வெளியே சென்று நீரோவை அனுப்பு."

நீரோ உள்ளே நுழைந்ததும் அவனிடம் அதே கேள்வியைக் கேட்டார்.

நீரோ - "என் வழி எதிரியுடன் பேச்சுவார்த்தை. வன்முறைக்கு சிறிதும் இடமில்லை."

ராஜ் - "வெறும் பேச்சுவார்த்தை மூலம் மட்டும் உன் எதிரியை சம்மதிக்க வைக்க முடியுமா?"

நீரோ - "முடியும். மனிதர்கள்  அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள்.சரியான சமயத்தில், சரியான வார்த்தைகள் சரியான விதத்தில் சொல்லப்பட்டால் நிச்சயம் பலனுண்டு. அந்தத் திறமை எனக்கு இருக்கிறது என்றும் நம்பிக்கை உள்ளது."ராஜ் - "நீ போகலாம். அடுத்து சந்திரனை அனுப்பு."

சந்திரன் தன் வழிமுறைகளைப் பற்றி ராஜிடம் விளக்கினான்.

சந்திரன் - "புரட்சி. ஆயுதப் புரட்சி ஒன்றே வழி, எதிரியின் வலிமையை வலிமையால் தான் அடிக்க வேண்டும்."

ராஜ் - "சுதந்திரம் அடைந்தப் பிறகு எப்படிப் பட்ட அரசாங்கம் பூமிக்கு நல்லது."

சந்திரன் - "ஜனநாயகம் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல இதயம் கொண்ட அதே நேரம் இரும்புக் கரம் கொண்ட ஒரு தலைவன் தான் பூமிக்குத் தேவை."

ராஜ் - "சரி. நீ அடுத்து வல்லபை அனுப்பு".

வல்லப் - "போராட்டத்திற்கு இந்த வழி என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன். முதலில் பேச்சுவார்த்தை. பிறகு மிரட்டல். பிறகு அறப்போராட்டம். இது எதுவும் ஒத்து வரவில்லையென்றால் ஆயுதப்போராட்டம். அதுவும் உயிர்ச்சேதம் அதிகம் இல்லாமல் அதே சமயம் அதிகத் தாக்கமுள்ள போர் முறையைத் தேர், தேர் , தேர்ந்".

வல்லபுக்கு வாய் திக்கியது.

ராஜ் - "உனக்குத் திக்கும் என்பது தெரியாது".

வல்லப் - "உணர்ச்சி வசப்படும் போது இப்படி ஆகி விடுகிறது".

ராஜ் - "சரி நீ போகலாம்".

வல்லப் வெளியேறியதும் ஆஷா - "சொல்லுங்கள். யார் தலைவன்?"

ராஜ் - "நீரோ, கனவுலகில் மிதப்பவன். வெறும் பேசி எதிரியை சம்மதிக்க முடியும் என்று நம்புகிறான். அது நடைமுறைக்கு ஒத்து வராது.சந்திரன், போராட்ட குணமுள்ளவன். ஆனால் வன்முறையைப் பின்பற்றுபவன். அது அவன் தலைவனாவதற்கு பெருந்தடையாக உள்ளது.   மோகன், நல்ல தலைவனாகலாம். அவன் அறப்போராட்ட வழி சரித்திரத்தில் வெற்றியும் கண்டிருக்கிறது, தோல்வியும் கண்டிருக்கிறது. வல்லப் வழிமுறை தான் சிறந்தது. அவன் நல்ல சமயோசித புத்தியுள்ளவனாக இருக்கலாம். அவனே தலைவன் என்று கூறியிருப்பேன். அவனிடம் இருக்கும் ஒரே குறை அவன் திக்குவாய். ஒரு தலைவனுக்கு பேச்சுத்திறன் என்பது எவ்வளவு முக்கியம்.இந்த ஒரு காரணம் அவனைத் தகுதியில்லாதவனாய் ஆக்குகிறது".

ஆஷா - "குழப்புகிறீர்கள் தாத்தா. கடைசியில் யார் தலைவன்."

ராஜ் - "மோகன் தான் தலைவன். வா வெளியே சென்று அவர்களிடம் இதைத் தெரிவிக்கலாம்."

வெளியே வந்த அவர்களை நால்வரும் ஆவலுடன் நோக்கினர்.

ராஜ் - "உங்கள் தலைவன் மோகன். மோகன் தலைவன் என்றாலும் எந்த விஷயத்தையும் நால்வரும் சேர்ந்து விவாதித்து ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும். வல்லபை உதவித்தலைவனாக நியமிக்கிறேன்.நீரோ கொள்கைபரப்புச் செயலாளன். சந்திரன், நீ அனைவருக்கும் எந்த உதவி தேவைபடுகிறதோ அதை செய்யலாம்."

மோகனுக்கு வல்லபும் நீரோவும் கை குலுக்கினர்.

சந்திரன் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது. 

அடுத்த நாள் காலை சந்திரன் காணவில்லை.



---(4)---
நாள் முழுதும், தீவெங்கும் தேடியும் சந்திரன் கிடைக்கவில்லை.

மோகன் - "சந்திரனுடன் பத்து வருட காலம் நட்பாக இருந்தேன். அவனைப் பிரிவது வேதனையாக இருக்கிறது."

ஆஷா - "அவன் பிரிந்து சென்ற காரணம் என்னவாக இருக்கும்?"

வல்லப் - "தனக்குத் தலைமைப் பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தினால் இருக்குமோ?"

மோகன் - "இல்லை, சந்திரன் பதவி வெறி பிடித்தவன் கிடையாது. என் சித்தாந்தம் வேறு. அவன் சித்தாந்தம் வேறு. என் தலைமையில் முழு மனதுடன் ஈடுபட முடியாது என்ற காரணத்தினால் பிரிந்திருக்கலாம்."

ராஜ் - "நீங்கள் மூவரும் இந்தியா செல்லும் நேரம் வந்து விட்டது. மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டுங்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்."

நீரோ - "அப்படியானால் நீங்கள் இருவரும் எங்களுடன் வரவில்லையா?"

ஆஷா - "இல்லை. தாத்தாவினால் பிரயாணம் முடியாது. அவர் உடல்நிலை இன்னும் முழுதும் சரியாகவில்லை. நான் அருகிலிருந்து அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்"

மூவரும் விடைபெற்றுக் கொண்டு படகில் சென்றனர்.

அவர்கள் கடலில் மறையும் வரை ஆஷாவும் ராஜும் கரையில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.

                                                                       ---------*******-----------

படகில் அமர்ந்திருந்த மூவர் மத்தியில் மௌனம் நிலவியது. ஆஷாவைப் பிரிந்த ஏக்கம் நீரோவின் கண்களில் தெரிந்தது.

மோகன் - "நாம் ஏற்றுக் கொண்ட பொறுப்பு எனக்கு மலைப்பைத் தருகிறது. எப்படித் தொடங்குவது என்றும் தெரியவில்லை. எப்படி முடியும் என்பதிலும் தெளிவில்லை."

நீரோ - "மக்களுடன் நாம் பேச வேண்டும். பேச்சின் மூலம் அவர்கள் ஆன்மாவைத் தொட வேண்டும்."

வல்லப் - "எனக்கென்னவோ வெறும் பேச்சினால் சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை. நம் மக்கள் உயிரற்ற ஜடம் போலத் தான் இருக்கிறார்கள். ஒரு வேலை உணவுக் கிடைத்தால் போதும் என்றிருப்பவர்களுக்கு எப்படி சுதந்திர வேட்கையைத் தூண்டுவது."

மோகன் - "நீரோ சொல்வதில் உண்மை இருக்கிறது. சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால் பெருந் தலைவர்கள் தங்கள் பேச்சின் மூலம் தான் மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நீரோ நீ நல்ல பேச்சுத் திறமை உள்ளவன். அதனால் உன்னைத் தான் நான் மிகவும் நம்பியிருக்கிறேன்."

வல்லப் - "இவன் பேசிக் கிழித்து விடுவது போலத்தான்."

மோகன் - "நம் முயற்சி வெற்றி அடைய வேண்டுமானால் நீங்கள் இருவரும் இப்படி அடித்துக் கொள்ளக் கூடாது. உங்கள் இருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருப்பதில் தவறில்லை. வித்தியாசமான சிந்தனை உள்ளவர்கள் இணைந்து ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, அவ்வேளை சிறப்பாக அமைந்து வெற்றி பெறுகிறது. ஆனால் கருத்து வேறுபாடு உங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தக் கூடாது."

நீரோவும் வல்லபும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.

மோகன் - "நீங்கள் இருவரும் எனக்கு ஒரு சத்தியம் செய்யுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் இறுதி வரை நீங்கள் பிரியக் கூடாது. ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருக்க வேண்டும். இந்த சத்தியம் நீங்கள் எனக்கு செய்ய வேண்டும்."

மோகன் தன் கையை நீட்ட மற்ற இருவரும் அக்கையைப் பற்றினர்.

அடுத்த நாள் அவர்கள் தங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

                                                                       ---------*******-----------

ஒரு மாதம் கழிந்திருந்தது. புத்தகத் திருடர்கள் மூவரும் விரக்தியில் இருந்தனர். அவர்கள் மக்கள் மத்தியில் விடுதலை வேட்கையைத் தூண்ட எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி அடையவில்லை. சேரிப்பகுதி மக்கள் மத்தியில் உணர்ச்சி பூர்வமாகப் பேசிப் பார்த்தும் எந்தப் பலனுமில்லை. மக்கள் அவரகள் மூவரையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தங்கள் குடிசையில் அமர்ந்து மூவரும் கலந்தாலோசித்தனர்.

மோகன் - "மூன்று வேலை உணவு, பொழுதுபோக்கிற்கு புத்தகங்கள் என்று இருந்த நாம் ஏன் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்? நம் முயற்சிகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வரலாமா என்று யோசிக்கிறேன். ஆஷாவின் தாத்தா மனம் சங்கடப்படக்கூடாது என்கிற ஒரே காரணத்திற்காகத் தான் தயங்குகிறேன்."

வல்லப் - "நம் முயற்சிகளை நாம் எக்காரணத்தைக் கொண்டும் கை விடக்கூடாது. மக்களைத் தனித் தனியாக சந்தித்துப் பேசுவதில் பலனில்லை. நாம் இன்று சுரங்கத்திற்கே சென்று மக்களைக் கூட்டமாக சந்தித்துப் பேசிப் பார்க்க வேண்டும்"

மூவரும் சுரங்கத்திற்குச் சென்று அங்கிருந்த உணவு விடுதியில் மக்களிடம் பேசினர். அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவன் தன் செருப்பை மோகன் மீதெறிந்தான். இன்னொருவன் தன் உணவுத்தட்டை நீரோ மீதெறிந்தான்.

மூவரும் வெறுப்புடன் அங்கிருந்துக் கிளம்பினர். ஓரிடத்தில் ஒரு பெண் தன் 6 வயதுக் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தாள். அந்த சிறுவன் சுரங்கத்தில் வேலை பார்ப்பவன். சுரங்கத்தின் கடுமை தாங்காமல் இறந்திருந்தான். சிறுவனையும் அவன் தாயாரையும் யாரும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை.

அப்போது நீரோ எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

அந்த சிறுவனைத் தன் கைகளிலேந்தி விடுதிக்குச் சென்றான்.

"இந்த சுரங்கத்தில் வேலை செய்யும் வயசா இந்த சிறுவனுக்கு. ஒடியாடும் வயது இவனுக்கு. கல்வி கற்கும் வயது இவனுக்கு. நம் நிலவில் ஒரு குழந்தைக்காவது விளையாட்டும், கல்வியும் கிடைக்கிறதா? இந்த சிறுவன் இறந்ததற்கு யார் காரணம். நிலவுவாசிகளா.இல்லை. நாம் தான். நம் அவல நிலையைப் பற்றிக் கொஞ்சம் கூட சுரணையே இல்லாமல் இருக்கிறோமே, நாம் தான் காரணம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காத நாம் தான் காரணம்.நாம் அனைவரும் சேர்ந்து இந்தக் குழந்தையைக் கொன்றிருக்கிறோம்."

அந்த சிறுவனின் தாய் நீரோ அருகில் நின்று, "நான் என் குழந்தையைக் கொன்றேன். ஆம் நான் என் குழந்தையைக் கொன்றேன்" என்று கதறினாள்.

மக்கள் அனைவரும், "உண்மை! உண்மை! நீரோ சொல்வது அனைத்தும் உண்மை" என்று குரல்கள் எழுந்தது.

நீரோ மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தான்.

"இந்த பூமி என்னும் நமது மண் எவ்வளவு புனிதமானது. இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் தோன்றிய முதல் கிரகம் பூமியாகும். அறிவாற்றல் நிறைந்த மனித இனம் முதலில் தோன்றிய கிரகம் பூமியாகும். இங்கு நம் மூதாதையர்கள் எவ்வளவு உயர்ந்த நாகரிகத்துடன், அறிவியல் வளர்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அப்படிப்பட்ட கிரகத்துக்கு ஒரு கெட்ட நேரம் வந்த போது, நமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த சிலர் இதை விட்டு ஓடினர். இந்த மண்ணின் மீது நேசம் கொண்ட சிலர் உயிரே போனாலும் செல்ல மறுத்தனர். அப்படிப்பட்டவர்கள் வழியில் தோன்றிய நாம் துரோகிகளுக்கு அடிமையாக வாழ வேண்டுமா. ஒரு வேலை உணவு கொடுத்து நம்மை அடிமை போல நடத்தும் இவர்களைக் கேள்வி கேட்க வேண்டாமா? நமக்கு விடுதலை வேண்டாமா?"

நீரோவின் பேச்சைக் கேட்டதும் கூட்டம் முழுதும் "வேண்டும்! வேண்டும்! விடுதலை வேண்டும்!" என்று உற்சாகமாகக் கத்தியது.

அடுத்து மோகன் பேச வந்தான்.

"நாம் நிலவுவாசிகளின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவோம். ஆனால் அற வழியில் போராடுவோம். வன்முறைக்கு சிறிதும் இடமில்லை. நம்மை நோக்கி எதிரிகள் ரோபோ காவலர்களை ஏவுவார்கள். நம் உயிரை எடுப்பார்கள்.ஆனால் இரத்தமே சிந்தினாலும் அற வழியில் தான் நம் போராட்டம். எதிரி நம்மை விட பலமுடையவனாக இருக்கலாம். ஆனால் நீதி நமது பக்கம். அது எதிரியை நம்மிடம் பணியச் செய்யும்."

கூட்டம் மறுபடியும் உற்சாகமாகக் கத்தியது.

மோகன் வல்லபை பேச அழைத்தான்.

"நமது தலைவர் மோகன். மோகன் வாழ்க" என்று மட்டும் கூறி நகர்ந்தான்.

கூட்டம் "மோகன் வாழ்க! நீரோ வாழ்க! வல்லப் வாழ்க! மோகன் தலைவன்!" என்று கத்தியது.

மூவரும் இறந்தக் குழந்தையை சேரியில் புதைப்பதற்காக எடுத்துச் சென்றனர். மக்கள் அவர்களைப் பின் தொடர்ந்துச் சென்றனர். "வேண்டும்! விடுதலை வேண்டும்! என்று கத்தியவண்ணம் தங்கள் வேலையைக் கைவிட்டு சுரங்கத்தை விட்டு அனைவரும் வெளியேறினர்.                                                                              

                                                                       ---------*******-----------

பூமியின் கவர்னர் முகேஷ், நிலவு அதிபரின் வலது கரம் போல இருந்து வந்தான். அவர்கள் இருவரும் பூமியில் வசித்த காலந்தொட்டே நெருக்கமாக இருந்தனர். இருவரும் ஒரே கல்லூரியில் மேற்படிப்புப் படித்து ராணுவத்தில் சேர்ந்தனர். ஒரே படைப்பிரிவில் இருவரும் பணியாற்றினார். நிலவுக்கு வந்தப் பிறகு ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற திட்டத்தை விக்ரமிடம் சொன்னதே முகேஷ் தான்.அதன் பிறகு நடந்தது சரித்திரத்தில் இடம் பெறுவதாக அமைந்தது. பூமி மற்றும் நிலவு இரண்டின் தலை எழுத்தே அவர்களால் மாறியது. நிலவின் ஆரம்பகட்டத்து தலைவர்கள் மற்றும் மக்கள் பூமியின் மீது பரிதாபமான எண்ணமே கொண்டிருந்தார்கள். அதை முற்றிலும் மாற்றியது அவர்கள் இருவரின் திட்டங்களே. நிலவுவாசிகள் சுபிட்சமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு பூமியிலிருப்பவர்களின் கையலாகாதனத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே முடியும் என்பதில் விக்ரம் தெளிவாக இருந்தான். விக்ரம் தீட்டிய திட்டங்களுக்கு உயிர் வடிவம் கொடுத்தது முகேஷ். பூமி மக்களை அடிமைகளாக மாற்றியது இரும்புக் கரம் போன்ற தனது உறுதி தான் என்பதில் அவனுக்குப் பெருமிதம் உண்டு. ஆனால் முதன் முறையாக  மூன்று பேர் தனக்கு சவாலாக உருவெடுத்திருக்கின்றனர்.     

"எங்கிருந்து முளைத்தார்கள் இந்த மூன்று பேர்? பத்து வருடமாக இல்லாத தைரியம் புதிதாக எப்படி வந்தது?"

நிலவினால் பூமியின் கவர்னராக நியமிக்கப்பட்ட முகேஷ் வர்மா கடுங்கோபத்தில் இருப்பது அறிந்து அவரது கேபினட் மந்திரிகள் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

"ஏன் பேசாமல் ஊமையாக இருக்கிறீர்கள். இவர்கள் பற்றி முழு விபரம் யாருக்காவது தெரியுமா?"

"இவர்கள் தமிழ் பிரதேசத்தில் வாழ்பவர்கள். சிறு சிறு திருட்டு வேலை செய்யும் தற்குறிகளாகத் தான் முதலில் இருந்தனர். திட்டமிட்டு இப்படி முனைப்புடன் செயல்படும் துணிவு எப்படி வந்தது என்று தெரியவில்லை."

"தென் தமிழகத்தின் மக்களிடேயே ஆரம்பத்தில் இவர்களுக்கு இருந்த ஆதரவு இப்போது இந்தியா முழுதும் பரவி விட்டது. இந்தியாவிலிருக்கும் 1 கோடி மக்கள் அனைவரும் இப்போது இவர்கள் பெயரைத் தான் மந்திரம் போல் உச்சரிக்கிறார்கள். இரண்டே மாதத்தில் எப்படி இதை நிகழ்த்தினார்கள் என்று புரியவில்லை."

"நமது ரோபோ காவலர்களைக் கொண்டு இவர்களை புழுவை நசுக்குவது போல நசுக்கி விடலாம் என்று முதலிலேயே கூறினேன். நீங்கள் அமைதி காக்கச் சொன்னதால் இவ்வளவு வளர்ந்து விட்டார்கள்."

"இல்லை. அப்படி இந்தப் பிரச்சினையை அணுக முடியாது. இவர்கள் போராட்டத்திற்கு வன்முறை வழியைப் பின்பற்றவில்லை. மாறாக அறப்போராடமே எங்கள் வழி என்று  கூறுகிறார்கள். அப்படியிருக்க நாம் வன்முறையை அவர்கள் மீது பிரயோகித்தால் அம்பு நம் மீது திரும்பப் பாயும். இவர்கள் இறந்தாலும் இவர்களைப் போல பலர் முளைப்பார்கள். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். இவர்களிடம் நான் பேச விரும்புகிறேன் என்று கூறுங்கள். நாளை டெல்லி வந்து என்னை சந்திக்கச் சொல்லுங்கள்".

                                                                          ---------*******-----------

கவர்னர் முகேஷ் தன் முன் உட்கார்ந்திருந்த அந்த மூன்று பேரை கண்களால் அளவெடுத்தார்.

மூவரும் அமைதியாக இருப்பதைக் கண்டு தானே முதலில் பேசினார்.

"விமானப் பிரயாணம் சௌகரியமாக இருந்ததா?"

நீரோ - "நல்ல சௌகரியமாக இருந்தது நன்றி."

கவர்னர் - "இது வரை விமானத்தில் பறப்பது என்ற உரிமை நிலவுவாசிகளுக்கு மட்டுமே இருந்தது. முதன் முதலில் உங்களுக்கு நான் அளித்தேன். நீங்கள் உண்மையிலேயே ஸ்பெஷல்."

மோகன் - "நாம் விஷயத்திற்கு வருவோமா."

கவர்னர் - "வரலாம். வரலாம். பொறு இளைஞனே. உனக்கு மிகவும் அவசரம். சிறு வயதிலேயே தலைவன், ஆட்சி அதிகாரம் எல்லாம் கேட்கிறது அல்லவா. உங்கள் மூவரின் பின்புலம் பற்றி விசாரித்தேன். நீங்கள் திருடர்களாமே?"

நீரோ - "நடந்து முடிந்தது பற்றி தேவையில்லாமல் என்ன பேச்சு."

கவர்னர் - "கோபம் வேண்டாம் இளைஞனே. சொல்லப் போனால் நாங்கள் கூடத் திருடர்கள் தான். உங்களை விடப் பெரிய திருடர்கள். உங்கள் சொத்தை திருடிக்கொண்டு நிலவுக்கு எடுத்துச் செல்கிறோம். இந்தப் பேச்சு வார்த்தை இரண்டு திருட்டுக் கும்பல்களுக்கிடேயே நடக்கும் பேச்சு வார்த்தை. திருடிய சொத்தை எப்படி பங்கு பிரிப்பது என்பது பற்றி இனி நாம் பேசலாம், சரியா?"

வல்லப் - "நீ ஒரு முட்டாள். மனிதர்களை எடை போடத் தெரியாத நீ இந்தப் பதவியில் அமர்ந்து என்ன பிரயோஜனம்.  எங்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் ஒன்றும் வேண்டாம். எங்களுக்குத் தேவை மக்களுக்கு முழு விடுதலை. எங்கள் சுரங்கங்கள், எங்கள் பூமியின் வளத்திற்கு முழு உரிமை வேண்டும். நிலவுவாசிகள் அனைவரும் பூமியை விட்டு உடனே செல்ல வேண்டும்".

கவர்னர் - "உயர்ந்த குறிக்கோள்! உங்கள் மூவருக்கும் மிக உயர்ந்த குறிக்கோள். ஆனால் இந்தக் காலத்தில் அது எங்கு எடுபடும். நான் சொல்வதைக் கேளுங்கள் உங்கள் மூவருக்கும் என் கேபினெட்டில் பதவி தருகிறேன். மாளிகை போன்ற வீடு, கூப்பிட்ட குரலுக்கு வரும் ரோபோ வேலைக்கார்கள், நல்ல பணம், நல்ல வசதி. இது அனைத்தும் தருகிறேன். ஆனால் உங்கள் மூவருக்கு மட்டும் தான். இந்த விடுதலை, உரிமை என்று பேசி உங்கள் மக்களை உசுப்பேற்றுவதை இப்போதே விடுங்கள்".

மோகன் - "கவர்னர், உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கும் என்று நினைத்து இங்கே வந்தோம். நீ ஒரு வியாபாரி, இல்லை நீயே சொன்னது போல ஒரு திருடன். பெரிய திருடன். இனி பேசி எந்தப் புண்ணியமும் இல்லை. நாங்கள் கிளம்புகிறோம்"

கவர்னர் - "எங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது. உன் ஆட்கள் ஒருவர் கூட உயிருடன் இல்லாமலிருக்கச் செய்ய என்னால் முடியும்."

மோகன் - "அதையும் பார்ப்போம். வருகிறோம்."

அவர்கள் சென்ற பின் கவர்னர் கோபத்தில் தன் மேஜையிலிருந்த பொருட்களைத் தூக்கி எறிந்தான்.

---------*******-----------

தங்கள் குடிசையில் மூன்று பேரும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

நீரோ - "கவர்னர் இப்படிப் பேசுவான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.  நமது மக்களுக்கு கொஞ்சமாவது உரிமைகள் பெற்றுத் தரலாம் என்று நம்பிக்கையோடு இருந்தேன்."

வல்லப் - "நமது மக்களை இனியும் பொறுமையாக இருக்க வைக்க முடியாது. எப்போது பொங்கி எழுவார்கள் என்று சொல்ல முடியாது."

மோகன் - "எக்கணத்திலும் நம் மக்கள் வன்முறை பக்கம் மட்டும் சென்று விடாமல் பார்த்துக் கொள்வது நம் மூவரின் கடமை."

வல்லப் - "இவ்வளவு பிடிவாதமான அணுகுமுறை கூடாது மோகன். சமயத்தில் வளைந்து கொடுக்க வேண்டும்".

நீரோ - "அடுத்து என்ன செய்வது என்று ஏதாவது உன்னிடம் திட்டமுள்ளதா மோகன்?"

மோகன் - "அடுத்த நடவடிக்கை ஒத்துழையாமை. நமது மக்கள் அனைவரும் இனி சுரங்கங்களில் வேலை செய்யக் கூடாது."

வல்லப் - "இது எடுபடாது. பதிலுக்கு கவர்னர் ரேஷனில் உணவளிப்பதை நிறுத்தி விடுவான்."

மோகன் - "ஆம். அது எனக்குத் தெரியும். பூமி முழுதும் மக்கள் உணவைத் தியாகம் செய்ய வேண்டும். நம் உரிமைகள் கிடைக்கும் வரை பசியுடன் இருப்போம்."

நீரோ - "நல்ல யோசனை. சுரங்கங்கள் வேலை செய்யவில்லை என்றால் நிலவுவாசிகளின் கதி அதோ கதி தான்."

மோகன் - "ஆம் நீரோ! நம் மூவரில் சிறந்த பேச்சாளன் நீ தான்.உன் பேச்சுக்கு மக்களிடேயே நல்ல வரவேற்பு இருக்கிறது. நீ போகுமிடமெல்லாம் மக்கள் உன்னைக் கொண்டாடுகிறார்கள். நீ தான் நாடு முழுதும் சொற்பொழிவாற்றி மக்கள்ஆதரவைப் பெற வேண்டும். வல்லப், நீ நல்ல நிர்வாகி. நம் நோக்கத்தை செயல்படுத்தும் திட்டங்கள் நீ தான் தீட்ட வேண்டும். இனி நாம் உறங்கச் செல்லலாம்."

நீரோ உற்சாகத்துடன் தன் குடிசைக்குச் சென்றான். வல்லபுக்கு முழு திருப்தி இல்லையென்பதை அவன் முகம் தெளிவாகக் காட்டியது.

---------*******-----------

மோகன், வல்லப் மற்றும் நீரோ குடிசையில் படுத்திருந்தனர். வெளியே மக்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். நாட்டு (பூமி) மக்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்து இரு வாரங்கள் கழிந்திருந்தது.

சுரங்கங்கள் எதுவும் இயங்கவில்லை. நிலவெங்கும் மின்சாரத் தட்டுப்பாடு, அத்தியாவசியமான மற்ற பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஹாட்லைனில் நிலவின் அதிபர் விக்ரம் பாண்டே அழைக்க கவர்னர் மறுமுனைக்கு வந்தார்.

"என்ன நடக்கிறது முகேஷ். இங்கு இரு வாரமாக மின்சாரம் இல்லை. எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. இதற்கு முழு பொறுப்பு நீங்கள் தான் ஏற்க வேண்டும். நீங்கள் நிலைமையை சரி வர சமாளிக்கவில்லை.  உங்களுக்கு அங்கு என்ன தான் பிரச்சினை."

"இங்கு மக்கள் சுரங்கங்களில் வேலை செய்ய வரவில்லை. நான் ரேஷனில் உணவு சப்ளையையும் நிறுத்திப் பார்த்தேன். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். மும்பை நகரில் இரண்டு சேரிகளில் வசிக்கும் மக்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றோம்.5000 மக்கள் இறந்தார்கள். ஆனால் அவர்கள் எதற்கும் அசைந்துக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்."

"எப்படி மக்களுக்கு இந்தத் தைரியம் வந்தது."

"மூன்று இளைஞர்கள். அவர்கள் தூண்டித்தான் இதெல்லாம் நடக்கிறது".

"அவர்களைக் கொன்று குப்பையில் எறிய வேண்டியது தானே."

"அதுவும் யோசித்தேன். இப்போது மக்கள் நம் மீது வன்முறையில் இறங்காமலிருக்கக் காரணம் இவர்கள் தலைவன் மோகன் தான். இவர்கள் இறந்தால் பூமியின் 1 கோடி மக்களும் நம் மீது பாய்வார்கள். ரோபோ காவலர்கள் ஒரு கோடி மக்கள் முன் போராட முடியுமா?"

"சரி நான் ஒரு யோசனை சொல்கிறேன். பூமியிலிருக்கும் ரோபோக்கள் அனைவரையும் சுரங்கங்களில் வேலை செய்ய ஏவுங்கள்.  மக்கள் பசியை எவ்வளவு நாள் தாங்குவார்கள், ஒரு வாரம், சரி ஒரு மாதம், அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியுமா. காலம் முழுதும் பசியுடன் தான் இருக்க வேண்டும் என்ற பயம் வந்தால் மக்கள் தாமே வழிக்கு வருவார்கள்".

"நல்ல யோசனை அப்படியே செய்கிறேன்".

                                                                    ---------*******-----------

பூமி முழுதுமிருந்த சுரங்கங்களில் ரோபோக்கள் வேலை செய்ய ஆரம்பித்தன.

மக்களுக்கு இப்போது பயம் வந்து விட்டது. கவர்னரின் மாளிகை முன் அமர்ந்து தங்கள் போராட்டத்தைக் கை விடுவதாகக் கூறினர். மீண்டும் தங்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளக் கெஞ்சினர்.

ஆனால் கவர்னர் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. மக்களை மீண்டும் மூவர் தூண்டும் சாத்தியக்கூறு இருப்பதால் தான் எதுவும் செய்ய இயலாது என்று கூறினார்.

மக்களின் பயம் இப்போது மூவர் மீது கோபமாகத் திரும்பியது.

வல்லப், நீரோவுக்கு இது பேரும் அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினர். ஆனால் மோகன் சிறிதும் தளரவில்லை. தன் உண்ணாவிரதத்தைக் கை விடவுமில்லை.

மூவரும் கலந்தாலோசித்தனர். வல்லப், நீரோ டெல்லி சென்று கவர்னருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவானது. இருவரும் மோகனிடம் விடை பெற்றுக் கொண்டுக் கிளம்பினர்.

மோகன் குடிசையில் தனியாக இருந்த போது அந்த துர்ச்சம்பவம் நடந்தது.

மக்கள் கூட்டமாக மோகனின் குடிசையை சூழ்ந்துக் கொண்டனர். உள்ளே புகுந்து மோகனை அடித்து துவைத்தனர்.

"நாயே. எல்லாம் உன்னால் தான். உன்னால் தான் எங்கள் குழந்தைகள் பசியில் இறக்கிறார்கள்", என்று கத்தியபடி அவனை தீக்கு இரையாக்கினர்.

இறுதி வரை தன் கொள்கையிலிருந்து சிறிதும் அசைந்துக் கொடுக்காத மோகனின் உயிர் பிரிந்தது.


                                         ---------------------*********------------------------



ஒரு சிறிய விண்கலத்தில் சென்றுக் கொண்டிருந்த சந்திரன் முகத்தில் உறுதியும், பார்வையில் ஒரு தீர்க்கமும் தெரிந்தது.

"தவறு செய்து விட்டீர்கள் ராஜ் குமார். புரட்சி! ஆயதப் புரட்சி! அதுதான் பூமியின் எதிர்காலம். பூமியில் புரட்சியை விதைப்பேன். அதன் ஏற்பாடுகளை நிலவிலிருந்து ஆரம்பிப்பேன்.  நிலா HERE I COME! "

---(6)---                                                                                
நிலவு
ஆஷா தனது பெற்றோரின் சமாதி முன் மெளனமாக அம்ரந்திருந்தாள். சற்று தொலைவில் பிரேம் நின்றுக் கொண்டிருந்தான்.

"ஆஷா நேரமாகிறது, யாரும் சந்தேகப்படுவதற்கு முன் சீக்கிரம் இங்கிருந்து கிளம்பலாம்".

"என் பெற்றோர் இறந்தப் பிறகு அவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் கூட என்னால் செய்ய முடியாமல் போய் விட்டது. அனைத்துப் பொறுப்புகளும் நீ தான் செய்ய வேண்டியிருந்தது."

"அதனால் என்ன. உனக்கு இது கூட நான் செய்ய மாட்டேனா?"

"இப்போது நான் எங்கு தங்குவது?"

"உன்னை அரசாங்கம் வலை விரித்துத் தேடி வருகிறார்கள். என் வீட்டின் தோட்டத்தில் ஒரு அண்டர்கிரவுண்ட் பங்கர் இருக்கிறது. என் அப்பாவும் அரசாங்கத்திற்கு எதிராக இருந்ததால் உயிருக்கு ஆபத்து என்று கருதி இதை அமைத்திருந்தார். நீ அங்கு ஒளிந்துக் கொள்ளலாம். யாரும் கண்டு பிடிக்க மாட்டார்கள். அடுத்து உன் திட்டம் என்ன?"

"நான் பூமியிலிருந்தப் போது இங்கு என்ன நடந்தது?"

"உன் அப்பாவின் மரணத்தைக் காரணம் காட்டி தேர்தலை அதிபர் விக்ரம் பாண்டே 2 மாதங்கள் ஒத்தி வைத்தான். பூமிக்கு சுதந்திரம் கிடைத்தப், பிறகு கனிமங்கள் கிடைக்காதலால் அனைத்துப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு வந்து விட்டது. இதை காரணம் காட்டி விக்ரம் மக்களின் கோபத்தை பூமி மீது திருப்பி விட்டான். வெகு விரைவில் பூமி மீது போர் நடக்கும் என்று பேச்சு பரவலாக இருக்கிறது. விக்ரமுக்கு மக்கள் ஆதரவும் பெருகி விட்டது. தேர்தலில் அவனுக்கு எதிராக சரியான போட்டியும் இல்லை. அவன் வெற்றி உறுதி ஆனது போலத் தான்."

"மக்களுக்கு உண்மை சரிவரத் தெரியவில்லை. பூமி அனுபவித்து வந்த அடிமை வாழ்க்கைப் பற்றி இங்கு சரியான தகவல்கள் இல்லை. பொய் பிரச்சாரம் மூலம் விக்ரம் இதை மூடி மறைத்து விட்டான். பூமி மக்களுக்கு நிலவு உணவுப்பொருட்கள் கொடுத்தாலும் அவர்களுக்கு நன்றி சிறிதும் இல்லை என்ற எண்ணம் தான் நிலவு மக்களிடையே இருக்கிறது. இதை முதலில் மாற்ற வேண்டும்."

"எப்படி."

"தேர்தலில் நான் நிற்கப் போகிறேன்."

"விக்ரம் உன்னையும் கொன்று விடுவான்."

"தெரியும். நான் மக்களிடேயே நேரடியாக சென்று பிரச்சாரம் செய்ய மாட்டேன். எல்லாம் இந்த பங்கரிலிருந்து நடக்கும். தேர்தல் கமிஷனிடம் என் பெயரைப் பதிவு செய்வதற்கு மட்டும் வெளியேறுவேன். அது முதல் தேர்தல் முடியும் வரை இங்கிருந்து தான் தேர்தல் வேலை நடக்கும்."

"இங்கிருந்து நாம் என்ன செய்ய முடியும்?"

"எல்லா டிவி சேனல்களிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நமது பிரச்சார விடியோ வரும்படி செய்ய வேண்டும்."

"விக்ரமுக்கு எதிராக செயல்பட எல்லா சேனல்களும் பயப்படுவார்கள்."

"தெரியும். முக்கியமான சேனல்கள் என்ன அலைவரிசையில் இயங்குகிறதோ, அதே அலைவரிசைகளில் நமது பிரச்சார விடியோக்காளையும் ஒளிபரப்ப வேண்டும். புரிகிறதா?"

"புரிகிறது.நாம் வெற்றி பெறுவது கடினம் தான். ஆனால் இதை விட்டால் வேறு வழி எதுவுமில்லை."

                                                                   பூமி
வல்லப் - "நமது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது, நீரோ. ரேஷனில் அளிக்கப்படும் உணவு ஒரு மாதத்திற்கு மேல் தாங்காது. அதன் பிறகு நாம் என்ன செய்வதென முடிவெடுக்க வேண்டும்."

நீரோ - "சென்ற வாரம் மண், நீர், காற்று எதுவுமின்றி தாவரங்கள் வளர்க்கும் ஆராய்ச்சி மையம் ஒன்று ஆரம்பித்தேன் அல்லவா."

வல்லப் - "ஒரு மாதத்திற்குள் இந்த ஆராய்ச்சியின் மூலம் என்ன தீர்வு கிடைத்து விடும்."

நீரோ - "சரி. உன் யோசனை என்ன?"

வல்லப் - "நாம் செவ்வாய் கிரகத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஒப்பந்தப்படி அவர்கள் நமக்கு உணவுப் பொருட்களும், உன் தாவர ஆராய்ச்சிக்கு உதவியும் வழங்க வேண்டும். நாம் அவர்களுக்கு கனிமங்கள் அளிக்கலாம். ஆனால் இலவசமாக இல்லை. அதற்கான சரியான விலையும், தொழில் நுட்ப உதவியும் அளிக்க வேண்டும்.நமது பூமியின் புனர் நிர்மாணத்திற்கு உதவியும் அளிக்க வேண்டும். தற்போது செவ்வாய் கிரகத்தினர் கனிமங்கள் சனி கிரகத்திலிருந்து யானை விலைக்கு இறக்குமதி செய்கின்றனர். அதனால் இந்த நிபந்தனைகளுக்கு கண்டிப்பாக உடன்படுவார்கள். மேலும் தற்போது பூமியில் மனித இனம் இந்தியாவில் மட்டுமே வாழ்ந்து வற்றுகிறது. இருக்கிறது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் யாரும் வாழ முடியாத அளவுக்கு கதிர்கள் இருக்கின்றன. இந்தக் கண்டங்களை கதிர்களிலிருந்து சுத்தப்படுத்தி மக்கள் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும். இதற்கு செவ்வாய் கிரகத்தினரின் உதவி நமக்குத் தேவை. அவர்களிடம் இதற்குத் தேவையான அறிவியல் அறிவு இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டேன். வெறும் இந்தியா என்னும் குறுகிய கண்ணோட்டத்தோடு நாம் இருந்து விடக்கூடாது. இந்த முழு பூமியின் நலத்திற்கு நாம் யோசிக்க வேண்டும்."



நீரோ - "இதற்கு நான் நிச்சயம் சம்மதிக்க மாட்டேன். எல்லாவற்றிலும் பூமி தன்னிறைவான கிரகமாக இருக்க வேண்டும். நீ சொல்வது போல் செய்தால் நிலவின் ஆதிக்கத்திற்குப் பதிலாக செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு பூமி உட்பட வேண்டிய நிலை தான் வரும்.  இதற்கு என் உயிருள்ளவரை சம்மதிக்க மாட்டேன்."

வல்லப் - "வர்த்தகம் என்பது எந்த கிரகத்திற்கும் இன்றியமையாத ஒன்று. செவ்வாய் கிரகத்தினர் நிலவினர் போன்று ஆதிக்க வெறி பிடித்தவர்களாக இருப்பார்கள் என்று ஏன் பயப்பட வேண்டும். மேலும் இன்னும் ஒரு மாதத்தில் நிலவு நம் மீது போர் தொடுக்கும் என்று வதந்தி வருகிறது. அதற்கு நாம் என்ன செய்வது."

நீரோ - "நிலவு அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்த தூதரை அனுப்பியிருக்கிறேன்."

வல்லப் - "பேச்சுவார்த்தை! பேச்சுவார்த்தை! பேச்சுவார்த்தை மூலம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியுமா. எதிராளியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது நாம் பலமான நிலையிலிருந்து பேச வேண்டும். அப்போது தான் பேச்சுவார்த்தை நமக்கு சாதகமாக அமையும். நாம் நிலவை விட ராணுவம், பொருளாதாரம் என்று எல்லா விதத்திலும் தாழ்வாக இருந்துக்கொண்டு பேச்சுவார்த்தை மூலம் என்ன பெற்று விட முடியும்."

நீரோ - "சரி இதற்கு உன் யோசனை தான் என்ன."

வல்லப் - "செவ்வாய் கிரகத்து அரசாங்கத்திடம் ராணுவ உதவி கேட்கலாம். செவ்வாய் அதிபரிடம் பேச நானே நேரில் செல்கிறேன்."

நீரோ - "முட்டாள் தனமான யோசனை.கண்டிப்பாக இது நம்மை செவ்வய்கிரகத்தினரின் அடி மையாக்கும் விதத்தில் தான் முடியும். நான் செனேட் செல்ல வேண்டும். இப்போது நீ இங்கிருந்துக் கிளம்பலாம்.




நிலவு
நள்ளிரவில் நிலவின் வீதிகளில் சந்திரன் தனக்குள் யோசித்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தான்.
"என் திட்டங்களில் சிறு மாறுதல் வேண்டியிருக்கிறது. புரட்சி நிலவிலிருந்து ஆரம்பிக்கும். உயிர் வேண்டும். விக்ரம் பாண்டே, உன் உயிர் வேண்டும். உன் மரணம் தான் என் புரட்சியின் ஆரம்பம்."
அப்போது அவனை நான்கு பேர் சூழ்ந்துக் கொண்டனர். அவர்கள் கைகளில் துப்பாக்கி இருந்தது.
சந்திரன் கைகள் தன்னிடமிருந்த ரிவால்வரை நோக்கிச் சென்றது. ஏதோ தோன்ற எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தான்.
சந்திரனின் கண்களையும் கைகளையும் கட்டி ஒரு வண்டியிலேற்றிச் சென்றனர். சிறிது நேரங்கழித்து சந்திரன் கண் கட்டு மட்டும் அவிழ்க்கப்பட்டது.
அவன் முன் மொட்டையடித்த ஒரு மனிதன் அமர்ந்திருந்தான்.
"யார் நீ. உன் பெயர் என்ன?"
"சந்திரன்"
"அப்படி என்றால்?"
"நிலவு என்று அர்த்தம்."
மொட்டை மனிதன் சத்தமாக சிரித்தான்.
"வேடிக்கையாகப் பேசுகிறாய். நீ எங்கிருந்து வருகிறாய். நள்ளிரவில் உனக்கென்ன வேலை."
"முதலில் நீங்கள் யார்?"
"மாவோ இயக்கம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?"
"தெரியும் 20ஆம் நூற்றாண்டில் பூமியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக ஆயுதப் புரட்சி செய்தவர்கள்."
"அதே. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்."
"ஏற்றத் தாழ்வா? நிலவிலா?"
"நீ என்ன நிலவுக்குப் புதியவனா. தெரியாதவன் போல் கேட்கிறாய். இங்கு செல்வம் அனைத்தும் விக்ரம் பாண்டேயின் கட்சியைச் சேர்ந்தவர்கள் கையில் தான். எல்லாத் தொழில் நிறுவனங்களும் கட்சித் தலைவர்கள் வசம் தான் உள்ளது.கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை, வசதியான வாழ்க்கை, அவர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி. கட்சி அல்லாதவர்கள் நிலை கொத்தடிமைகளை விடக் கேவலமானது."
"அப்படி ஆனால் உங்கள் எதிரி யார்?"
"விக்ரம் பாண்டே".
"என் எதிரியும் அவன் தான். நான் பூமியிலிருந்து வருகிறேன். எங்களை அடிமையாக வைத்திருந்த விக்ரம் பாண்டே தான் என் முதல் எதிரி. உங்கள் திட்டம் என்ன?"
"நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் கலவரம் உண்டாக்க வேண்டும்."
"ஒன்றும் பிரயோஜனமில்லை. வன்முறையைக் காரணம் காட்டி விக்ரம் தேர்தலை முழுதும் ரத்து செய்து எமெர்ஜென்சி சட்டம் கொண்டு வந்து விடுவான். இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகமும் போய் விடும்."
"என்ன சொல்ல வருகிறாய்."
சந்திரன் தன் ரிவால்வரைக் கையில் எடுத்து, "விக்ரம் பாண்டே!" என்று கூறி சுடுவது போல பாவனை செய்தான்.
---(7)---

நிலவுவாசிகள் அனைவரும் டிவி முன் அமர்ந்து விக்ரம் பாண்டேவின் பேச்சைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
"நண்பர்களே. நமது நிலவு இப்போது மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது. பூமி மக்கள் நமக்கு துரோகம் இழைத்து விட்டார்கள். நம்மிடமிருந்து பல உதவிகள் பெற்றும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார்கள். நமக்கு நியாயமாகத் தர வேண்டிய கனிமங்களின் சப்ளையை நிறுத்தி விட்டார்கள். இதனால் நிலவில் அவசியப் பொருட்களுக்குத் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால். ஒரு மாதத்தில் மின்சார சப்ளை நிறுத்த வேண்டிய கட்டாயம் வரும். இதனால் பூமி மீது போர் இந்த கணத்திலிருந்துத் தொடங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயினும் நாளை நடக்கும் அதிபர் தேர்தல் எந்த விதத்திலும் தடையின்றி நடைபெறும். நன்றி."
விக்ரம் மறைந்த அடுத்த நொடி ஆஷாவின் முகம் டிவியில் தெரிந்தது.
"மக்களே! என் பெயர் ஆஷா. நான் மறைந்த நமது தலைவர் விஷாலின் மகள். நம் மக்கள் அனைவருக்கும் பூமி மீது பெருங்கோபம் உள்ளது என்பதை அறிவேன். அந்தக் கோபம் நியாயமானதா. நீங்களே பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்."
டிவியில் பூமி தெரிந்தது. மக்கள் உணவுக்காக ரேஷனில் நிற்பது,சுரங்கங்களில் கடினமான சூழ்நிலையில் வேலை செய்வது, குழந்தைகள் காச நோயினால் துன்புறுவது, சேரிகளின் வறுமையான சூழ்நிலை என்ற பல காட்சிகள் டிவித் திரையில் தெரிந்தது.
ஆஷா மீண்டும் டிவித் திரையில் தோன்றினாள். "மக்களே! இதுதான் பூமியின் தற்போதைய நிலை. அங்கு துன்புறுபவர்கள் யாரும் அந்நியர்கள் கிடையாது. அவர்களில் ஒருவர் உங்கள் தந்தையாக இருக்கலாம், உங்கள் சகோதரராக இருக்கலாம், உங்கள் முதிய பாட்டியாக இருக்கலாம். நம்மில் ஓடும் இரத்தம் தான் அவர்கள் உடலிலும் ஓடுகிறது. அவர்களை நாம் கை விடலாமா. பூமியை இந்த நிலைக்குத் தள்ளிய விக்ரம் பாண்டேவுக்கு நாளை தேர்தலில் உங்கள் வாக்கா அல்லது நம் தாய் கிரகத்தை உன்னத நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கும் எனக்கு உங்கள் வாக்கா என்பதை தெளிவாக யோசித்து முடிவு செய்யுங்கள். நன்றி."
டிவித் திரையிலிருந்து ஆஷா மறைந்தும் மக்கள் அனைவரும் அதிர்ச்சியடன் அமர்ந்திருந்தனர்.
                                                                         ------*****-------
விக்ரம் பாண்டே ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் மட்டும் மக்களை சந்திக்கும் தினமாக வைத்திருந்தான்.மக்களிடம் சராசரி மனிதன் போல பழகிப் பேசுவது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கவும் இது உதவியது.
அன்று மக்களைத் தன் மாளிகைக்கு அருகிலிருந்த ஒரு பார்க்கில் சந்தித்தான். பார்க்கிற்கு நேரெதிரே ஒரு உயர்ந்த கட்டிடத்தில் சந்திரன் தன் துப்பாக்கியை விக்ரமை நோக்கிக் குறி பார்த்துக் கொண்டிருந்தான்.
மக்கள் மத்தியில் விக்ரம் இருந்ததால் வெகு நேரம் தயங்கினான். சில நிமிடங்கள் கவர்னர் தெளிவாகத் துப்பாகிக் குறியிலிருந்த போது ட்ரிக்கரை அழுத்த நினைத்த நொடியில் ஒரு சிறிய குழந்தை கவர்னர் அருகில் வர கவர்னர் குனிந்து  குழந்தையைத்  தூக்கினான். குழந்தையின் தலை துப்பாக்கியின் குறியில் வந்தது.
சந்திரன் ஒரு பெருமூச்சு விட்டுத் துப்பாக்கியைத் தன் பெட்டியில் வைத்து அக்கட்டிடத்திலிருந்து வெளியேறினான்.
பூமி

நிலவு பூமி மீது போர் தொடுத்து ஒரு இரவு கழிந்திருந்தது.நிலவின் ட்ரோன் விமானங்கள் பூமிக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
நீரோவும் வல்லபும் செய்வதறியாது உறைந்துப் போய் அமர்ந்திருந்தனர்.
"எல்லாம் என்னுடைய முட்டாள்தனம். உன் பேச்சை நான் கேட்டிருக்க வேண்டும் வல்லப்."
"நடந்து முடிந்தது பற்றி பேசி என்ன புண்ணியம். இனி என்ன செய்வது என்று முடிவெடுக்க வேண்டும்."
"எனக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. நீ சொல். என்ன செய்யலாம்."
"நான் இன்றே செவ்வாய் கிரகத்தை நோக்கிப் பயணம் செய்கிறேன். அவர்கள் உதவி நமக்குக் கண்டிப்பாகத் தேவை"
"இந்தப் போர் சூழ்நிலையில் நீ பிரயாணம் செய்தால் உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும்".
"என்னைப் பற்றி கவலை வேண்டாம். நம் மக்களைப் பற்றி மட்டுமே சிந்திப்போம்."
வல்லப் நீரோவின் மாளிகையை விட்டு வெளியேறி சென்றுக் கொண்டிருந்தபோது ஒரு ட்ரோன் விமானம் நீரோ மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தி மறைந்தது.
வல்லப் "நீரோ!"  என்று கதறிய வண்ணம் இடிந்த மாளிகைக்குள்ளே சென்றான்.
நீரோ தலையில் பலத்த அடியுடன் தரையில் படுத்திருந்தான். அவன் உயிர் இன்னும் இருப்பது தெரிந்து வல்லப் சற்று நிம்மதி அடைந்தான்.
நீரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். நீரோவின் அருகிலேயே வல்லப் இருந்தான்.
அடுத்த நாள் ஒரு அதிசயம் நடந்தது. நிலவின் ட்ரோன் விமானங்கள் முழுதும் காணவில்லை.  போர் முடிவுக்கு வந்திருந்தது.
நிலவு
விக்ரம் பாண்டேயின் அலுவல் கட்டிடம் அவன் தங்கும் மாளிகையிலிருந்து சொற்ப தூரம் தான். அதனால் அவன் தினமும் நடந்தே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
போகும் வழியில் செக்யூரிட்டிட்டி ஆட்கள் காவல் காத்து நின்றனர். சந்திரன் செக்யூரிட்டி வேடத்தில் கையில் துப்பாக்கியுடன் நின்றான். கவர்னர் தன்னை நெருங்கும் போது துப்பாக்கியால் சுட நினைத்திருந்தான். கவர்னர் அவனருகே நெருங்கும் போது அவன் உதவியாளரின் குழந்தை ஓடி வந்து கவர்னருக்குக் கை கொடுத்தது.
இந்த கவர்னருக்குக் குழந்தைகள் மீது எவ்வளவு பற்று இருக்கிறது என்று சந்திரன் வியந்தான்.இவனிடமும் மனித நேயம் இருக்கிறதோ? பிறகு ஏன் பூமி மக்கள் மீது மட்டும் இவ்வளவு கொடூரமான அணுகுமுறையைப் பின்பற்றுகிறான்? வெறும் அரசியல் காரணங்களுக்காக   தானா?  தன் உறுதி தளர்வதை சந்திரன் உணர்ந்தான். கூடாது இவனைக் கொல்லாமல் விடக் கூடாது. வேறு ஒரு தக்க சமயம் பார்க்க வேண்டும். சந்திரன் மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
                                                                          -----*****----
விக்ரம் தன் அலுவல் அறைக்கு வந்ததும் தன் மூத்த அமைச்சர்களை  அவசரமாக சந்தித்தான்.
"இந்த ஆஷா எங்கிருந்து வந்தாள். நாளை தேர்தலில் என் வெற்றி உறுதி என்று நினைத்திருந்தேன். இப்போது இவள் அனைத்தையும் மாற்றி விடுவாள் போலிருக்கிறது."
விக்ரம் கடுங்கோபத்தில் கத்திக்கொண்டிருந்ததால் ராணுவ அமைச்சர் அமைதியாக இருந்தார்.
"ஆஷா இப்போது எங்கிருக்கிறாள்."
"நமது காவல் மற்றும் கமாண்டோ வீரர்கள் சல்லடையாகத் தேடி வருகின்றனர். அவள் எங்கிருக்கிறான் என்பது பெரிய மர்மமாக உள்ளது."
"தேர்தல் கமிஷனரை அழைத்து நாளை தேர்தலை ரத்து செய்து விடச் சொல்லுங்கள்."
"பல முறை பயமுறுத்திக் கூறியும் அவர் பணிய மறுக்கிறார். தேர்தலை ரத்து செய்தால் பெரியக் கலவரம் ஏற்படும் என்று காரணம் கூறுகிறார்."
"பூமி மீது போர் எப்படி செல்கிறது?"
"ஒரு சிக்கலுமின்றி செல்கிறது. இன்னும் ஒரு வாரம் நம் குண்டு வீச்சுத் தொடர்ந்தால் பூமி முழுதும் தரைமட்டமாகிவிடும்."
"நல்லது. இப்போதே நம் ராணுவ வீரர்களை அனுப்பி தேர்தல் கமிஷனரைக் கைது செய்யச் சொல்லுங்கள். புது தேர்தல் கமிஷினரை இன்றே நியமித்து தேர்தலை ரத்து செய்யச் சொல்லுங்கள்."
ராணுவ அமைச்சர் சென்றதும் டிவித் திரையில் போர் நிலவரங்களை விக்ரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
பிறகு ஜன்னல் ஓரம் நின்று எதிரே இருந்த உயர்ந்தக் கட்டிடங்களை பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று நெற்றிப் பொட்டில் ஒரு குண்டு பாய்ந்து அப்படியே கீழே சரிந்தான்.
எதிரே ஒரு கட்டிடத்திலிருந்த சந்திரன் தன் துப்பாக்கியை ஒரு பெட்டியில் வைத்து அங்கிருந்து கிளம்பினான்.
                                                                         --------******---------
விக்ரம் இறந்து ஒரு வாரம் கழிந்திருந்தது. தேர்தலில் ஆஷா வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனாள்.
முதல் வேலையாக பூமி மீது நடந்துக் கொண்டிருந்த போரை நிறுத்தினான். தன் நண்பர்களை சந்திக்க பூமிக்குச் சென்றான்.
வல்லப் அவனை வரவேற்று நீரோவைப் பார்க்க அழைத்துச் சென்றான்.
வல்லப் - "தலையில் அடிபட்டதால் மன நிலை முழுதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தலைமைப்பதவியை நான் ஏற்றிருக்கிறேன். எப்படிப்பட்ட தலைவன் நீரோ! தன் பேச்சு மூலம் மக்களை எப்படி ஈர்த்தான். இப்போது நான் மட்டும் தனியாக இந்தப் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. நண்பர்களில் எஞ்சியிருப்பது நீ ஒருவன் மட்டும் தான்."
ஆஷா - "கவலைப்படாதே வல்லப். மோகன், நீரோ இவர்கள் தியாகம் வீணாகப் போகாமல் பார்த்துக் கொள்வது நம் பொறுப்பு. நிலவு, பூமிக்கிடேயே ஒரு உன்னதமான உறவை நாம் ஏற்படுத்த வேண்டும். அடுத்து நாம் இருவரும் செவ்வாய் கிரகம் செல்ல வேண்டும். செவ்வாய் அரசாங்கத்துடன் நட்புறவை நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு முன் என் தாத்தாவை சந்திக்க வேண்டும். அவர் இப்போது இலங்கையில் தானே இருக்கிறார்?"
வல்லப் - "ஆம்! நல்ல வேலை ட்ரோன் விமானங்கள் இலங்கை மீது தாக்குதல் நடத்தவில்லை. அதனால் அவர் பத்திரமாக இருக்கிறார்."
ஆஷா - "நாம் இருவருமே அவரை சந்திக்கப் போகலாம்."
வல்லப் - "இப்போது இலங்கைக்கு 20 பேர் வரை செல்லக் கூடிய மோட்டார் படகு வசதி இருக்கிறது. 1 மணி நேரத்தில் சென்று விடலாம்."
                                                                         --------******---------
அடுத்த நாள் மோட்டார் படகில் ஆஷாவும் வல்லபும் இலங்கை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.
வல்லப் - "மூன்று மாதங்கள் முன்னர் நம் நண்பர்களுடன் அந்தமான் தீவிற்குச் சென்றது நினைவுக்கு வருகிறது."
ஆஷா - "ஆம் அப்போது நீ தான் படகு ஒட்டினாய். நீரோவிற்கும் உனக்கும் நடந்த வாக்குவாதம் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது."
வல்லப் - "சந்திரன் பற்றி ஏதாவது செய்தி கிடைத்ததா?"
ஆஷா - "தெரியவில்லை. விக்ரம் பாண்டேவைக் கொன்றது சந்திரன் தான் என்று ஒரு வதந்தி உலவுகிறது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை."
வல்லப் - "அவன் நம்முடன் இருந்தால் ஒரு பெரிய பலமாக இருக்கும்."
ஆஷா அதை ஆமோதிக்கும் வண்ணம் தலை அசைத்தாள்.
இருவரும் மௌனமாகப் பழைய நினைவுகளில் மூழ்கினர்.
படகை ஒட்டிக் கொண்டிருந்த மனிதன் அவர்கள் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தான்.
மொட்டை அடித்து தாடியுடன் காணப்பட்டான் அம்மனிதன்.
"வல்லப், ஆஷா! நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பேன். உங்களுக்கு காவலாகத் துணையாக இருப்பேன்.நம் இலட்சியக் கனவு நிறைவேற உறுதுணையாக இருப்பேன். எனக்குள் இருக்கும் புரட்சித் தாகமே சற்று உறங்கு. என் நண்பர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடு. "
மாறு வேடத்திலிருந்த சந்திரன் மௌனமாகக் கடலைப் பார்த்தவண்ணம் படகை செலுத்திக் கொண்டிருந்தான்.
                                                                                THE END
Inspiration – Early 20th Century Indian and World Hist