Friday, April 26, 2024

மாறியிருந்தால்

                                                       மாறியிருந்தால்

                                                                       

இது என் சுயசரிதை. ஒரு கதை என்று கூட சொல்லலாம். நீங்கள் படித்த மற்ற சுயசரிதை அல்லது கதையிலிருந்து இது சற்று மாறுபட்டிருக்கும். நான் இந்தக் கதையில் என் வாழ்வின் மூன்றே ஆண்டுகளை மட்டுமே விவரித்திருக்கிறேன். என் வாழ்வின் முழு சாராம்சமாக இந்த மூன்று ஆண்டுகள் அமைந்துள்ளது. இந்த நாட்டின் சரித்திரத்தின் முக்கியமான திருப்புமுனைகள் இந்த மூன்று ஆண்டுகளில் தான் நடந்தது.

நான் இந்தக்கதையின் முதல் பகுதியை 1922 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறேன். அப்போது எனக்கு வயது ஆறு. இந்த சிறு வயதில் நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் நம் நினைவில் நிற்பதில்லை. ஆனால் எனக்கு இந்த ஆண்டு முக்கியமான வருடம். நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்த பல சம்பவங்கள் என்னுடைய இந்த சிறு வயதில் அரங்கேறியது.

நவம்பர் மாதத்தின் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. சபர்மதி ஆசிரமத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். உள்ளே அப்பாவும் தாத்தாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது என் காதில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. இருவரும் மிகவும் உணர்ச்சிகரமான விவாதத்தில் இருந்தார்கள்.

சிறு வயது முதல் என் அப்பாவை விட தாத்தாவிடம் நான் அதிகம் நெருக்கம் கொண்டிருந்தேன். என் முதிரா வயது கேள்விகளுக்குப் பொறுமையாக தாத்தா பதில் கூறுவார். அப்பா என்னிடம் நேரம் செலவிட்டது மிகவும் குறைவு. இத்தனைக்கும் தாத்தாவுக்கு வேலைகள் அதிகம்.  மோகன்தாஸ் என்பது அவரது பெயர். ஆனால் அவரை அனைவரும் தேசப்பிதா என்று தான் அழைத்தார்கள். அவரைப் பார்க்க நாள்தோறும் மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள். நான் அவரைச் சந்திக்க வந்த பெருந்தலைவர்கள் மடியில் விளையாடிய அதிர்ஷ்டக் குழந்தையாக வளர்ந்தவன். ரசிக் என்ற எனது பெயர் அவர் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்

இந்த உலகத்தை அவர் கண்களின் மூலமாகத் தான் பார்க்கத் தொடங்கினேன். 

என் ஐந்தாவது வயதிலேயே புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்தார். இதிகாசக் கதைகளை எனக்குச் சொன்னார். பின்னாளில் தனிமை உணர்வு என்னைச் சூழ்ந்தபோதெல்லாம் புத்தகங்களை நான் நாடினேன். அதற்கான வித்து தாத்தாவிடமிருந்தே வந்தது.அவர் அரசியல் மற்றும் சரித்திர புத்தகங்கள் அதிகம் படிப்பார். தல்ஸ்தாயின் 'War and Peace’ புத்தகத்தை மிகவும் புகழ்ந்துக் கூறுவார். என்னையும் படிக்கத் தூண்டுவார். ஆனால் என் ஆர்வம் அறிவியல் புத்தகங்கள் மீது சென்றது. தாத்தாவோ அறிவியல் மானுடத்துக்குத் தீங்கு விளைவிக்கும் சக்தி என்றே நம்பினார்.  இதைப் பற்றி அவரிடம் கடுமையான வாக்குவாதங்கள் நான் செய்ததுண்டு.

தாத்தாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டது கொள்கைப்பிடிப்பு. அவரைப் போலவே நானும் எளிதான மனச் சமாதானங்கள் செய்தது கிடையாது. அப்பாவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்த பிறகு, நான் மெளனமாக இருந்தாலும், என் அடி மனதில் நான் தாத்தாவின் பக்கமே இருந்தேன். சத்தியத்தின் உருவான ராஜா ஹரிச்சந்திரனை மனதில் கொண்டே ஹரிலால் என்ற பெயர் அப்பாவுக்கு வைத்தார். அப்பாவோ இதற்கு முற்றிலும் நேர் எதிர். வாழ்க்கையில் கொள்கைகள் உட்பட எதுவும் நிரந்தரம் கிடையாது என்று நினைப்பவர். 

உள்ளே நடந்த விவாதம் மீது என் கவனம் சென்றது.

"ஹரி நீ இப்போது மிக அதிகமாக குடிக்க ஆரம்பித்து இருக்கிறாய் என்று என் மருமகள் கூறினாள். இது நீ எனக்கு அளிக்கும் தண்டனையா. என் மீதுள்ள கோபத்தை இப்படித்தான் காண்பிக்கிறாயா."

"உங்கள் மீது கோபப்படும் தகுதி எனக்கு இருக்கிறதா. நான் வெறும் அற்பன். இந்த உலகில் பிறந்தது வீண். குடித்துக் குடித்து என் அழிவை நான் விரைவில் தேடிக் கொள்கிறேன். என்னைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள் அப்பா. நாட்டைப் பற்றியும் மக்களை பற்றியும் சிந்தியுங்கள்"

"அப்படி என்னால் விட முடியுமா. உன் தேவைகள் என்ன? சொல் என்னால் முடிந்ததை செய்கிறேன்."

"என்னால் இந்த ஆசிரமத்தில் வேலைகள் செய்ய இயலாது தந்தையே. என் திறமைகளை நிரூபிக்கும் சரியான வாய்ப்புகளை எனக்கு அளியுங்கள். மராட்டிய மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் நிற்க  உத்தேசித்துள்ளேன்."

"அது நீ செய்யும் பெருந்தவறாகும். பதவியைத் தேடி ஒருவன் போகக்கூடாது. நம்முடைய தகுதிகளை நாம் வளர்த்துக் கொண்டால் பதவி நம்மைத் தேடி தானே வரும்."

"அப்படியானால் உங்கள் ஆதரவு எனக்கு கிடையாது. அப்படித்தானே."

"நீ என் மகன் என்பதால் உன் மீது நான் பாரபட்சம் காண்பிக்க முடியாது. தலைமைப் பதவிக்கான ஏற்ற நபர் நீ இல்லை."

"உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து ஏது தந்தையே. என் வழியில் நான் செல்கிறேன்."

தந்தை கோபமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.

அவர் செல்வதை தாத்தா கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

                             -------********---------

அன்று மாலை தாத்தாவை சந்திக்க ஜவஹர், ராஜகோபால் மற்றும் முகம்மது அலி  வருவதாக பேச்சு பரவியது. அவர்களுடன் மிக முக்கியமான பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதால் தாத்தா மற்ற உதவியாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

இவர்கள் மூவரின் வரவை நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்ப்பதுண்டு.

ராஜகோபால் பல இதிகாசக் கதைகள் கூறுவார். தாத்தாவை விட மிக சுவையாகக் கதைகளை விவரிப்பார்.

ஜவஹர் மற்றும் முகம்மது அலி வரும் போது அவர்களுடன் டினாவும் வருவாள். அவளுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

நேரம் தவறாமல் விருந்தினர்கள் வந்தனர். அது அவர்கள் தாத்தாவுக்கு காண்பிக்கும் மரியாதை. ஏனென்றால் அவர் நேரம் தவறாமையை தான் நம்பும் அகிம்சைக்கு நிகராகக் கடைபிடித்தார்.

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தோம். பெரியவர்கள் உள்ளே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் நாங்கள் உள்ளேயும் சென்று ஓடிப் பிடித்து விளையாடினோம்.

இது முகம்மது அலிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எங்களை வெளியே சென்று விளையாடுமாறு கடிந்துக் கொண்டார்.

"சிறுவர்கள் தானே அப்படித் தான் இருப்பார்கள். இங்கே வாருங்கள்." என்று தாத்தா எங்களை அழைத்து அன்பாக பேசினார்.

டினா தாத்தாவின் மடியில் அமர்ந்தாள். நான் ஜவஹர் மடியில் அமர்ந்தேன். பெரியவர்கள் தங்கள் விவாதத்தைத் தொடர்ந்தனர்.

அலி - "சத்தியாக்கிரகப் போராட்டம் நீங்கள் எதிர்பார்க்கும் பலனை அளிக்கும் என்று நான் நம்பவில்லை. இதனால் நாடு முழுதும் குழப்பங்கள் ஏற்படும்.  சட்டரீதியாக அணுகி சுதந்திரம் அடைவது தான் சரியான வழி. சத்தியாக்கிரகம் நீங்கள் நம்பும் அகிம்சைக்கு முரண்பாடானது என்று நான் நினைக்கிறேன்"

தாத்தா - "சத்தியாக்கிரகம் அகிம்சையுடன் முரண்பட்டதல்ல. நாம் நம்முடைய எதிரிகளையும் மதிக்கிறோம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். ஆனால் நாம் கோழைகள் கிடையாது. நம் உரிமைகளை நிலைநாட்ட போராட்டம் அவசியம் தேவை. அதற்கான கருவிதான் சத்தியாக்கிரகம்."

அலி - "நீங்கள் கிலாபத் இயக்கத்திற்கு அளித்த ஆதரவு இந்திய இஸ்லாமியர்களை பிளவுபடுத்தி விட்டது. இஸ்லாமியர்களுக்குத் தேவை கல்வி மற்றும் முற்போக்கான சிந்தனை. உங்கள் நிலைப்பாடு இஸ்லாமியர்களை பழமைவாதிகளாக மாற்றி விடும்."

தாத்தா - "நீங்கள் இந்த மண்ணை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. இங்கு மேற்கத்திய நவநாகரீக சிந்தனைகள் அவ்வளவு எளிதாக ஊன்றி விடாது. இந்த பூமிக்கென்று ஒரு ஞான மரபு உள்ளது. அது இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்று எல்லா மதத்தினரையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளது."

ராஜகோபால் - "நீங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நிரூபிக்க நடக்கவிருக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு ஏன் ஜின்னாவை தேர்ந்தெடுக்கக் கூடாது."

தாத்தா - "தலைவரை நான் தேர்ந்தெடுக்க முடியாது. மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்."

ராஜகோபால் - "ஜின்னாவுக்கு எதிராக உங்கள் தரப்பிலிருந்து யாரையும் நிறுத்தாமல் இருப்பீர்களா."

தாத்தா - "தேர்தலில் போட்டி மிகவும் அவசியமானது."

தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மூவரும் தாத்தாவிடம் விடை பெற்றுச் சென்றனர்.

ராஜகோபால் அலியுடன் தனிமையில் உரையாடினார்.

முகம்மது அலி - "மோகன்தாஸ் ஒரு கபடதாரி. தன்னை ஒரு மதச்சார்பற்றவர் என்று காண்பித்துக்கொள்வதெல்லாம் வெறும் நாடகம்."

ராஜகோபால் - "நீங்கள் தலைவர் தேர்தலுக்கு நிற்பது உறுதியா?"

முகம்மது அலி - "இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக நிற்பது என்னுடைய கடமை."

ராஜகோபால் - "மோகன்தாஸின் ஆதரவின்றி நிற்பவர் யாரும் வெற்றி பெற முடியாது. அதுதான் தற்போதைய அரசியல் நிலவரம். நீங்கள் சற்று யோசித்து முடிவெடுக்க வேண்டும்."

பேசியவாறே டினாவை அழைத்துக் கொண்டு  ஆசிரமத்தை விட்டுக் கிளம்பினர்.  

                         ---------***********-----------   

நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது. அம்மா ரொட்டி, தால் சமைத்துக் கொண்டிருந்தார். நான் அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

அரசியல் செய்திகள் அனைத்தையும் தவிர்த்தேன். எனக்கு அவற்றில் ஆர்வம் இருப்பதில்லை. நடுப்பக்கத்தின் ஓரத்தில் ஒரு செய்தி என்னைக் கவர்ந்தது. விஞ்ஞானி ஐன்ஸடீனின் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். செய்தியில் உள்ள அறிவியல் தகவல்கள் பெரும்பாலும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு கேள்வி-பதில் என் கற்பனையைத் தூண்டியது.

கேள்வி - "எதிர்காலத்தில் மனிதனால் காலப்பயணம் செய்ய இயலுமா?"

பதில் - "முடியும். அதற்கான அறிவியல் சாத்தியக்கூறு உள்ளது. எதிர்காலத்திற்கும், சரித்திர காலத்திற்கும் மனிதனால் செல்ல முடியும். ஆனால் அப்படி ஒரு இயந்திரத்தை வடிவமைப்பதற்கான பொறியியல் வல்லமை அசாத்தியமானது. இன்னும் ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் கழித்து அப்படி ஒரு இயந்திரத்தை மனிதனால் உருவாக்க இயலும்."

காலப்பயணம் என்ற வார்த்தை என்னை கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்றது. நூற்றாண்டுகள் கழித்து பாரதம் சுதந்திரம் அடைந்திருக்குமா என்பதைக் காண்பதாக கற்பனை செய்துக் கொண்டேன். சரித்திரக் காலம் சென்று வீர சிவாஜி மன்னருடன் போரிடுவதாகவும், புத்தரை தரிசிப்பதாகவெல்லாம் கனவு கண்டேன்.

என் அம்மாவிடம் சென்று இதைப் பற்றி ஆர்வமாகக் கூறினேன். அம்மாவுக்கு நான் சொல்வதின் மீது கவனம் இல்லை. இருந்தாலும் நான் விடாமல் பேசிக் கொண்டிருந்தேன். அம்மாவிடம் அவள் பத்து வருடங்கள் பின்னால் சென்றால் என்ன செய்வாள் என்று கேட்டேன்.

"உன் தந்தையை மணந்திருப்பதைத் தவிர்த்திருப்பேன்."

அம்மாவின் பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒன்றும் பேசாமல் தலையணையில் முகத்தைப் புதைத்து அழுதேன்.

சிறிது நேரத்தில் அம்மா என் தலைமுடியைக் கோதுவதை உணர்ந்தேன்.

"உன் அப்பா இன்னும் வரவில்லை. நான் சென்று அவரைத் தேடுகிறேன். நீ வீட்டைப் பூட்டி பத்திரமாக இரு."

"எனக்கு பயமாக இருக்கிறது. நானும் வருகிறேன்."   

"நான் எங்கு போவேன் என்று உனக்குத் தெரியும். அங்கெல்லாம் நீ வரக்கூடாது."

நான் அடம் பிடித்ததால் அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

சில தூரம் நடந்தபின் ஒரு மதுக்கடை வந்தடைந்தோம். அங்குள்ளோர் எங்களை விசித்திரமாகப் பார்த்தனர்.

கடையின் ஒரு ஓரத்தில் அப்பா சுருண்டுப் படுத்துக் கிடந்தார். அவரை நானும் அம்மாவும் கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்து படுக்கையில் கிடத்தினோம்.

அவரிடமிருந்து புலம்பல்கள் வந்த வண்ணம் இருந்தது.

"நான் யார். தேசப்பிதாவின் மகன். அவர் தசரதன் என்றால் நான் ராமன். அவர் கிழித்த கோட்டை தாண்ட மாட்டேன். ஆனால் குடிக்க மட்டும் செய்வேன். அதை ஆண்டவனால் கூட தடுக்க முடியாது. அப்பா இது நான் உங்களுக்கு கொடுக்கும் தண்டனை கிடையாது. ஆண்டவனுக்கு கொடுக்கும் தண்டனை."

சிறிது நேரத்தில் அவரிடமிருந்து குறட்டை சத்தம் வந்தது.

நானும் அம்மாவும் அடுத்த அறை சென்று படுத்தோம்.

"அம்மா. உன் மீது நான் கோபம் கொண்டிருக்கக் கூடாது. நீ அப்பாவைத் திருமணம் செய்யாதிருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பாய்."

அம்மா என்னை அணைத்துக் கொண்டார்.

                            ————*********------

சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் பிரார்த்தனை கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது.

காந்தியடிகள் பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளிலிருந்து சில பத்திகள் வாசித்தார்.

அதன் பின்னர் பஜன் பாடல்கள் கூட்டத்திலிருந்தவர்கள் பாடினர்.

இறுதியில் காந்தியடிகள் கூட்டத்தினரை நோக்கிப் பேச ஆரம்பித்தார்.

"இந்த பிரார்த்தனை கூட்டம் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது. நீங்களும் தவறாமல் கலந்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆசிரமத்தில் ஒரு சிறுவன் இருக்கிறான். அவனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும். அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். தாத்தா நீங்கள் தினமும் கடவுளிடம் வேண்டுகிறீர்கள். நம் நாட்டுக்கு சுதந்திரம் தர கடவுளிடமே கேட்டு விடலாமே. எதற்கு சத்யாகிரகப் போராட்டம் எல்லாம். நீங்களும் கஷ்டப்படுகிறீர்கள். மக்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று அந்த சிறுவன் கேள்வி கேட்டான்."

கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர்.

"சிறுவன் மிகவும் புத்திசாலி. நிறைய கேள்விகள் கேட்பான். கேள்வி கேட்பதனால் தானே தெளிவு பிறக்கும். நம் குழந்தைகளை கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் ஆர்வத்தை நாம் முடக்கி விடக் கூடாது. சரி சிறுவன் கேள்விக்கு வருவோம்.  நாம் ஏன் இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நம் தேவைகளைக் கேட்டு பெறுவதற்கா?. இல்லை. பிரார்த்தனை நம் மனதின் ஆழத்தில் உள்ள மிருகத்தை வெளியேற்றுகிறது. கருணை எண்ணங்களின் மூலம் நம் மனதை சுத்தப்படுத்துகிறது. அதனால் நம் போராட்டம் அறப்போராட்டமாக இருக்க வேண்டும். எதிரியை நம் கருணை உள்ளத்தின் மூலம் தொட வேண்டும். அதற்கு பிரார்த்தனை மிகவும் அவசியம்."

காந்தியடிகள் பேசிக் கொண்டிருக்கும் போது உதவியாளர் அவர் காதில் மெதுவாக ஒரு துர் செய்தியைத் தெரிவித்தார்.

"சிறுவன் காணவில்லை."

காந்தியடிகள் அதிர்ச்சியில் உறைந்தார்.

"ஹே ராம். இன்னும் எவ்வளவு சோதனைகள் எனக்குத் தரப் போகிறாய்."

                       -------********-------



அடுத்த நாள் காலை அப்பா காணவில்லை. அம்மாவும் நானும் தேடித் பார்த்து எந்தப் பலனுமில்லை.

ஒரு வாரம் கழிந்ததும் அப்பா வீடு திரும்பவில்லை. அம்மா மிகவும் துவண்டுப் போயிருந்தாள். என்னுடன் சரியாகப் பேசவில்லை. அது எனக்கு மிகவும் வலித்தது. அம்மாவுக்கு அப்பா வேண்டும். எனக்கு அம்மா வேண்டும். அதற்கு நான் அப்பாவைத் தேட வேண்டும்.

"அப்பாவுடன் வருகிறேன்", என்று என்னுடைய குழந்தைத்தனமான எழுத்தில் அம்மாவுக்கு தெரிவித்து விட்டு கிளம்பினேன்.

தெருவெங்கும் அலைந்தேன். ரயில் நிலையத்தை வந்தடைந்தேன். அங்கும் தேடி அப்பா காணவில்லை. ஒரு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தேன். பசி மயக்கம் கண்ணை அடைத்தது. ரயில் கிளம்பியது கூட தெரியாமல் படுத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் என்னை டிக்கெட் பரிசோதகர் எழுப்பினார். ஏதோ கேட்டார். என்ன கேட்டார். என்பதை புரியாத நிலையில் இருந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் பரிசோதகரிடம் ஏதோ பேசினார். அவர் பணம் கொடுத்ததும் சென்று விட்டார். நான் மீண்டும் மயக்கத்தில் விழுந்தேன்.

மீண்டும் என்னை யாரோ எழுப்பினார்கள். பக்கத்தில் அமர்ந்திருந்த சீக்கியர் எனக்கு உணவளித்தார். அசுரப் பசி இருந்ததால் உணவை வேகமாக விழுங்கினேன். இன்னும் பசிக்கிறதா என்று அவர் கேட்க நான் தலையாட்டினேன். மேலும் சில சப்பாத்திகள் அவர் கொடுக்க வயிறார சாப்பிட்டேன்.

மீண்டும் தூக்கம் வந்தது. இப்போது நிம்மதியான நித்திரை. எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. கனவு வந்தது. கனவில் அப்பா வந்தார். பிறகு அம்மா வந்தார். உடனே எழுந்தேன். அம்மாவை விட்டு எவ்வளவு நாள் பிரிந்திருந்தேன் என்று எனக்குத் தெரியாது. அம்மாவிடம் போக வேண்டும் போல இருந்தது.

நான் அழ ஆரம்பித்தேன். சீக்கியர் ஏதோ கேள்விகள் கேட்டார். அவர் என்னை சமாதானம் செய்ய முயன்று தோற்றார்.

அவர் இறங்கும் இடம் வந்தது. அவருடன் எனக்கு வர சம்மதமா என்று கேட்டார். ஒரு நிமிடம் குழம்பினேன். அம்மாவின் கண்ணீர் தோய்ந்த முகம் மீண்டும் நினைவில் வந்தது. அப்பா இல்லாமல் எங்கும் போவதில்லை என்று முடிவெடுத்தேன். நான் வருவதில்லை என்பதை தெரிவித்த பிறகு அவர் இறங்கி சென்று விட்டார்.

ஒரு வாரம் ரயில் பயணத்தில் கழிந்தது. இப்போது நான் அழுவதில்லை. வீட்டிற்குத் திரும்பினால் அப்பாவுடன் தான் போக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ரயிலில் பலர் வந்து இறங்கினார்கள். வருபவர்கள் என்னிடம் பரிவாகப் பேசினார்கள். எனக்குப் பிரியமாக உணவளித்தார்கள். ஏன் தனியாக வந்தேன் என்ற அவர்களின் கேள்விகளை மட்டும் தவிர்த்தேன்..

ரயில் இறுதியாக சென்னை நகரத்திற்கு வந்து சேர்ந்தது. மீண்டும் நான் தெருக்களில் அலைய ஆரம்பித்தேன். புரியாத மொழி, புரியாத மனிதர்கள், தெரியாத இடம். ஆனால் அப்பாவைத் தேடும் என்னுடைய உறுதி தளரவில்லை.

எத்தனை நாட்கள் சுற்றினேன் என்று எனக்குத் தெரியாது. பசிக்கும் போதெல்லாம் அன்பான மனிதர்கள் எனக்கு உணவளித்தார்கள்.

அப்பாவின் புகைப்படம் என்னிடம் இருந்தது. அதைக் காண்பித்து அவரை யாராவது பார்த்தார்களா என்று விசாரித்தேன்.

யாருக்கும் தெரியவில்லை. ஒரு மதுக்கடை சென்றேன். அனைவரும் அங்கெல்லாம் நான் வரக்கூடாது என்று துரத்தினார்கள். நான் நகராமல் அழுதுக் கொண்டு அங்கேயே நின்றேன்.

கடைக்காரர் எனக்கு என்ன வேண்டும் என்று விசாரித்தேன். என் தந்தையின் புகைப்படத்தைக் காண்பித்து அவர் எங்கிருக்கிறார் என்று கேட்டேன்.

கடைக்காரர் வியப்புடன் என்னைப் பார்த்தார். 

"இவர் மோகன்தாஸின் மகன் அல்லவா. இவரை ஏன் தேடுகிறாய்."

நான் பதில் ஏதும் சொல்லவில்லை. கடைக்காரர் பலவாறு என்னை விசாரித்தார். நான் அழ ஆரம்பித்தேன்.

"சரி. சொல்கிறேன். ஒரு நாள் இங்கு வந்தார். குடித்து விட்டு மயங்கி விட்டார். நான் அவரை எழுப்பியதும் கன்னியாகுமரிக்கு செல்லும் பேருந்து எப்போது வரும் என்று கேட்டார். நான் பதிலளித்ததும் சென்று விட்டார். அவர் அநேகமாக கன்னியாகுமரி தான் சென்றிருக்க வேண்டும்.

ஒரு நாள் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்தேன். இரவானதால் கூட்டம் கலைந்திருந்தது. சுற்றிலும் மனிதர்கள் யாருமில்லை. நான் கடலின் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வயதான மனிதர் என் அருகில் வந்தமர்ந்தார்.

இந்தியில் என்னுடன் உரையாடினார். நான் யார், என் பெயரென்ன என்று கேள்விகள் கேட்டார்.

என் உண்மைப் பெயரைக் கூறாமல் ராம் என்று பதிலளித்தேன்.

"ஏன் தனியாக இருக்கிறாய்."

"என் அப்பாவைக் காணவில்லை. எனக்கு அப்பா வேண்டும்."

"உன் அப்பா இறந்து விட்டாரா."

"இல்லை எங்களை வேண்டாம் என்று விட்டுச் சென்று விட்டார். அவர் கன்னியாகுமரி சென்றிருக்கலாம் என்று ஒருவர் சொன்னார்."

"சரி. நாம் இருவரும் சேர்ந்து உன் அப்பாவைக் கண்டு பிடிக்கலாம்."

நான் சம்மதித்ததும் என்னை ஒரு பெரிய விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு உறங்கி அடுத்த நாள் கன்னியாகுமரியை நோக்கி ரயிலில் பிரயாணம் செய்தோம்.

மூன்று நாட்கள் கழித்து கன்யாகுமரி வந்தடைந்தோம்.

பெரியவர் - "இங்கு உன் தந்தையை எங்கு தேடுவது."

நான் - "இங்கு மதுக்கடைகளில் தேடலாம். பெரும்பாலும் அங்கு தான் இருப்பார்."

பெரியவரின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

மதுக்கடைகளில் விசாரித்தபோது அப்பா அருகில் ஒரு கிராமத்தில் இருப்பதாக தெரிந்தது. கயல்விழி என்பவருடன் தங்கி இருப்பதாகக் கூறினார்கள்.

அடுத்த நாள் கிராமத்தை நோக்கி ஒரு மாட்டு வண்டியில் பிரயாணித்தோம்.

வழியில் ஒரு கலவரம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. கலகக்காரர்கள் எங்கள் மாட்டு வண்டியை சுற்றி நின்றுக்கொண்டு போக விடாமல் தடுத்தனர்.

கூட்டத்தினர் நடத்திய கைகலப்பில் நான் சிக்கிக் கொண்டேன். என் உடைகள் எல்லாம் கிழிந்தது.  ஒரு மனிதன் என்னை தடியால் மண்டையில் அடித்தான்.

நான் மெதுவாக தடுமாறி நடந்தேன். அருகில் ஒரு குளம் தெரிந்தது. தாகம் எடுத்ததால் குளத்தை நோக்கிச் சென்றேன்.

என் கண்கள் இருண்டது. நான் மயக்கத்தில் ஆழ்ந்தேன்.

கண் விழித்ததும் நான் ஒரு குடிசையில் இருப்பது தெரிந்தது முதலில் பார்த்தது பெரியவரைத் தான். அவர் எப்படியோ என்னைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார். ஒரு மூதாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் கண் விழித்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

நான் - "உங்களிடமிருந்து தப்பலாம் என்று நினைத்தேன். என்னை விட மாட்டீர்கள் போலிருக்கிறதே."

பெரியவர் என் நகைச்சுவையை ரசித்து சிரித்தார்.

"உன் தந்தை இந்த கிராமத்தில் தான் இருக்கிறார். மதுரைக்கு வைத்தியத்திற்காக சென்றிருக்கிறார். நாளை வந்து விடுவார் என்று கூறினார்கள். கவலைப்படாதே எல்லாம் நல்ல விதமாக முடியும்."

அடுத்த நாள் காலை கண்விழித்தபோது யாரோ என் நெற்றியை வருடுவது போன்ற ஓர் உணர்வு.

என் தந்தை அருகிலிருப்பதைப் பார்த்து திகைத்தேன். அவர் கைகளைத் தள்ளிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

அப்பா என்னை அணைத்துக் கொண்டு அழுதார். நான் அவரிடம் பேசவில்லை. என் கோபம் அனைத்தும் கண்ணீராய் வழிந்தது.

அப்பா - "ரசிக் இனிமேல் உன்னையும் அம்மாவையும் விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன். என்னை மன்னித்து விடு."

தாத்தா இரண்டு நாட்களில் மதுரை வருவதை தந்தை தெரிவித்தார். நாங்கள் அனைவரும் தாத்தாவை சந்திப்பது என்று முடிவானது.

நாங்கள் மதுரை வந்தடைந்தோம். தாத்தா வசிக்கும் விடுதிக்கு சென்றோம். தாத்தா தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் அருகில் பாட்டியும் அமர்ந்திருந்தார்.

தாத்தா என்னையும் அப்பாவையும் கண்டதும் எங்கள் இருவரையும் அணைத்துக் கொண்டார்.

"சிறுவனே நீ சேட்டைக்காரன். எங்கள் அனைவரையும் எத்தனை சோகத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்து விட்டாய். விடா முயற்சியுடன் உன் அப்பாவைத் தேடிக் கொண்டு வந்து விட்டாயே."

அப்பா தாத்தாவின் காலில் விழுந்து வணங்கினார்.

"இனிமேல் இது போல செய்வதில்லை என்று உறுதி கொடு. உன் மகனுக்காகவும், உன் மனைவிக்காகவும் இதை நீ செய்தே ஆக வேண்டும். உன்னால் என் மருமகளும் பேரனும் மதுக்கடைகளில் எல்லாம் போவதை அறிந்து மனம் வாடுகிறது."

"உங்கள் சொல்லை நான் எப்போதும் மீறப்போவதில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன் தந்தை. இனி மதுவை நான் தொடப் போவதில்லை."

"மிக்க மகிழ்ச்சி. இதற்குப் பதிலாக நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறு. நீ பயனுடன் உன் வாழ்வை அமைத்துக் கொள்ள என்ன உதவி வேண்டும்."

அப்பா என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பெரியவர் குறுக்கிட்டு - "ஐயா. உங்கள் மகனுக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி கொடுத்தால் நாட்டுக்காக அவரும் உழைக்கும் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா."

"ஐயா நீங்கள் என் மகனையும், பேரனையும் காப்பாற்றியவர். உங்களுக்கு நான் ஆயுள் முழுதும் கடன் பட்டிருக்கிறேன். முதலில் உழைப்பைத் தர வேண்டும். அதற்குப் பிறகு தானே பதவி வரும். ஹரி முதலில் தொண்டாற்ற வேண்டும். தகுதி இருந்தால் அதன் பிறகு பதவி தானே வரும்."

பாட்டி குறுக்கிட்டு பேச முயன்றார். தாத்தாவை சந்திக்க ஜவஹர் வந்ததால் பேச்சு தடைபட்டது.

பாட்டி பெரியவரையும் அப்பாவையும் தனியே அழைத்துப் பேசினார்.

"ஐயா. நான் என் மகனை இனியும் இழக்க விரும்பவில்லை.  ஹீரோவின் நல்வாழ்விற்கு உங்கள் ஆலோசனைகளைக் கூறுங்கள்."

"நீங்கள் ராஜாஜியை சந்தித்து காங்கிரசில் தங்கள் மகனின் எதிர்காலத்தைப் பற்றி பேச வேண்டும்."

அப்பாவுக்கும் பாட்டிக்கும் இது சம்மதமாக இருந்தது. தாத்தாவை சந்திக்க பலர் வந்த வண்ணம் இருந்தனர். என்னுடன் விளையாட, பேச அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.  அதனால் நானும் தந்தையுடன் சென்னைக்குப் பிரயாணம் செய்தேன்.

ராஜகோபாலின் வீட்டில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது.  தாத்தாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் எதுவும் செய்ய இயலாது என்று அவர் கை விரித்து விட்டார்.

அடுத்த நாள் ஒரு திடீர் திருப்பம் நடந்தது. ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து பூனாவில் ஒரு காவல் நிலையம் முழுதாக எரிக்கப்பட்டது. 20 போலீசார் கொல்லப்பட்டனர். ஆங்கிலேயர் குடியிருப்பிலும் வன்முறையாளர்கள் புகுந்து 164 ஆங்கிலேயர்களைக் கொன்றனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடக்கம்.

தாத்தா இதை வன்மையாகக் கண்டித்தார். தனது சத்தியாகிரகப் போராட்டத்தைக் கைவிட்டார்.

ராஜகோபால் தந்தையை சந்திக்க அவர் வீட்டுக்கு அழைப்பு விடுத்தார்.  அங்கு முகம்மது அலி, சுபாஷ் மற்றும் பல தலைவர்கள் ஆலசோனையில் இருந்தனர். அப்பாவையும் பாட்டியையும் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

ராஜகோபால் - "சரித்திரத்தின் முக்கியமான தருவாயில் இருக்கிறோம். நாம் இன்று எடுக்கும் முடிவு இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றும். இன்று நம் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செய்த வன்முறை கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்காக மோகன்தாஸ் நம் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டது முட்டாள்தனமானது. ஆங்கிலேயர்கள் ஜாலியன்வாலாபாக்கில் நடத்திய வன்முறையை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா. அந்தக் காயம் மக்கள் மனதில் இருக்கும் அல்லவா. அதன் பின்விளைவுகள் தான் இன்று நம் மக்கள் நடத்திய வன்முறை. இது தவறு என்றாலும் புரிந்துகொள்ளக் கூடியது. மோகன்தாசின் இந்த முடிவு நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதை இருபது ஆண்டுகள் பின் தள்ளி விடும். இதை இங்கிருப்பவர்கள் ஆமோதிக்கிறீர்களா?"

அனைவரும் ஆம் என்று குரல் கொடுத்தனர்.

"நமது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யத் தான் கூடியிருக்கிறோம். வழக்கம் போல மோகன்தாஸின் எல்லா முடிவுகளையும் நமக்குள் தயக்கம் இருந்தும் ஆதரிப்பது போல இந்த முறை செய்ய முடியாது. அடுத்த மாதம் நடக்கும் கட்சி தலைவர் போட்டிக்கு நம் தரப்பில் ஒருவரை நிறுத்த வேண்டும். அது யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்."

 "மோகன்தாஸின் தரப்பில் ஜவஹர் நிற்கிறார். அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அமோகமாக இருக்கிறது. நம் தரப்பில் வலுவான தலைவர் யாரும் இல்லை."

மேற்கண்ட கருத்தை எல்லா தலைவர்களும் கூறினார்.

ராஜாஜி - "முகம்மது அலியை நம் தரப்பில் நிற்க வைக்கலாம் என்று நான் முன் மொழிகிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கூறுங்கள்." 

"முகம்மது நின்றால் கண்டிப்பாக தோற்பார். அவருக்கு ஹிந்துக்களின் மத்தியில் ஆதரவு மிகக் குறைவு"

ராஜாஜி - "இரண்டு நாட்களுக்கு முந்தைய நிலை அது. இப்போது நிலைமை முற்றிலும் தலைகீழ். மோகன்தாஸ் போராட்டத்தை வாபஸ் வாங்கியது மக்கள் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைமையில் விடுதலை கிடைப்பது நிராசை என்று மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர். இந்த தருணத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகம்மது தலைவர் பதவிக்கு நிற்பார். பொது செயலாளர் பதவிக்கு மோகன்தாஸின் மகன் ஹரிலால் நிற்பார். தேசப்பிதாவுக்கு எதிராக அவர் மகனே நிற்பது நமக்கு பெரும் பலம்."

விவாதத்திற்குப் பின் அனைத்து தலைவர்களும் இதை ஆமோதித்தனர்.

அன்று சென்னை மெரினா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் தலைவர்கள் பேசினர்.

அப்பாவுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரது உணர்ச்சிகரமான பேச்சுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஒரு புது நட்சத்திரத் தலைவர் உருவாகிறார் என்று பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்.

தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் நாளும் வந்தது. மாநாட்டில் முதலில் தலைவர்கள் பேசினர்.

இறுதியாக அப்பா பேசினார்.

"இன்று வரலாற்றின் முக்கியமான நாள். இது வரை என் தந்தை தசரதனாகவும் அவர் சொல் மீறாத ராமனாகவும் நான் இருந்தேன். இன்று அவர் ராமனாகவும் நான் லவ குசா இரட்டையர்களில் ஒருவனாக மாறி விட்டேன். இரு நூறு ஆண்டுகளாக ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் நமக்கு நிகழ்த்திய கொடுமைகள் எத்தனை. நம் உரிமைகள் பறிக்கப்பட்டது. வளமான இந்த நாடு சுரண்டப்பட்டது. நம் சொந்த நாட்டிலேயே நாம் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டோம். ஒரு காலத்தில் பூமியின் பொருளாதாரத்தில் முதன்மையான நாடக நமது நாடு இருந்தது. மேலை நாடுகள் நம் நாட்டுடன் வாணிகம் செய்ய போட்டி போட்டன. இப்போது மேலை நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுவிட்டன. ஆனால் நாம் இப்போது ஒரு ஏழை நாடாக மாறி விட்டோம். இதற்கு மேலை நாடுகளின் விஞ்ஞான வளர்ச்சி மட்டுமா காரணம். ஆயிரம் ஆண்டுகள் முன்னரே ஆர்யபட்டா, வராஹமீரா போன்ற விஞ்ஞானிகள் கொண்ட நாடு இது. இப்போது ஏன் நாம் விஞ்ஞான அறிவில் பின் தங்கி இருக்கிறோம். ஏன் என்றால் இந்த காலகட்டத்தில் நாம் அடிமை நாடாக இருந்திருக்கிறோம். நம் நாடு சுதந்திரக் காற்றை அனுபவிப்பதை இனியும் ஒரு நாள் கூட தள்ளிப் போடக்கூடாது. போராட்டத்தைக் கை விடக்கூடாது. மாறாக போராட்டத்தை மேலும் தீவிரமாக்க வேண்டும். இதில் நம் மக்கள் சில தவறுகள் செய்யக் கூடும். அது ஒடுக்கப்பட்டவர்களின் குமுறல் என்று தான் கருத வேண்டும். அதற்காக போராட்டத்தைக் கை விடக்கூடாது. என் தந்தையுடன் எனக்குள்ள கருத்து வேறுபாடு இந்த ஒரு விஷயத்தில் தான். எங்கள் தரப்பில் நிற்கும் முகம்மது அலி தேர்ந்த பண்பாளர். அவரால் மட்டுமே இந்துக்களையும் முசல்மான்களையும் ஒன்றுபடுத்த முடியும். அவர் தலைமையில் ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். அவருக்கு உங்கள் ஆதரவை அளித்து ஒரு புது யுகத்தை உருவாக்க உதவி செய்யுங்கள். ஜெய் ஹிந்த்"

மாநாட்டில் பெரும் கரகோஷம் நடந்தது. அனைவரும் அப்பாவுக்கும் முகம்மது அலிக்கும் ஆதரவாக கோஷம் போட்டனர்.

அதன் பிறகு வாக்கெடுப்பு நிகழ்ந்தது. பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முகம்மது அலி வென்றிருந்தார்.

தாத்தாவுக்கும் ஜவஹரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தாத்தாவின் அரசியல் வாழ்க்கையின் அஸ்தமனம் அன்று தொடங்கியது.

அப்பாவை அனைத்து தலைவர்களும் சூழ்ந்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அப்பாவின் கண்கள் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த பெரியவரை நோக்கிச் சென்றது.

அனைவரையும் விலக்கி விட்டு அவரிடம் சென்றார்.

"ஐயா உங்களால் நான் புது மனிதன் ஆனேன். என் மகனைக் காப்பாற்றினீர்கள். அவனுக்கு வழிகாட்டியாக இருந்து, ஆழ்ந்த குழிக்குள் இருந்த என்னையும் வெளி கொண்டு வந்தீர்கள்.  பெரும் வரலாற்று மாற்றத்திற்கு நீங்கள் வித்திட்டுள்ளீர்கள். இதை நான் என்றும் மறவேன். உண்மையில் நீங்கள் யார். எங்கிருந்து வருகிறீர்கள்,"

"நான் ஒரு நாடோடி. இந்த பிரபஞ்சத்தின் மூலை முடுக்கெல்லாம் அலைபவன். புது புது உலகங்களைத் தேடி செல்பவன். எனக்கென எந்தப் பெயருமில்லை எந்த ஊருமில்லை. நான் வந்த வேலை முடிந்தது. உன்னிடமிருந்து விடைபெறுகிறேன்."

பெரியவர் விடைபெற்று சென்று விட்டார். அதன் பிறகு எங்கள் வாழ்வில் நாங்கள் அவரைக் காணவே இல்லை.

அப்பா என்னை அழைத்துக் கொண்டு அகமதாபாத் திரும்பினார். அப்பாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வீட்டிற்கு வந்ததும் அம்மா அவரிடம் ஒன்றும் பேசவில்லை. என்னிடமும் தனது செல்லக் கோபத்தைக் காண்பித்தார். நான் சமாதானம் செய்த பின் என்னிடம் ஆசையாக எனது அனுபவங்களை ஆர்வமாகக் கேட்டறிந்தார்.

அப்பாவும் அம்மாவிடம் பேச முயன்றார். சிறிது நேரத்திற்குப் பின் அம்மாவின் கோபம் சற்று தணிந்தது.

அப்பா - "நான் குடியை விட்டு இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. இன்று நாடே மதிக்கும் நிலையில் இருக்கிறேன். உன் முகத்தில் சிறிதும் மகிழ்ச்சி இல்லையே ஏன்?"

அம்மா - "உங்களின் இன்றைய அரசியல் நிலைப்பாடு வெற்றியை அளித்திருக்கலாம். ஆனால் உங்கள் தந்தை ஒரு மகாத்மா.  அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் பின் சத்தியம் இருக்கும். நீங்கள் வேண்டுமானாலும் பாருங்கள் வரலாறு அவர் பக்கம் தான் இருக்கும்."

அப்பா - "என் தந்தை ஒரு கொள்கைவாதி. ஆனால் வாழ்க்கையில் சிறிது நெளிவு சுளிவு வேண்டும். அது என் தந்தையிடம் சிறிதும் இல்லை. மற்ற நாடுகளின் விடுதலை போராட்டத்தைப் பார். அங்கு நடக்காத வன்முறையா நம் நாட்டில் நடந்துள்ளது. அதற்காக என் தந்தை போராட்டத்தைக் கை விட்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். ஏன் இது உனக்குப் புரியவில்லை."

அம்மா - "நான் பெண்பிள்ளை. எனக்கென்ன தெரியும்".

அம்மா அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டார்.

இரவில் அம்மா அப்பா மற்றும் நான் படுக்க சென்றோம்.

அப்பா உற்சாகத்துடன் அம்மாவிடம் தன் அரசியல் கனவுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அம்மாவிடம் எந்த பதிலும் இல்லை. அவள் முகம் மறு பக்கம் திரும்பியிருந்தது. அப்பா அவளை மெதுவாக அசைத்துப் பார்த்தார். அவள் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றிருந்தாள்.

                                                    

                                                 இரண்டாம் கதை

                                                   1945- ஆகஸ்ட் 


இக்கதை நடந்தது சரித்திரத்தின் ஒரு விந்தையான காலகட்டத்தில். பெரும் போர்கள், பெரும் அரசியல் நிகழ்வுகள் நடந்த காலம்.  மானுடம் பேரழிவை சந்தித்த தருணம். புரட்சிகள் மூலம் சமூகத்தில் பெரும் குலைவுகளை நிகழ்த்தி, அதிகாரத்தை கொள்கை என்ற மாயை மூலம் தலைவர்கள் நிலைநிறுத்திய அவலமும் இக்காலத்தில் தான் நிகழ்ந்தது.

விந்தையான காலகட்டம் என்று நான்  கூறியது மேற்கூறிய காரணங்களால் அல்ல. கிரேக்க காலத்தில் தத்துவ ஞானிகளும், பிரபுத்துவ காலத்தில்  மதவாதிகளும்,  மறுமலர்ச்சி காலத்தில் எழுத்தாளர்களும் தங்கள் காலத்து  சமூகத்தின் பிரநிதிநிதிகளாக இருந்தனர். ஆனால் அறிவியலாளர்கள் கோலோச்சிய தருணம் ஒன்று வரலாற்றில் இருந்தது என்றால் இக்கதை நடந்த காலகட்டத்தில் தான்.

சில  நூற்றாண்டுகளுக்கு முன் புனித நூல் கூறியதற்கு மாற்றான உண்மைகளை எடுத்துரைத்த காரணங்களினால் ஒரு அறிவியலாளன்  தண்டிக்கப்பட்டான். கலிலியோவின் கதை அனைவரும் அறிந்ததே.  அதற்கு நேர்மாறாக இக்காலம் அமைந்தது தான் விந்தை.

எனக்கு பொதுவாக அறிவியலாளர்கள் மீது விலக்கம் உண்டு. நான் எழுத்தாளன். உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் வாழ்பவன். அறிவியல் அறிஞன் அனைத்திலும் இருக்கும் ஒழுங்கை பார்ப்பவன். நான் அனைத்திலும் இருக்கும்  மீறலை கூர்ந்து கவனிப்பவன். பிறழ்வுகளே எனக்கு கிளர்ச்சி கொடுப்பவை.

ஆனாலும் அறிவியல் அறிஞர்களுக்கு இருக்கும் மதிப்பை பொறாமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஏதோ ஒரு சிந்தனையாளனை சமூகம் கொண்டாடும் வரை எனக்கு ஏற்பே.

நான் கதைசொல்லி. காலமற்றவன். காலத்தின் முன்னும், பின்னும் மிக எளிதாக செல்லும் திறன் படைத்தவன். அதனால் இக்கதை என் மூலமாகவே உங்கள் முன் விரியப் போகிறது. இக்கதையுடன் பயணிக்க போகும் உங்களுடைய சகாவாக நானும் தொடர்வேன்.  வாருங்கள் நம் பயணத்தை தொடங்குவோம்.

நான் இப்போது 31 வயது  இளைஞன். எனது பத்து வருட ஐரோப்பா வனவாசத்தை முடித்துக் கொண்டு தாய் நாடு திரும்பியிருக்கிறேன். நான் பிரயாணம் செய்யும் ரயில் இன்னும் அரை மணி நேரத்தில் அகமதாபாதை நெருங்கி விடும்.

ஜன்னலோரம்  அமர்ந்திருந்ததால் அதிகாலை சுகமான காற்று என் முகத்தைத் தழுவி சென்றுக் கொண்டிருந்தது. எப்போதும் இல்லாத வகையில் அந்தக் காற்றில் சுதந்திரத்தின் மணம் வீசிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். ஆம் இந்திய தேசம் சுதந்திரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த பத்து வருடங்களில் எத்தனை நிகழ்வுகள். நான் அறிவியல் கல்வி கற்க ஐரோப்பாவில் தங்கியிருந்தது, அப்பா இந்திய அரசியலில் பெரும் ஆளுமையாக முன்னேறியது,  நாட்டு மக்களை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட தாத்தாவின் அரசியல் வாழ்க்கை சரியத் தொடங்கியது என எல்லாம் இந்த பத்தாண்டுகளில் அரங்கேறியது.

இந்தியா திரும்பியதும் நான் முதலில் சந்திக்க விரும்பியது தாத்தவைத் தான். இதில் அப்பாவுக்கு சற்று வருத்தம்.

ரயில் ஸ்டேஷனில் நின்றது. நான் தாத்தாவின் ஆசிரமத்திற்கு சென்றேன். எப்போதும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் அவ்விடம் வெறிச்சோடி இருந்தது. தாத்தாவை பார்த்ததும் பெரிதும் வியந்தேன். நான் எதிர்பார்த்தது முதுமையின் அழுத்தத்தில், தோல்வியின் விரக்தியில் இருக்கும் ஒரு வயோதிகரை. ஆனால் தாத்தாவின் முகத்தில் முன்னிருந்ததை விட பொலிவு கூடியிருப்பதாகவே தோன்றியது. அன்றைய செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார்.

என்னை அவரால் அடையாளம் கொள்ள முடியாதலால் அவருக்கு நான் யார் என்று தெரியப்படுத்தினேன். என் வருகை அவருக்கு பெரும் ஆனந்தத்தை அளித்தது. உறவுகளை பற்றிய விசாரிப்புகள் முடிந்து பேச்சு அரசியலை நோக்கித் திரும்பியது.

"25 வருடங்கள் முன்பே அரசியலில் என் சகாப்தம் முடிந்தது. அதில் எனக்கு வருத்தம், மகிழ்ச்சி இரண்டுமே இருக்கிறது. குடிகாரனாக இருந்த என் மகன் இப்போது பெரும் பொறுப்பில் இருக்கிறான். என் பிடிவாதம் அவனை அழித்திருக்கும். என் தாழ்வில் அவன் உயர்வு நிகழ்ந்திருக்கிறது. சுதந்திர போராட்டத்தில் முகம்மது அலியும் ஹரிவும் இனைந்து செயல்பட்டது. இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒருங்கிணைக்க உதவியது. இல்லாவிட்டால் இந்த தேசம் பிரிந்திருக்க சாத்தியம் உள்ளது. "

தாத்தா சிறிது நேரம் அமைதியில் ஆழ்ந்து பிறகு பேச்சைத் தொடர்ந்தார்.

"வருத்தம் என்னவென்றால் இந்த தேசம் தன் ஆன்மாவை இழந்து வருகிறது. உன் அப்பாவின் சுதந்திரா  கட்சி அகிம்சை கோட்பாட்டை உறுதியாக ஏற்கவில்லை. அங்கங்கே ஆங்கிலேயர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக நடக்கும் வன்முறைகள் கண்டும் காணாமல் விடப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு அமையும் அரசாங்கம் நான் கனவு கண்ட ராம ராஜ்ஜியமாக இருக்காது. கிராமங்கள் அழியும். மேலை நாடுகளின் அரசியல் சித்தாந்தங்களே இங்கு கோலோச்சும். பொருளாதார மற்றும் ராணுவ வளர்ச்சியே பிரதானப்படுத்தப்படும். சுதந்திரா கட்சி தான் ஆட்சிக்கு வரும். முகம்மது  அலி பிரதமர் ஆவார். அவ்வாறு நிகழ்ந்தால் ஜனநாயகம் என்னும் போர்வைக்கு அடியில் மெலிதான சர்வாதிகாரம் தான் இருக்கும்.  மேலும் 20 ஆண்டுகள் கழித்து இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து தான் என் கவலை எல்லாம்."

"நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்  ரசி. மக்கள் என்னை மறந்து விட்டது கூட ஒரு விதத்தில் நன்மையே. இந்த இடம் எவ்வளவு அமைதியாகி விட்டது பார். அமைதியில் தான் நம் மனதின் சஞ்சலங்கள் நமக்கு தெளிவாக கேட்கும். தனிமையில் என் மனதை சத்யசோதனைக்கு தீவிரமாக உட்படுத்த என்னால் இயன்றது. இந்த சத்ய சோதனை மூலம் என் உதிரத்தில் கலந்திருந்த நஞ்சை சிறிதளவாவது வெளியேற்ற முடிந்தது. இறைவனின் பாதத்தை அடைவதற்கு  தகுதியானவனாக என்னை சிறிது சிறிதாக மாற்றி வருகிறேன்.  "

எனது மேலை நாட்டு அனுபவங்கள், என் அறிவியல் கல்வி குறித்து விசாரித்தார். நான் தாத்தாவிடம் விடை பெற்று டெல்லிக்குப் பிரயாணம் செய்தேன்         

                               --------********-------------    

அப்பா மிகவும் கம்பீரமாக தெரிந்தார். நான் வீட்டிற்கு வந்தது முதல் சளைக்காமல் பேசிக் கொண்டிருந்தார்.

"பத்து வருடம் கழித்து வருகிறாய், உன் அம்மாவைக் கூட தேடாமல் சபர்மதி சென்று விட்டாய். எப்படி இருக்கிறார் உன் தாத்தா."

" அவர் மிகவும் மன நிம்மதியுடன் இருப்பது போல தெரிகிறது. அவருக்கு தற்போது அரசியல் ஒரு பொருட்டே கிடையாது. ஒரு  நாடே அவரை மறந்து விட்டது. இன்று விடுதலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அவர் தானே. ஆனால் இன்று அவருக்கு கிடைக்கும் மரியாதை என்ன. அதனால்  அவரை தான் முதலில் சந்திப்பது என்று முடிவெடுத்தேன்."

"மரியாதை தானே கொடுக்க வேண்டும். வேண்டுமென்றால் சுதந்திர இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களில் அவர் படத்தை அச்சிட்டு விடுகிறோம். அவ்வளவு தான் செய்ய முடியும். அவர் கொள்கைகள் சித்தாந்தங்களுக்கு சுத்தமாக இடமிருக்காது."

"நாம் மேலை நாடுகளை பின்பற்ற  முயலுகிறோம். ஆனால் அவர் இந்த மண்ணை நன்றாகப் புரிந்தவர். கிராமங்களை மையமாகக் கொண்ட, அவற்றுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் ஒரு நாட்டை அவர் கனவு காண்கிறார். அது எனக்கு ஏற்புடையதாகத் தான் இருக்கிறது."

"அந்த கிராம ராஜ்ஜியத்தில் உனது இடம் என்ன என்று யோசித்துப் பார். நீ அறிவியல் மீது ஆர்வம் கொண்டவன். உன்னை ராட்டினத்தின் நூலை கோர்க்க சொன்னால் சம்மதமாக இருக்குமா. எல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத வெட்டிக் கற்பனைகள்."

"இன்று உலகத்தின் அரசியல் கோட்பாடுகள் இரு துருவங்களாய் தனித்து இருக்கிறது. அரசு என்பது நாட்டின் வெளியுறவுக் கொள்கை, மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு என்பதோடு சுருக்கிக் கொள்வது. வலிமையான ராணுவம் என்பது இந்த சித்தாந்தத்தில் இன்றியமையாத  ஒரு அம்சமாக இருக்கும். இதன் படி மக்கள் தங்கள் பொருளாதார நிலையை தானே தீர்மானித்துக் கொள்வார்கள்.  முதலீட்டாளர்கள் பெரிதும் மதிக்கப்படுவார்கள். அவர்கள் நடுவில் அரசின் கட்டுப்பாடுகள் இருக்காது. இது வடது சாரி அரசியல் கொள்கை. அமெரிக்க நாடும், சில  ஐரோப்பா நாடுகளும் இந்த கோட்பாட்டின்  அடிப்படையில் தங்கள் அரசியல் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். "

"இன்னொரு துருவத்தில் மக்கள் மீது பல கட்டுப்பாடுகளை சுமத்தும் அரசாங்கம்.  ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும். மக்கள் மீது அதிக வரிச்சுமை, வர்த்தகம் மீது பல தடைகள் என்று குடிமகனின் அன்றாட வாழ்க்கையில் அரசு தன் மூக்கை நுழைக்கும். மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீட்டை மறுதலிக்கும். இது இடது சாரி அரசியல் கோட்பாடு."

"இதில் இந்தியாவின் அரசியல் சூழ்நிலை எப்படி பொருந்துகிறது. இடது சாரி கோட்ப்பாட்டை ஜவஹர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், வடது சாரி அரசியலின் பிரதிநிதியாக முகம்மது அலியின்  தலைமையிலான சுதந்திரா கட்சியும் தாங்கி நிற்கும். உலகமே  பிரமிக்கும் வகையில் இந்தியாவின் ஜனநாயகம் இயங்கும்."

"எனக்கு அரசியல் மீது ஆர்வம் கிடையாது. பாட்டி எங்கே இருக்கிறார்."

"அவர் என்னுடன் தான் இருக்கிறார். இரண்டு வருடங்கள் முன்பு பாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். மருத்துவர்கள் பரிந்துரைத்த அறுவை சிகிச்சையை உன் தாத்தா மறுத்தார். பாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உன் தாத்தாவிடம்  சண்டை போட்டு நான் பாட்டிக்கு சரியான மருத்துவம் கிடைக்க செய்தேன். அன்றிலிருந்து உன் பாட்டி என்னுடன் தான் இருக்கிறார்."

"தாத்தாவின் கொள்கைகள் பாட்டிக்கு நன்று தெரியும். இதற்காகவெல்லாம் அவரை பிரிந்திருக்க மாட்டார்."

"ஆம் மேலும் சில சம்பவங்கள் நடந்தன. மனிதனுக்கு இயல்பாக வரும் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வர உன் தாத்தா போராடினார். சத்ய சோதனை என்று பலவாறு கூத்தடித்தார். அது உன் பாட்டிக்கு சங்கடமாக இருந்தது. 24  மணி நேரமும் காமத்தையை சிந்திப்பவனால் அதை எப்படி வெல்ல முடியும். மக்கள்  நகைக்கும் வண்ணம் தன்னை அசிங்கப்படுத்திக் கொண்டார். உனக்கும் வயதாகிக் கொண்டே போகிறது.  எப்போது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாய்." 

"ஏற்ற பெண் கிடைக்கும் போது."


                                                   மூன்றாம் கதை                                                   

                                                       1975

இரவில் திடுக்கென்று எனது நித்திரை கலைந்தது. மணி 2 என்று கடிகாரம் காண்பித்தது. சில நாட்களாக இவ்வாறு நடு ராத்திரியில் முழிப்பு வருகிறது. அப்போதெல்லாம் என் இதயத்துடிப்பின் ஓசை மிகவும் தெளிவாகக் கேட்கிறது. அது என் படபடப்பை அதிகரிக்கிறது. நடக்கவிருக்கும் ஒரு துர்சம்பவத்தின் அறிகுறி இதுவா என்ற பயமும் தோன்றுகிறது. நான் ஒரு விஞ்ஞானி என்பதால் என் அறிவின் பலத்தைக் கொண்டு இந்த விபரீத சிந்தனைகளை நிராகரிக்கிறேன்.

வீட்டைப் பூட்டி விட்டு என் காரில் ஏறினேன். 10 நிமிடங்களில் என் ஆராய்ச்சி கூடத்திற்கு வந்தேன். என் முன் இருக்கும் இயந்திரத்தைப் பார்த்தேன். ஒரு வருடமாக இயங்கும் நிலைக்கு கொண்டு வர போராடுகிறேன். இன்னும் சில நாட்களில் இயந்திரம் வெற்றிகரமாக வேலை செய்யும் நிலையில் இருந்தது.

நேரம் போனதே தெரியாமல் என் ஆராய்ச்சியில் மூழ்கினேன். வெளியே கதிரவன் ஒளி எட்டிப் பார்க்க வீட்டிற்குத் திரும்பினேன்.

கதவைத் திறந்ததும் தொலைபேசி அடித்துக் கொண்டிருந்தது. மறுமுனையில் அப்பா.

"எவ்வளவு நேரம் உன்னைத் தொடர்பு கொள்ள முயன்றுக் கொண்டிருந்தேன். தாத்தாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உடனே இந்தியா கிளம்பி வா."

நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

                                                          -------********------


இந்தியா வந்ததும் நேராக சபர்மதியில் என் தாத்தா வசித்து வந்த ஆசிரமத்திற்குச் சென்றேன். தாத்தா படுத்திருக்க அவர் அருகில் பாட்டி அமர்ந்திருந்தார்.

தாத்தாவுக்கு வயது 105. பாட்டிக்கும் அநேகமாக அதே வயது தான் இருக்கும்.  ஆனால் இருவருக்கும் ஒரு 30 வயது குறைத்தே தான் சொல்ல முடியும். அவர்களின் நல்ல ஆரோக்கியம் எங்கள் மரபணுக்களில் தொடர்ந்து வந்தது.

தாத்தாவின் கண்கள் மூடியிருந்தது. நான் வந்ததைப் பாட்டி அவருக்குச் சொல்ல மெல்ல கண்விழித்தார். என்னை அருகில் வரும்படி சைகை செய்தார்.

என் கைகளைப் பிடித்து முத்தமிட்டார். என் காதில் மெலிதான குரலில் பேசினார்.

"ரசிக்! உன் அப்பா பேச்சை நீ கேட்காதே."

பிறகு மீண்டும் கண்களை மூடினார்.

நான் அவர் காலடியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.

பாட்டி என்னைப் பக்கத்து அறைக்கு வர சொன்னார். தாத்தா சொன்னதை அவர் யூகித்திருப்பார் என்று எனக்குத் தோன்றியது. அது குறித்து அவர் பேச நினைப்பது புரிந்தது.

"எவ்வளவு நாள் இங்கிருப்பதாக உத்தேசம்."

"நான் இந்தியா வந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இரண்டு மாதங்கள் இங்கு செலவிடலாம் என்று நினைக்கிறேன். எப்போதிருந்து தாத்தாவுக்கு இப்படி ஆயிற்று."

"ஒரு வாரமாகத் தான். உன்னைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். நீ அம்மா பிள்ளையும் இல்லை, அப்பா பிள்ளையும் இல்லை. தாத்தா பிள்ளையாகவே வளர்ந்து விட்டாய்."

"அவர் அருமை யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. உங்களையும் சேர்த்து."

"உன் தாத்தா பெருந்தலைவராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நல்ல கணவராகவோ தகப்பனாகவோ இருந்தாரா என்ற கேள்வியை நீ ஒரு முறையாவது கேட்டுப் பார்த்தாயா. வீட்டைப் பொறுத்த வரை அவர் ஒரு சர்வாதிகாரி. அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் குறித்து நான் எந்த கேள்வியும் கேட்டதில்லை. அவருடைய அரசியல் போராட்டத்தில் நானும் கலந்துக் கொண்டு உழைத்தேன்.  மோகன்தாஸ் என்ற பிம்பத்தின் பின் இந்த கஸ்தூரி என்ற நிழலும் தொடர்ந்தது. எப்போது உன் தந்தை வாழ்க்கையை சீரழிக்க நினைத்தாரோ அப்போது நான் அவருக்கு எதிரானேன்."

"அப்பா ஒரு சந்தர்ப்பவாதி. கட்சியில் உள்ள அனைவரையும் தன் பக்கம் சேர்த்து தாத்தாவைத் தனிமைப்படுத்தினார். தாத்தா போராடி கிடைத்த வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார்."

"எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் உன் அப்பா ஹரிலால் வைத்திருந்த பாசம் தான் என் உயிரைக் காப்பாற்றியது. நான் நோயுற்றிருந்த போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் உன் தாத்தா கொள்கைவாதி ஆயிற்றே. அறுவை சிகிச்சை என்பது நம் ஆன்மாவுக்கு செய்யும் வன்முறையாம். நல்ல வேலை உன் அப்பா தான் அவரின் கிறுக்குத்தனத்திலிருந்து என்னைக் காப்பாற்றினான். கடைசி காலத்தில் சத்யசோதனை என்று அவர் அடித்த கூத்தெல்லாம் உனக்குத் தெரிந்தது தானே. அவர் செய்ததெல்லாம் நான் செய்தால் அவரால் ஏற்க முடியுமா.  தான் ஒரு ஆண் என்ற அகங்காரம் தானே இதற்கெல்லாம் காரணம்."

நான் மெளனமாக இருந்தேன். பாட்டி மேலும் தொடர்ந்தார்.

"உன் அப்பா உனக்காக சில திட்டங்கள் வைத்திருக்கிறான். இப்போதாவது அவன் பேச்சைக் கேள்."

அதே நேரம் அப்பா அறைக்குள் நுழைந்தார்.

"நேராக இங்கேயே வந்து விட்டாயா. முதலில் என்னைப் பார்க்க வருவாய் என்றல்லவா நினைத்தேன்."

பாட்டி கண் ஜாடை காண்பிக்க அப்பா பேச்சை மாற்றினார். நல விசாரிப்புகள், குடும்பம் மற்றும் உறவினர்களை பற்றிய செய்திகளின் பரிமாறுதலுக்குப் பின் என்னைத் தன்னுடன் வர சொன்னார். ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று பேசத் தொடங்கினார்.

"28  வருடங்கள்!  நான் இந்த நாட்டின் பிரதமராகி 28  வருடங்கள்  ஆகி விட்டது. ஒரு ஏழை பிச்சைக்கார நாடாக இருந்த இந்தியா இப்போது ஒரு வல்லரசாக மாறி விட்டது. உலகின் 10 பணக்கார நாடுகளில் ஒன்றாக நாம் உருவெடுத்து விட்டோம். சுதந்திரம் அடைந்த முதல் நாளிலிருந்தே நாம் கையாண்ட தாராளமய பொருளாதாரக் கொள்கை நம்மை ஒரு பணக்கார நாடாக மாற்றி விட்டது. இன்று இந்தியாவில் பசி என்ற பேச்சே கிடையாது. ஒரு ஏழைக்கு கூட நல்ல கல்வி, மருத்துவ வசதி கிடைக்க செய்தேன். நமது நாட்டின் கட்டுமானம் வளர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கு நிகராக உள்ளது."

"ஆனால் இதற்கு பெரும் விலை நாட்டு மக்கள் கொடுக்க வேண்டியதாகி  விட்டதே. கிராமங்கள் அழிந்தன. சுற்றுப்புற சூழல் மாசடைந்து விட்டது. பெரும் தொழிற்சாலைகள் நிறுவ ஏழை ஆதிவாசி மக்கள் தங்கள் நிலத்தை இழந்தனர். அவர்களுக்கு சரியான  நிவாரணம் அளிக்கவில்லை. பெரு வெள்ளம், வறட்சி என்று இயற்கை கடுமையானதாக மாறி விட்டது. மக்களின் எதிர்ப்பை இரும்புக் கரம் கொண்டு அடக்கினீர்கள். எத்தனை ஆயிரம் பேர் இதில் பலியாகினர்."

"இதற்கு  நீ கூறும் மாற்று பாதை என்ன. அருகிலிருக்கும் சீனாவைப் பார். அவர்களுடைய சோஷலிச பொருளாதாரத்தின் விளைவுகள் என்ன. நாட்டில் பாதி  ஜனத்தொகை கொலைப் பட்டினியில் தான் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும் போது நான் செய்தது சாதனையாக ஏன் உனக்குத் தெரியவில்லை?"

"எனக்கு பொருளாதாரம் தெரியாது. ஆனால் நீங்கள் உண்மையான ஜனநாயகவாதி கிடையாது. நீங்கள் கையாண்ட அரசியல் தந்திரங்கள் மற்றும் சூழ்ச்சிகள்  விளைவாக நம் நாட்டிலிருந்து பிரிந்து பாகிஸ்தான், வங்க தேசம் உருவாகின. பஞ்சாபில் பெரும் கலவரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது."

"இதெல்லாம் வெளிநாட்டின் சதி. என் அரசியல் வாழ்க்கையை நான் இப்படி முடிக்க விரும்பவில்லை. என் ஆட்சி அசோக சக்கரவர்த்திக்கு நிகராக பொன்னேடுகளில் பதிக்கும் படி இருக்க வேண்டும். அதற்கு உன் உதவி தேவை. நாம் ஒருவரை சந்திக்க போகிறோம். அவருடன் நீ தான் எனக்காக பேச வேண்டும்."

"எனக்கு அரசியலில் யாரையும் தெரியாது."

"உனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவருக்கு நீ மிகவும் விருப்பமானவர். அது நமக்கு உதவும்"              

                           -------*************--------          .   

அப்பா பிரதமர் ஆனாலும் மிக எளிமையாகவே இருந்தார். அவர் காரில் போகும்போது செக்யூரிட்டி பந்தோபஸ்து, போக்குவரத்தை நிறுத்துதல் போன்றவற்றைக் கடுமையாக மறுத்து வந்தார். 

கார் நேத்ராவின் வீட்டை அடைந்தது. அவள் இப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறாள். ஜவஹர் ஓய்வு பெற்று, அவள் தலைமையில் நடக்கவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட முடிவு செய்திருந்தது. அவள் மகன் ரஞ்சித் இளைஞர் அணிக்கு தலைவராக இருக்கிறான்.

நேத்ரா என்னை எதிர்பார்க்கவில்லை. என்னை அவள் ஏறெடுத்து பார்க்கவில்லை. என் தந்தையை வரவேற்ற அவள் என்னை உதாசீனப்படுத்தினாள். ரஞ்சித் அவள் அருகில் அமர்ந்திருந்தான். அவன் துடிப்பானாகவும் அதே சமயம் அமைதியற்றவனாகவும் இருந்தான். என்னை அவன் பார்த்த பார்வையில் வெறுப்பு தெரிந்தது

அப்பா நேத்ராவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்.

"அரசியலில் ஜவஹரும் நானும் எதிர் துருவங்களில் இருந்து விட்டோம். ஆனாலும் அவர் மீது நான் மரியாதையுடன் நடந்து வந்தேன். எங்கள் இருவருக்கும் 80  வயது நெருங்கி விட்டது. ஓய்வெடுக்கும் கால கட்டத்தை நெருங்கி விட்டோம். இனி எதிர்காலம் நீ, ரசிக் போன்ற இளைஞர்கள் கையில். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நீங்கள் இருவரும் சேர வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது. என்ன சொல்கிறாய் நேத்ரா."

என் பெயரையும் அப்பா சேர்த்துக் கூறியதில் அவர் தந்திரம் புரிந்து விட்டது. என்னை அரசியலுக்கு இழுக்கப் பார்க்கிறார் என்பது தெளிவானது.

நேத்ரா - "சற்று புரியும்படி சொல்லுங்கள்."

"வரும் தேர்தலில் சுதந்திரா கட்சியும் காங்கிரசும் கூட்டணி சேர்ந்து போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை வரும். கம்யூனிஸ்ட் மற்றும் மாநில காட்சிகள் வெற்றி  பெறும். அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல."

"தலைமைப் பதவி யாருக்கு?"

"காங்கிரசை விட சுதந்திரா கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம். நாங்கள் தான் வரும் தேர்தலில் அதிக இடங்கள் பெறுவோம். ஆகையால் ரசிக் பிரதமராகவும் நீ துணைப் பிரதமராகவும் இருப்பது நியாயமானது"

"பிரதமராக என் மகன் ரஞ்சித் என்றால் தான் காங்கிரஸ் கட்சி சம்மதிக்கும். மேலும் அமையவிருக்கும் ஆட்சியிலோ உங்கள் கட்சியிலோ ரசிக்  ஒரு பொறுப்பிலும் இருக்கக் கூடாது. இதற்கு சம்மதம் என்றால் எங்கள் தரப்பிலிருந்து உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்வோம். இல்லை என்றால் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்."

அப்பாவுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. என் மனம் நிம்மதியானது.

ஏமாற்றத்துடன் அப்பா நேத்ராவிடமிருந்து விடை பெற்றார். காரில் அப்பாவிடம் நான் எதுவும் பேசவில்லை. அவர் மன சஞ்சலத்தில் இருந்ததால் இருவரும் மௌனமாகவே இருந்தோம்.  

அடுத்து ஜனாதிபதி மாளிகைக்கு நாங்கள் வந்து சேர்ந்ததும் எனக்கு வியப்பு மேலிட்டது. இங்கு எதற்கு என்னை அழைத்து வந்தார் என்ற கேள்வியும் வந்தது.

ஜனாதிபதி சஞ்சீவ் அப்பாவை எதிர்பார்த்திருந்தார். முக்கியமான நாட்டு நிலவரங்கள் குறித்துப் பேச ஆரம்பித்தனர்.

அப்பா - "நாடு இப்போது முன் போல இல்லை.  முன் அபரிதமான தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு மட்டும் மக்களை திருப்தி செய்வதாக இருந்தது. இப்போது மக்கள் சுற்றுப்புற சூழல், விவசாயிகளின் நலன் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர்."

ஜனாதிபதி - "நிலம் கையகப்படுத்துவதற்கான மசோதா இந்தப் பாராளுமன்றக் கூட்டத்திலாவது நிறைவேறுமா. எதிர் கட்சித்தலைவர் ஜவஹர் என்ன சொல்கிறார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா."

அப்பா - "இந்த மசோதாவின் பெயரால் நாடு முழுதும் கடும் எதிர்ப்பை ஜவஹர் தூண்டி வருகிறார். என்னை விவசாயிகளின் எதிரியாக சித்தரிக்கிறார். இப்போது மக்கள் மாறி விட்டார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு மாறி விட்டது. வலது சாரி அரசியல் இனியும் இங்கு செல்லாது. வலது, இடது இரண்டின் கலவையான அரசியல் தேவைப்படுகிறது."

ஜனாதிபதி - "சரியாக சொன்னீர்கள்."

அப்பா - "அதற்கு புதிய தலைமை தேவை. நான் ஓய்வு பெறப் போகிறேன். என் மகன் ரசிக் நாட்டையும் கட்சியையும் வழி நடத்துவான்."

எனக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் கலந்துப் பேசாமல் அப்பா இந்த முடிவெடுப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கோபத்தில் அறையை விட்டு நான் வெளியேற நினைத்தபோது அப்பாவின் உதவியாளர் அவர் காதருகே ஏதோ சொன்னார். அப்பா ஜனாதிபதியிடம் விஷயத்தை சொன்னார்.

"என் தந்தை தேசப்பிதா மோகனதாஸ் இறைவனடி சேர்ந்து விட்டார்."  

அப்பாவின் கண்களில் கண்ணீர் வழிந்து வந்தது.

                        ---------*********--------

தாத்தாவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நீண்ட நித்திரையில் இருப்பது போல காணப்பட்டார்.  தூங்கும்போது அவர் முகத்தில் எப்போதும் இருக்கும் மென்புன்னகை இப்போதும் தெரிந்தது. அவர் இருக்கும் நிலை நிரந்தரக் கனவா அல்லது கனவுகளே இல்லாத துயில் தான் மரணமா? இறக்கும் போது அவர் வயது 105. வாழ்வின் இறுதிக் காலத்தில் கூட அவர் படுத்தப்படுக்கையாக இருந்தது கிடையாது. அவர் மரணம் மிக எளிதாகவே நடந்து முடிந்தது.

வளைந்து கொடுக்கும் தன்மை இருந்ததாலே அவருக்கும் தாத்தாவுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தத்தில் வென்றார். தேசப்பிதா என்று நாடே கொண்டாடிய தாத்தாவின் அரசியல் வாழ்க்கையை சூன்யமாக்கினார். நாட்டின் பிரதமராக 28 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது அப்பாவின் இந்த நடைமுறை வாழ்க்கை சாமர்த்தியம் தான் காரணம். 

தாத்தாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தலைவர்கள் வரத் தொடங்கினர். அப்பாவிடம் செயற்கையான சோகம் ததும்பிய முகத்துடன் துக்கம் விசாரித்தனர். 

"தேசப்பிதா மோகன்தாஸ் வாழ்க" என்ற கோஷம் வீட்டின் வெளியே கேட்டது.

கடந்த 35 ஆண்டுகளாக யாரும் தாத்தவைப் பொருட்படுத்தியதில்லை. இப்போது அனைவரும் அவரைப் புகழ்வது எனக்கு வெறுப்பாக இருந்தது.

எதிர்கட்சித் தலைவர் ஜவஹர் வருகிறார் என்று அப்பாவிடம் உதவியாளர் கூற, அவரை வரவேற்க அப்பா வாசல் சென்றார். அரசியலில் ஜவஹர் தனக்கு எதிரி என்றாலும் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார்.

வந்ததும் அப்பாவை ஜவஹர் அணைத்தார். இருவரும் அந்நிலையில் சில நொடிகள் இருந்தனர். 

"எப்படி நடந்தது ஹரிலால்", என்று ஜவஹர் அப்பாவிடம் விசாரித்தார்.

"மிகவும் அழகாக அவர் மரணம் நிகழ்ந்தது. இரவில் தூங்கும் போது அவர் இதயத் துடிப்பு நின்றது."  

பிறகு ஜவஹரைத் தாத்தாவின் உடல் இருந்த அறைக்கு அப்பா அழைத்துச் சென்றார்.

தாத்தாவின் உடலைப் பார்த்ததும் அவர் காலடியில் மண்டியிட்டு கண்ணீர் விட்டழுதார்.

பெற்ற மகனான என்னை வெறுத்தார். வளர்ப்பு மகனான ஜவஹர் மீது உயிரையே வைத்தார்", என்று அப்பா அடிக்கடி கூறுவதுண்டு

ஜவஹர் அப்பாவின் உடலை விட்டு அகன்று, அருகிலிருந்த என்னை நோக்கி வந்தார்.

"ரசிக், எப்போது அமெரிக்காவிலிருந்து வந்தாய்."

"நான் வந்து ஒரு வார காலம் ஆகிறது."

"பிறகு சாவகாசமாக உன் ஆராய்ச்சி பற்றி பேச வேண்டும்."

தத்துவம், இலக்கியம், அரசியல், வரலாறு, விஞ்ஞானம் என்று அனைத்திலும் ஜவஹர் ஆர்வமுடையவர். அவரிடம் நான் மணிக்கணக்காக உரையாடல் நடத்துவதுண்டு.

என்னிடம் நலம் விசாரித்து விட்டு மற்ற உறவினருடன் ஜவஹர் பேசிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் தாத்தாவின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஈமக்கிரியை செய்யப்பட்டது.

குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குத் திரும்பினோம். நான் யாருடனும் உரையாடும் நிலையில் இல்லை. மனதில் தாத்தாவைப் பற்றிய எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தது.

என் தோளில் யாரோ கை வைக்க, திரும்பிப் பார்த்தேன். அப்பா நின்றுக் கொண்டிருந்தார். என்னுடன் தனியாகப் பேச அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அறையில் எங்களுக்கிடையே நிலவிய மௌனத்தை அப்பாவே உடைத்தார்.

"இன்று எரித்தோமே, கிழவர், எவ்வளவு பெரிய மனிதர் தெரியுமா?."

நான் அப்பா மேலும் பேசட்டும் என்று மௌனத்தைத் தொடர்ந்தேன்.

"மூடர்கள்! நமக்கு சுதந்திரம் அவரால் கிடைக்கவில்லை என்று ஊளையிடுகிறார்கள். உலகப் போர் வரவில்லையென்றால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காதாம். வரலாறு தெரியாத அறிவீனமான வார்த்தைகள். அவர் காலத்திற்கு முன் சுதந்திரப் போராட்டம் எப்படியிருந்தது? இங்கொன்றும் அங்கொன்றும் என சில கலகங்கள். ஒரு நாட்டு மக்கள் அனைவரையும் போராட்டத்திற்குள் இழுப்பதென்றால் சாதாரண காரியமா? இதற்கான முழு பாராட்டும் கிடைக்காமல் இறந்து விட்டார் கிழவர்."

"அவருக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் அனைத்தையும் தான் நீங்கள் பறித்து விட்டீர்களே. ஜின்னா, சுபாஷ் போன்றவர்களை உங்கள் பக்கம் இழுத்து அவரைத் தனிமைப் படுத்தினீர்கள். இறுதியில் ஜவஹர் தவிர யாரும் அவருக்கு ஆதரவாக இல்லாமல் செய்து விட்டீர்கள். அவர் பக்கமிருந்த நாட்டு மக்களை உணர்ச்சிகரமான வார்த்தைகள் பேசி உங்கள் பக்கம் இழுத்தீர்கள். கடைசியில் சுதந்திரம் கிடைத்தது ஹரிலால் தான் காரணம் என்று ஒரு பொய் சரித்திரம் பள்ளியில் படிக்கும்படி செய்தீர்கள்."

"கிழவருக்கு இருக்கும் அதே நேர்மைத் திமிர் உனக்குமிருக்கிறது. நான் அவருக்கு எதிரி இல்லை. பிடிவாதம், கொள்கைப் பிடிப்பு போன்ற குணங்கள் தான் அவருக்கு எதிரி. அவர் எனக்கு தலைமை தாங்கும் தகுதி இருப்பதாக சிறிதும் நம்பவில்லை. கிழவர் என்னை அவர் ஆசிரமத்தில் பணி செய்ய அழைத்தார். அங்கு போய் நான் என்ன செய்ய? கழிவறைகளை சுத்தம் செய்யவா? கிழவர் உண்மையில் ஒரு சர்வாதிகாரி. எத்தனை மணமான இளம் தம்பதிகள் அவர் பேச்சைக் கேட்டு பிரம்மச்சரிய விரதம் பூண்டு தங்கள் வாழ்க்கையை நாசம் செய்தார்கள் தெரியுமா."

வாதம் தேவையில்லாமல் வளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து நான் பேசாமல் மௌனம் காத்தேன்.

"சரி. நான் தான் என் அப்பா பேச்சைக் கேட்கவில்லை. நீயாவது என் விருப்பத்தை மதித்து நடக்கலாம் அல்லவா."

"என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?"

எனக்கு உதவியாக நீ அரசியலில் நுழைய வேண்டும். எனக்குப் பிறகு என் வாரிசாக இந்த நாட்டை ஆள வேண்டும்."

"வாரிசு அரசியலைக் கொண்டு வந்து ஜனநாயகத்தைப் பலியிடுகிறீர்கள். மேலும் எனக்கு அரசியலில் விருப்பமில்லை. என் ஆர்வம் அறிவியல் மீது தான்."

"அது தான் சென்ற வருடம் அறிவியலுக்கு நோபல் பரிசு வாங்கி விட்டாயே. இதற்கு மேல் நீ அறிவியலில் என்ன சாதிக்க வேண்டும்."

"என் அறிவியல் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் ஒரு இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறேன். மேலும் நான் நாளையே அமெரிக்கா செல்கிறேன்."

"ஒரு மாதம் இருந்து விட்டு செல்வதாக சொன்னாயே."

"இங்கு எனக்கு வசதிப்படவில்லை. நான் போகிறேன்."

இந்தியாவில் மேலும் இருந்தால் அப்பாவின் வற்புறுத்தல் அதிகமாகும் என்பது தான் உண்மையான காரணம் என்று நான் சொல்லவில்லை. 

அப்பா என்னைப் பலவாறு பேசி அரசியலில் இழுக்கப் பார்த்தார். நான் பிடி கொடுக்கவில்லை. அவர் அறையை விட்டு வெளியே வந்ததும் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தேன். சிறிது நேரம் என் தாய் மற்றும் உறவினருடன் பேசி விட்டு உறங்கினேன்.

                             --------**********---------

அடுத்த நாள் விடிகாலை கிளம்பி விமானப் பயணம் மூலம் அமெரிக்காவின் சன்னிவேல் நகரம் வந்தேன். 

இரண்டு மாதங்கள் முழுமூச்சாக என் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினேன். என் ஆராய்ச்சி பற்றி நான் இது வரை உங்களிடம் கூறவில்லை.

நாம் வாழ்வது நட்சத்திரங்கள், கிரகங்கள் நிறைந்த இந்தப் பிரபஞ்சம் என்பதை நன்கறிவோம். குவாண்டம் இயற்பியல் தலையெடுத்தப் பிறகு இது போல பல பிரபஞ்சங்கள் இருக்கின்றன என்று சில அறிவியலாளர்கள் உறுதியாக நம்பத் தொடங்கினர். அது மட்டுமல்ல இதில் சில பிரபஞ்சங்கள் அச்சாக நமது பிரபஞ்சம் போல இருக்கும் சாத்தியக்கூறும் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. அங்கும் பூமி என்னும் ஒரு கிரகம் இருக்கலாம். அங்கு மனிதர்கள் இருக்கலாம். உங்களையும் என்னையும் போன்ற ஒரு மனித நகல் அந்த உலகில் இருக்கலாம். நீங்கள் இப்போது இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருந்தால் உங்கள் நகலும் அந்த உலகில் இந்தக் கதையைப் படிக்கலாம். எல்லாப் பிரபஞ்சங்களும் ஒன்றாக ஒரே விதமாக இருக்க வேண்டும் என்பதில்லை. சில பிரபஞ்சங்கள் நம் பிரபஞ்சங்களிலிருந்து சிறிதளவு மாறுபடலாம். இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால் மாற்றுப் பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருக்கலாம். இதெல்லாம் வெறும் கட்டுக் கதை அல்ல. அறிவியல் கோட்பாடுகள் மீது எழுப்பப்பட்ட கருத்துக்கள்.                                            

அடுத்த சில மாதங்கள் ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்..


என் தந்தையிடம் அவ்வப்போது தொடர்பில் இருந்தேன். அவர்  கட்சி தேர்தலில் படு தோல்வி அடைந்திருந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரஞ்சித் பிரதமராகியிருந்தான்.


மாதங்கள் கழிந்து ஒரு நாள் அப்பா என்னை தொலைபேசியில் அழைத்தார். ரஞ்சித் ஒரு பெரும் ஊழல் புகாரில் மாட்டியிருந்தான். நீதிமன்றம் அவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருந்தது. அப்பாவின் குரலில் பழைய உற்சாகம் தெரிந்தது. மீண்டும் தேர்தலை அறிவிக்க அவர் ஒரு போராட்டம் நடத்தவிருப்பதாகக் கூறினார். என்னை இந்தியாவிற்கு வந்து அவருக்கு உதவும்படி வற்புறுத்தினார். நான் அவருக்கு தெளிவான வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை.


என் ஆராய்ச்சி முடிவடைந்தது. என் தந்தையிடம் பேச வேண்டும் என்று தோன்றியதால் தொலைபேசியில் அழைத்தேன்.


அப்பா - "ரஞ்சித் எமெர்ஜென்சி சட்டம் அறிவித்து விட்டான். எதிர்க்கட்சியினர் பலர் மர்மமான முறையில் இறந்து விட்டனர். என் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம். உன்னையும்  உளவுத்துறை மூலம் கொல்ல முடிவு செய்திருப்பதாக நான் அறிந்தேன். என்னை பற்றிக் கவலைப்படாதே நீ ஜாக்கிரதையாக  இரு."


அப்பா பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கி சத்தம் கேட்டது.

"ரசிக் பத்திரம்" - என்பது தான் அவர் கூறிய கடைசி வார்த்தைகள். தொலைபேசியின் மறுமுனை துண்டிக்கப்பட்டது.


என் தந்தையின் மரணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுஏதோ ஒரு குற்ற உணர்வு என்னை உலுக்கிக் கொண்டிருந்தது. 27  ஆண்டுகள் முன்னரே அப்பாவின் அழைப்பை ஏற்று அவருக்கு துணையாக அரசியலில் நான் ஈடுபட்டிருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்குமா? அவர் எடுத்த பல தவறான முடிவுகளை நான் எடுத்துக் கூறி மாற்றியிருக்க முடியுமா? என்றெல்லாம் சிந்தனை சென்றது

எனக்கு உயிர் வாழ்வதில் ஆர்வம் குறைந்தது. மாற்று பிரபஞ்சத்திற்கு செல்ல நான் செய்த முடிவை மாற்றினேன். என் மரணத்தை எதிர்கொள்ள தயார் ஆனேன்அஎனக்கு நான் மட்டுமே, வேறு யாரும் இல்லை என்ற உண்மை வலித்தது. அப்போது தான் என் வாழ்க்கையை கதையாக எழுத வேண்டும் என்று தோன்றியது. மூன்று பகுதிகளாக என் கதையை எழுத முடிவு செய்தேன்.


இரண்டு நாட்களாக என் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். முகதை முடியும் தருவாயில் இருக்கிறது. நேரம் நள்ளிரவை நெருங்கியது. வெளியே யாரோ கதவை தட்டு ம் சத்தம் கேட்டது. என் முடிவு நெருங்குவதை நான் மனதில் உணர்ந்தேன். கதவை உடைத்து ஒருவன் உள்ளே வந்தான். அவன் கையில் துப்பாக்கி இருந்தது. நான் அவனை ஒரு கணம் பார்த்தேன். அவன் முகம் உணர்ச்சியற்ற கல் போல இருந்தது. நான் எழுதுவதை தொடர்ந்தேன். வந்த மனிதன் துப்பாக்கியை இயக்கினான்.


ஒரு தோட்டா என் நெற்றிபொட்டை நோக்கி சீறி வருகிறது.


பட்.


                                           நம் உலகம்

                                               2024

ஒரு கடை முன் பெரும் கூட்டம். கடையிலிருந்த டிவியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச் ஒளிபரப்பு செய்ததை கூட்டத்தினர் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைய, கூட்டத்தினர் கோபத்தில் கத்திக் கொண்டே கலைந்தனர்.


"எனக்கு வரும் கோபத்தில் பாகிஸ்தான் என்ற நாடே இல்லாத வண்ணம் செய்ய வேண்டும் போல இருக்கிறது."


"பாகிஸ்தான் என்ற நாடே இருந்திருக்காது. எல்லாம் அந்த காந்தியால் தான்."

"காந்தி மட்டுமா காரணம். நேருவும் தான். நேரு மட்டும் பிரதமராகமல் இருந்தால் நாம் எப்போதோ வல்லரசாகியிருப்போம்."


"கவலைப்படாதே. மோடி நம் கனவை எல்லாம் நனவாக்குவார்இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது.”


                                        ——-********==========