Wednesday, December 25, 2019

கதை சொல்லி தேவதை - சிறுகதை



                                                       கதை சொல்லி தேவதை 

மீனு குட்டிக்கு சில நாட்களாக  இரவில் தூக்கம் வருவதில்லை. அவள் இப்போது தனியாக உறங்குகிறாள். ஏழு கழுதை வயசாயிற்று இனிமேல் எங்களுடன்  படுக்க கூடாது  என்று அம்மா கண்டிப்பாக சொல்லி விட்டாள். ஏழு கழுதை வயசெல்லாம் இல்லை, ஆறு வயது தான் ஆகிறது என்று மீனு எதிர்வாதம் செய்வாள்.

முன்பு இரவு எட்டு மணிக்கெல்லாம் மீனு படுக்கைக்கு வருவாள். அப்பா வந்து கதை சொல்வார். கதை சொல்லும் போது மீனுவின் கற்பனை விரியும். கதையின் உலகத்துக்கு சென்று விடுவாள். கதை முடியும் தருவாயில் மீனுவிற்கு தூக்கம் வந்து விடும். எப்போதும் கதையின் முடிவு என்னவென்று மீனுவிற்கு தெரியாது. அதற்கு முன்பே கண் அசந்து விடுவாள். இது  மீனு பிறந்ததிலிருந்து நடக்கும் சம்பிரதாயம். இப்போது எல்லாம் மாறி விட்டது.

சொல்லப் போனால் மீனு இரவுகளில் ஏங்குவது தாய் தந்தையின் அணைப்பை  விட, கதைகளைத்தான். ஒவ்வொரு இரவும் அக்கதைகளே அவளை உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது. 

சில சமயம்  மீனு நடு இரவில்  அவள் பெற்றோர் அறைக்குச் சென்று அவர்கள்  நடுவே படுத்து கொள்வாள்.  அடுத்த நாள் அவள் செய்த தவறிற்கு அம்மா கடிந்து  தண்டனை கொடுப்பாள்.

ஒரு நாள் மீனுவின் தந்தைக்கு அவள் பள்ளியிலிருந்து  அழைப்பு வந்தது. உடனே பள்ளிக்கு வருமாறு தலைமை ஆசிரியர் சொன்னார்.  அப்பா என்னவோ ஏதோவென பயந்து பள்ளிக்கு செல்ல, தலைமை ஆசிரியர் சிடு சிடுவென கடிந்தார்.

"மீனு இப்போது பள்ளியில் கவனமாக இருப்பதில்லை. கடைசி பெஞ்சில் அமர்ந்து தூங்கி விடுகிறாள். வீட்டில் என்ன தான் நடக்கிறது. அவளுக்கு இரவில் சரியான உறக்கம் இருக்கிறதா."

"அவளை இப்போது தனியாக படுக்க வைத்திருக்கிறோம். அவள் உறங்குகிறாளா என்று தெரியாது."

"நல்ல பெற்றோர் நீங்கள். பிள்ளையை முதன் முறையாக தனியாக படுக்க பழக்கப்படுத்துகிறீர்கள். அவளுக்கு சரியான உறக்கம் இருக்கிறதா என்று கூடவா உறுதி செய்ய மாட்டீர்கள்."

"சாரி மேடம். இனிமேல் இந்த தவறு வராது."

அன்று மாலை வீட்டில் அம்மாவும் அப்பாவும் மீனுவைப்  பற்றி விவாதித்தார்கள். முடிவில் அப்பா மீனுவை  உறங்க வைத்து, சென்று விடுவது என்று முடிவாயிற்று,  அன்று இரவு அப்பா மீனு  அருகில் படுத்தார்.

"அப்பா நீங்கள் எனக்கு கதை சொல்லுங்கள் நான் உடனே உறங்கி விடுவேன். அதன் பின் நீங்கள் போகலாம்"

"என்ன கதை. நீ சின்ன பெண்ணா, கதை சொல்வதற்கு. நம் வீட்டில் எத்தனை புத்தகங்கள் இருக்கிறது. தினமும் ஒரு கதை படி. தூக்கம் தானாக வந்து விடும்."

மீனு ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். அப்பா படுக்கையை  விட்டு எழுந்தார்

"ஆபீசில் நிறைய வேலை. எனக்கு டயர்டாக இருக்கிறது. நான் போகிறேன். நீ சமர்த்தாக தூங்க வேண்டும் சரியா."

அப்பா விளக்கை அணைத்து சென்று விட்டார்.

பிறகு இரவின் நிசப்தம் சூழ்ந்தது. மீனு புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வரவில்லை. 

திடீரென  மீனுவிற்கு யாரோ  முதுகை மெலிதாக வருடுவது போன்ற உணர்வு. அம்மாவாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். இத்தனை நாட்களாக தன்னை பார்க்க வராத அம்மாவிற்கு இன்று என்ன திடீர் பாசம். தன் செல்ல கோபத்தைக் காண்பிக்க வேண்டும் என்று அவள் பக்கம் திரும்பவில்லை. இத்தனை நேரம் அம்மா பேசாமல் இருக்க மாட்டாள். மெல்ல திரும்பிப் பார்த்தாள். ஒரு அழகான பெண், தான் புத்தகத்தில் பார்த்த தேவதை போன்றவள் அருகில் அமர்ந்திருந்தாள்.  மீனு பயத்தில் கத்த நினைத்தாள். தேவதை மீனுவின் வாயை தன் கைகளால் பொத்தினாள்.

"நீ யார். எப்படி வீட்டிற்குள் நுழைந்தாய். என் அம்மாவை கூப்பிடுவேன். " 

"பயப்படாதே மீனு. நான் ஒரு தேவதை. உனக்கு உதவ வந்திருக்கிறேன்.”

"தேவதைகள் எல்லாம் கதையில் தானே வருவார்கள். நிஜத்திலுமா?"

"ஆம்! நிஜத்திலும் தேவதை இருக்கிறார்கள். என்னிடம் சில சக்திகள் இருக்கின்றன. அந்த சக்தியைக் கொண்டு மனிதர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு உதவுவுதுதான் என் பணி.  என்னால், உறக்கமற்ற குழந்தைகளுக்கு  சுகமான நித்திரை அளிக்க முடியும்."

"அது எப்படி'"

"என் இனத்திற்கு கதைசொல்லி  என்று பெயர் உண்டு. தூக்கம் வராத குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைக்கும் சக்தி எங்களுக்கு உண்டு."

"நீ எந்த கிரகத்திலிருந்து வருகிறாய் தேவதை."

"எங்களுக்கென்று தனியாக ஒரு உலகம் கிடையாது. இந்த பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் குழந்தைகள் உள்ளதோ அங்கெல்லாம் நாங்கள் தோன்றுவோம்."

"கதை சொல்லும் கலையை நீங்கள் தான் உருவாக்கியதா."

"அது தெரியவில்லை. இந்த உலகமே ஒரு கதை தான். நீ, நான், நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் எதுவுமே உண்மையல்ல. நம்மை படைத்த இறைவனின் மூன்று வடிவங்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லும் கதையின் பாத்திரங்கள் மட்டுமே நாம். நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே அக்கதையின் நிகழ்வுகள் தான். இப்படி ஒரு நம்பிக்கை எங்கள் இனத்தில் உண்டு."

"நீ நன்றாக கதையும் விடுகிறாய் தேவதை."

தேவதை நகைத்தது.

"என்ன விதமான கதைகள் நீ சொல்வாய்."

"மனிதர்களிடையே புழங்கும் எல்லா கதைகளும் நாங்கள் அளித்தது தான்.  மனிதனுக்கு ஆதி காலம் முதல் கதைகள் சொல்லி வருகிறோம். உங்களிடையே புழங்கும் மகாபாரதம் புராணங்கள் நாங்கள் உங்கள் முன்னோர்க்கு அளித்தது தான்.”
  

"உனக்கு மகாபாரதம் கதைகள் தெரியுமா. அப்பா எப்போதும் சயின்ஸ் பிக்ஷன் அல்லது சாகசக் கதைகள் சொல்வார். அம்மா எப்போது இளவரசி கதைகள். நான் மகாபாரதக் கதைகள்  கேட்டால், அதெல்லாம் பாட்டி சொல்லும் கதைகள் என்று மறுத்து விடுவார்கள். எனக்கு தான் பாட்டியே இல்லையே, அதனால் ஒரு மகாபாரதக் கதை கூட எனக்கு தெரியாது. நீ மகாபாரதக் கதை ஒன்று சொல்வாயா?"

"நிச்சயமாக. நான் உனக்கு இன்று அபிமன்யுவின் கதை சொல்கிறேன். கேள்."

தேவதை கதை சொல்லியது. முடிந்தவுடன் மீனுவின் நெற்றியில் முத்தமிட்டு மறைந்தது.  மீனு அன்று சுகமாக தூங்கினாள்.”

அடுத்தடுத்த நாட்கள் இரவில் தேவதை மீனுவிற்கு கதைகள் சொல்லியது. கர்ணன், வாலி, அரவான் என்று புராணக் கதைகள் மீனுவிற்கு சொன்னாள். கதை கேட்ட ஒவ்வொரு நாளும் மீனு நிம்மதியாக தூங்கினாள்.   

ஓரிரவு மீனு தன் பள்ளி விஷயமாக ஒரு உதவியை தேவதையிடம்  கோரினாள்.

"நான் இந்த வருடம் பரீட்சைகள் சரியாக எழுதவில்லை. அடுத்த வகுப்புக்கு தேர்வாவது கடினம் என்று தான் நினைத்தேன். ஆனால் தலைமை ஆசிரியர் எனக்கு ஒரு வாய்ய்பு தருவதாக கூறினார். தேசிய அளவில் குழதைகளுக்கு கதை எழுதும் போட்டி வைக்கிறார்கள். இத்தனை வருடங்கள் எங்கள் பள்ளியிலிருந்து ஒருவர் கூட தேர்வாகவில்லை. இந்த வருடம் யார் முதல் மூன்று இடங்களுக்குள் வருகிறார்களோ  அவர்கள் அடுத்த வகுப்பு சொல்வது உறுதி என்று கூறினார்கள். ஏற்கனவே உள்ள புராண கதைகளாக இல்லாமல் புதுமையாக இருக்க வேண்டும் . நீ தான் அதற்கு உதவ வேண்டும்."

"மீனு நான் உதவ முடியாது. உன்னிடம் ஒரு உண்மை நான் கூற வேண்டும். தேவதைகளாகிய நாங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்வது தூங்க வைப்பதற்கு மட்டுமல்ல. முதல் இலட்சியம் எங்கள் இனத்தை பெருக்குவது. அதாவது எங்களை போன்ற கதை சொல்லிகளை உருவாக்குவது. இத்தனை நாளாக உனக்கு கதை சொல்லியது உனக்கு நடத்திய பயிற்சி மட்டுமே. பயிற்சி முடிவடைந்து விட்டது. உன் பள்ளியில் நடக்கும் கதை எழுதும் போட்டி, உண்மையில் எங்களின் ஏற்பாடு தான். இத்தனை நாள் நடந்த  பயிற்சியின் முடிவாக நாங்கள் உனக்கு நடத்தும் தேர்வு அது. அதனால் கதை முற்றிலும் உன் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். என் வாழ்த்துக்கள் உனக்கு."

"தேவதை இனிமேல் நாம் சந்திப்போமா."

"இல்லை. இன்று தான் கடைசி நாள். போட்டியில் நீ வெற்றி பெற்றால், நான் உட்பட யாரும் கதை சொல்லாமலே உனக்கு  உறக்கம் வரும். இல்லையென்றால் வாழ்நாள் முழுதும் உறக்கமற்ற இரவுகளினால் நீ வருந்துவாய்"

தேவதை மறைந்தாள். அவள் சென்ற பின் அன்று மீனு உறங்கவில்லை. தான் எழுதப் போகும் கதையின் நினைவாகவே இருந்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. மீனுவின் தந்தைக்கு பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது.

"வாழ்த்துக்கள். உங்கள் பெண் தேசிய அளவில் நடந்த கதை எழுதும் போட்டியில் முதலாவதாக வந்திருக்கிறாள். கதையை நானும் படித்தேன். கதையின் தலைப்பு கதைசொல்லி தேவதை. தூக்கமற்ற குழந்தைகளுக்கு ஒரு  தேவதை  கதை சொல்லி தூங்க வைப்பதாக கதை அமைந்திருந்தது. அற்புதமான கற்பனை. பள்ளியில் எல்லோரும் உங்க பெண்ணை கதை சொல்லி  தேவதை என்று அழைக்க ஆரம்பித்திருக்கிரார்கள் இப்படிப்பட்ட அதீத திறமைசாலிகளின் இயல்பு வித்தியாசமாக தான் இருக்கும். நாம் தான் ஒரு கண்ணாடி பொருளை பாதுகாப்பது போல பேண வேண்டும்."

அன்றிரவு வழக்கம் போல அப்பா தூங்க வைப்பதற்கு வந்தார்.

"மீனு. நீ தனியாக படுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பாய். எனக்கும் சில மாதங்களாக உறக்கம் சரியாக இல்லை. அலுவலகத்தில் பல சிக்கல்கள். இரவு என்னென்னவோ சிந்தனைகள் ஓடுகிறது. நாம் மூவரும் ஒன்றாக படுத்து கதைகள் சொல்லி தூங்கினோமே, அந்த நாட்களை நினைத்து நான் ஏங்குகிறேன். நீயும் நன்றாக கதை எழுத ஆரம்பித்து விட்டாய். எல்லாம் என் பயிற்சி தானே. இன்று நான் உனக்கு ஒரு கதை சொல்லிவிட்டு போகிறேன். சரியா."

அப்பா கதை சொல்ல ஆரம்பிக்க, மீனு அவர் வாயை தன் கைகளால் மூடினாள்.

"அப்பா, இன்று நான் உங்களுக்கு கதை சொல்கிறேன். நீங்கள் உறங்க வேண்டும்."

மீனு கதை சொல்ல, அப்பா தூங்கி விட்டார். அப்பாவை காணாமல் தேடி வந்த அம்மா விளக்கை அணைத்து விட்டு அவர்களுடனே படுத்து விட்டாள்.

மீனுவுக்கும்  தூக்கம் வந்தது. கதவோரத்தில் தேவதை மீனுவைப் பார்த்து புன்னகைத்து, கைகளை அசைத்து விடை பெற்றது.

சுகமான நித்திரை மீனுவின் கண்களை தடவியது.  









Monday, December 2, 2019

கடைசி முள் - சிறுகதை


                                                                         கடைசி முள்

சிதம்பரத்திலிருந்து 10  கிலோமீட்டர்கள்  தள்ளி இருந்தது கிருஷ்ணன் சாமியின் ஆசிரமம். சுற்றிலும் வயல்கள், உயர்ந்த தென்னை மரங்கள் ஆசிரமத்தை சூழ்ந்திருந்தது. சுகமான தென்றல், பறவைகளின் இனிய கானம் என்று ரம்மியமாக இருந்தது ஆசிரமம். 

பாலன் என்ற நான், கிருஷ்ணன் சாமியை சந்தித்தது இரண்டு மாதங்கள் முன். என் வயது 25 . என் வயதொத்த மற்ற வாலிபர்களிடமிருந்து நான்  மாறுபட்டிருந்தேன். படிப்பு, உத்தியோகம், திருமண வாழ்வு என்ற எந்த கனவுகளும் இல்லாதவனாய் இருந்தேன். ஒரு  தேடல் இந்த ஆசிரமத்திற்கு என்னை  இழுத்து வந்தது.

கிருஷ்ணன் சாமியை சந்தித்த முதல் நாள் எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது. காலை ஆறு மணி இருக்கும்.ஒரு மரத்தின் கீழ் கிருஷ்ணன் அமர்ந்திருந்தார். முகத்தில் பிறந்த குழந்தையின் களங்கமின்மை தெரிந்தது. அவரை சுற்றி பத்து பேர் இருந்தனர். அவர்கள் எல்லோர் முகத்திலும் அப்படியொரு பரவசம்.

ஒரு வசீகரமான சிரிப்புடன்  பேச ஆரம்பித்தார்.

"இன்று நாம் எதை பற்றி விவாதிக்கலாம். யாராவது கேள்வி கேட்கலாமே. அதிலிருந்து தொடங்குவோம்."

ஒரு நடுவயது பெண்மணி கேள்வி கேட்டார்.

"உண்மையான அன்பு என்பது என்ன."

"அன்பு என்பது என்ன. அன்பின்மை என்பது என்னவென்று  தெரிந்தால் அன்பு தெளிவாகி விடுமல்லவா. தன்னை மையமாக கொண்ட எந்த அன்பும் அன்பல்ல. ஒருவர் மீது எந்த வித முன் தீர்மானமும் இல்லாமல், அந்த கணம் தான்அவரை முதன் முதலாக காண்பது போல பார்க்கப் பழகுங்கள். அது தான் அன்பு. ஒருவர் மீது அன்பு கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலேயே அன்பு செலுத்துவது அன்பு."

சுற்றி இருந்தவர் யாரும் அவர் கூறியதை புரிந்ததாகத் தெரியவில்லை. நான் அவரிடம் மறு கேள்வி கேட்டேன். 

"எந்த வித முன் தீர்மானமில்லாமல் ஒருவருடன் எப்படி பழக முடியும். அது சாத்தியமில்லையே."

"நீங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருகிறீர்கள். உங்கள் மனைவி வந்ததும் எரிந்து விழுகிறார். அவருக்கு என்ன பிரச்சினையோ. அன்று நாள் முடிகிறது. அடுத்த நாள் உங்கள் மனைவியை பார்க்கும் போது, நேற்று அவர் நடத்தையின் எந்த விதமான பிம்பமும் இல்லாமல் உங்களால் அவரை பார்க்க முடியுமா. முடியும். முயன்று பாருங்கள். மிக எளிதான விஷயம்."

நான் பல தத்துவ, ஆன்மீக புத்தகங்கள் படித்திருக்கிறேன். பல துறவிகளிடம் பேசியும் இருக்கிறேன். அவர்கள் எல்லோரையும் விட கிருஷ்ணன் வேறு தளத்தில் இருப்பதாக எனக்கு தோன்றியது. இவர் துறவியோ, தத்துவ ஞானியோ கிடையாது. புத்த பிரான் மறு அவதாரம் செய்து என் முன் அமர்ந்திருப்பதாகவே எனக்கு தோன்றியது.

மற்றவர்களுடன் கிருஷ்ணன் சாமியின் உரையாடல் தொடர்ந்தது. முடிந்த பின் வந்திருந்த அனைவரும் கலைந்து சென்றனர். நான் மட்டும் அமர்ந்திருந்தேன். கிருஷ்ணன் கேள்வியுடன் என்னை நோக்கினார்.

"இன்று முதல் நீங்கள் தான் என் குரு. நான் உங்களுடனேயே இருந்து விடுகிறேன்."

"நான் யாருக்கும் குரு இல்லை. எந்த குருவாலும் ஒரு மனிதனுக்கு வழி காட்டியாக இருக்க முடியாது. பாதையை நீயே தேடி கண்டுபிடிக்க வேண்டும்.   நீ என்னுடைய சக பயணியாக  வேண்டுமானால் இருக்கலாம்.  என்னுடைய உரையாடல்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம் என்று ஒரு எண்ணம். அதற்கு நீ உதவலாம்."

நான் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.

கிருஷ்ணன் சாமியை மிக அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் சொல்வதை வாழ்ந்து காட்டும் மனிதராகவே இருந்தார். உறவுகளினால் ஏற்படும் மன சலனங்கள்  அவரிடம் சிறிதும் இல்லை. யார் மீதும் கோபம் கொண்டு வன்மம் பாராட்டுவதும், அன்பு காட்டுவது என்பதன் மூலம் பிறரை கட்டுப்படுத்துவதும் அவரிடம் சிறிதும் நான் காணவில்லை.  பிறர் செய்யும் தவறுகள் தன்னை பாதித்தாலும் அடுத்த நொடியே மறந்து விடுவார்.

ஒரு நாள் அவரை சந்திக்க திருவண்ணாமலையிலிருந்து முதியவர் ஒருவர் வந்தார். அவரிடம் கிருஷ்ணன் சாமி வெகு நேரம் அன்னியோன்னியமாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்த முதியவரிடம் தனியாக பேச  ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டேன். அவர் கிருஷ்ணன் சாமியின் பள்ளி ஆசிரியர்  என்று தெரிந்தது. அவரிடம் கிருஷ்ணன் சாமியின் சிறு வயது வாழ்க்கையை பற்றி விசாரித்தேன்.

"அவன் அப்பொழுதே இப்படித்தான். பாடம்  சொல்லிக் கொடுப்பது  எதுவும் ஏறாது.  தன் பாட புத்தகங்கள் அனைத்தையும் ஏழை சிறுவர்களுக்கு கொடுத்து விடுவான். நான் கோபத்தில்  பல முறை பிரம்பால் அடித்து விளாசியிருக்கிறேன். அடி வாங்கும் போது துடிப்பான். ஆனால் அவனுக்கு என்னிடம் பயம் சிறிதளவும் இல்லை. பயம் மட்டுமன்றி கோபம், வெறுப்பு என்ற எந்த உணர்வும் கிடையாது. "

"ஒரு சமயம் நான் கடுமையான காலரா நோயால் விழுந்தேன். எனக்கு திருமணம் ஆகாதலால்  என்னை கவனிக்க யாருமில்லை. இறந்து விடுவேன் என்றே நினைத்தேன். கிருஷ்ணன் சாமி என்னை தேடி வந்தான். வீட்டிலிருந்து பத்திய உணவு கொண்டு வந்திருந்தான். என் அருகிலே இருந்து என்னை கவனித்தான். நான் இப்போது உயிருடன் இருப்பது அவன் புண்ணியம். இவன் மனிதப் பிறவியே இல்லையப்பா. தெய்வம். இல்லை அதற்கும் மேல்.”

நான் கிருஷ்ணன் சாமியுடன் பல முறை விவாதங்கள் செய்ததுண்டு. நான் கேட்கும் கேள்விகள் அவருக்கு என் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்று கூட வன்முறை பற்றி விவாதித்தோம். போர் பற்றி நான் கேள்வி கேட்டேன்.

"போரே இல்லாத ஒரு சமூகத்தை மனிதன் ஏற்படுத்த முடியுமா?"

"முடியும். ஆனால் அதற்கு முன் மனிதன்  தன்னிடம் இருக்கும் வன்முறையை களைய வேண்டும்."

"சில சமயம் தற்காப்பிற்காவது வன்முறை தேவை அல்லவா. கொலை செய்ய வரும் ஒருவனிடம் வன்முறை மூலம் தானே என்னை காத்துக் கொள்ள முடியும்."

"நன்றாக யோசித்துப் பார். வன்முறை தவிர வேறு வழியே இல்லையா?"

"காந்தி போன்று அகிம்சாவாதியாக இருக்க சொல்லுகிறீர்களா? அவர் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் மூலம் துன்புறுத்தப்பட்ட யூதர்களை வலிந்து மரணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இது நடைமுறைக்கு சாத்தியமா."

"சாத்தியம் இல்லை தான்.  ஆனாலும் வன்முறை இல்லாமல் உன்னை நீ தற்காத்துக் கொள்ள முடியும். அது அந்த சூழ்நிலையில் உன் முன் இருக்கும் எல்லா  தெரிவுகளை பொறுத்தது. அதில் ஒரு தெரிவு வன்முறையற்ற தற்காப்பாக இருக்கும். அந்த நொடியில், அந்த தெரிவை நீ கண்டு பிடிப்பது  தான்  உண்மையான ஞானம். மற்றவை எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகாத வெற்று கோட்பாடுகள் தான்."

"நீங்கள் இது வரை யார் மீதும் வன்முறை கையாண்டதில்லையா. "

"இல்லை. நம்புவது கடினம். ஆனால் அது தான் உண்மை."

கிருஷ்ணன் சாமி மீதிருந்த பிரமிப்பு மேலும் கூடியது.

இவரிடம் காம உணர்வுகள் சிறிதும் இல்லாதது தான் இந்த பக்குவத்திற்கு காரணமா என்று கூட  நான் யோசித்ததுண்டு. எந்தப்  பெண் மீதாவது இவருக்கு மோகம் இருந்ததுண்டா. என் ஐயத்தை அவரிடமே கேட்டேன்.

"காமம் என்பது என்ன அருவருப்பான விஷயமா. அதுவம் அன்பின் வெளிப்பாடு தானே. நான் கன்னித்தன்மையை இழந்தவன் தான். ஐந்து வருடங்கள் முன் மேகி என்று ஒரு பிரிட்டிஷ் பெண் என்னை சந்திக்க வந்தாள். வந்தவள் என்னிடமே தங்கி விட்டாள்.  எங்கள் இருவருக்கும் உடல் ரீதியான ஈர்ப்பு இருந்தது. உடலுறவும்  ஏற்பட்டது. நான் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், எங்கள் உறவை பகிரங்கமாக இந்த உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் அதில் அவளுக்கு சில சிக்கல்கள் இருந்தன. சில நாட்களிலே லண்டன் சென்று விட்டாள். அங்கு அவளுக்கு வேறு ஒருவனிடம்  திருமணமும் நடந்தது. வருடத்திற்கொரு முறை என்னை சந்திக்க கணவனுடன் வருவாள். இன்றளவும் நல்ல நண்பர்களாக எங்கள் உறவு நீடிக்கிறது.”

நான் கிருஷ்ணன் சாமியின் வாழ்க்கை எந்த ஒரு ரகசியமுமற்ற திறந்த புத்தகம் என்று தான் நினைத்து வந்தேன். ஆனால் அது தவறு என்று தெரிய வந்தது. ஆசிரமித்தில் ஒரு அறை பூட்டியே இருந்தது. அந்த அறைக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. வாரம் ஒரு முறை கிருஷ்ணன் சாமி அந்த அறைக்குள் சென்று ஒரு மணி நேரம் கழித்து வருவார். அந்த அறைக்குள் என்ன இருக்கிறது, கிருஷ்ணன் சாமி என்ன செய்கிறார் என்று யாரும் அறியாத மர்மமாக இருந்து வந்தது.

ஒரு நாள் கிருஷ்ணன் சாமி இல்லாத நேரத்தில் அந்த அறையின் சாவியை தேடி எடுத்தேன். அறையை திறந்து பார்த்தேன். ஒரே ஒரு பெட்டி அந்த அறைக்குள் இருந்தது. பெட்டியை  திறந்து பார்த்த போது ஒரே ஒரு புகைப்படம் மட்டும் இருந்தது. 40 வருடங்கள் முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஐந்து வயது சிறுவனும் அவன் மடியில் ஒரு வயது சிறுவனும் இருந்தனர். அதில் ஒருவர் கிருஷ்ணன் சாமியாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன். புகைப்படத்தை அப்படியே வைத்து விட்டு அறையை பூட்டி வெளியே வந்தேன். 

சிந்தனை  முழுதும் அந்த அறையும், அறைக்குள் இருந்த புகைப்படத்தை சுற்றியும் இருந்தது. அறை சாவியின் பிரதி ஒன்றை தயாரித்து கொண்டு உண்மையான சாவியை அதன் இருப்பிடத்திலையே வைத்தேன். 

ஒரு நாள் கிருஷ்ணன் சாமி ரகசிய அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டதை கவனித்தேன். நான் அறையின் கதவை திறந்து உள்ளே என்ன நடக்கிறது என்று கவனித்தேன்.  புகைப்படத்தை கைகளில் வைத்துக் கொண்டு  கிருஷ்ணன் சாமி  அழுதுக் கொண்டிருந்தார். 

கிருஷ்ணன் சாமியை இவ்வளவு  உணர்வு பூர்வமாக நான் பார்த்ததில்லை. கதவை மீண்டும் பூட்டி விட்டு நான் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தேன். பிறகு அன்றிரறவு யாரும் அறியாத வானம் அந்த அறைக்குள் சென்று புகைப்படத்தை எடுத்து  மறைத்து வைத்துக் கொண்டேன்.

அடுத்த நாள் திருவண்ணாமலை சென்று கிருஷ்ணன் சாமியின் ஆசிரியரை சந்தித்தேன். அவரிடம் புகைப்படத்தை காண்பித்தேன்.

"பெரியவன் கிருஷ்ணன் சாமி. சிறியவன் அவன் தம்பி. தம்பி என்றால் கிருஷ்ணனுக்கு அவ்வளவு உயிர். இருவருக்கும் நான்கு வயது வித்தியாசம். தம்பியை ஒரு தாய் போல கிருஷ்ணன் சாமி பார்த்துக் கொண்டான். ஆனால் இரண்டு வயதான போது  தம்பி நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டான். தம்பியின் மரணத்திற்குப் பிறகு கிருஷ்ணன் நடைப் பிணம் போல ஆனான். ஒரு வருடம் யாரிடமும் பேசவில்லை. சரியாக உணவு இல்லை. பள்ளி வருவது முற்றிலும் நின்றது. அவனுக்கு என்ன ஆகுமோ என்று நாங்கள் எல்லாம் பயந்திருந்தோம். திடீரென்று ஒரு நாள் பழைய கிருஷ்ணனாக மாறினான். தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினான். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பெரும் புதிராக இருந்தது.”

நான் பஸ்ஸில் சிதம்பரம் திரும்பிக் கொண்டிருந்தேன்.  கள்ளம் கபடமில்லாத இரு சிறுவர்கள் இருந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த புகைப்படத்தை கிழித்து ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தேன்.

எதுவும் நடக்காத வண்ணம் இயல்பாக ஆசிரமத்தில் உலவி வந்தேன். ஒரு நாள் கிருஷ்ணன் சாமி ரகசிய அறைக்குள் செல்வதை கவனித்தேன். சிறிது நேரத்திலேயே அறையை விட்டு வெளியே வந்தார். அவர் முகம் வெளிறி இருந்தது. அன்று முதல் அவர் யாரிடமும் பேசவில்லை.  உணவு சரியாக சாப்பிடவில்லை. யாரையும் சந்திக்க விரும்பவில்லை. 

நான் அவர் படுக்கை அறைக்கு சென்றேன். உறங்காமல் வெறும் படுத்திருந்தார்.

"உங்கள் பலவீனம் எனக்கு மட்டும் தெரியும்."

அவர் உடல் பதறியது.

"அந்த புகைப்படம். உங்கள் சகோதரனுடன்."

"அதை என்ன செய்தாய். என்னிடம் கொடுத்து விடு." 

கிருஷ்ணன் சாமி என் கைகளை பற்றி கதறினார் .

"அதை நான் கிழித்து விட்டேன்."

"கிழித்து விட்டாயா?"

நானே எதிர்பார்க்காத ஒரு செயலை கிருஷ்ணன் சாமி செய்தார். என்னை பளாரென்று அறைந்தார்.

நான் அவரை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தேன்.

தன்னை மீறிய செய்கை கிருஷ்ணன் சாமிக்கு அதிர்ச்சி அளித்திருக்க வேண்டும். தன் முகத்தை கைகளால் புதைத்துக் கொண்டு அழுதார்.

அவரை வென்ற பெருமிதத்துடன் நான் அங்கிருந்து நகர்ந்தேன்.

அடுத்த நாள் கிருஷ்ணன் சாமி ஆசிரமத்திலிருந்து மறைந்தார். அவர் எங்கிருக்கிறார் என்று யாரும் அறியவில்லை. இமைய மலையில் சுற்றுவதாகவும், குகைகளில் தியானம் செய்கிறார் என்றும் சில வதந்திகள் என் காதுக்கு வந்தன. 

நான் அவர் ஆசிரமத்தை ஒரு பள்ளிக்கூடமாக மாற்றினேன். ஏழை சிறுவர்களுக்கு கல்வி அளித்து வந்தோம். இவ்வாறாக பத்து வருடங்கள் கழிந்தது. நான் கிருஷ்ணன் சாமியை மறந்து விட்டிருந்தேன். 

ஒரு நாள் எனக்கு உதவி செய்து வரும் பணியாள் ஒருவன் கிருஷ்ணன் சாமி புதுவையில் இருப்பதாகவும், மீண்டும் பொது மக்களை சந்தித்து உரையாடுவதாகவும் தெரிவித்தான்.

நான் விசாரித்து கிருஷ்ணன் சாமி இருக்குமிடத்தை அடைந்தேன். 

ஒரு சிறிய வீட்டில் கிருஷ்ணன் தங்கியிருந்தார். வீட்டின் முன் தோட்டம். தோட்டத்தில் வித விதமான ரோஜா செடிகள். நான் மலர்களின் அழகில் லயித்து நின்று கொண்டிருந்தேன்.

"பாலா எப்படி இருக்கிறாய். பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிறது."

ஒரு ரோஜா செடியின் முட்களை கிருஷ்ணன் அகற்றி கொண்டிருந்தார். என்னை அவரருகே வருமாறு அழைத்தார்.

என் உடலில்  சிறு பதற்றம் இருந்தது.

"வா இப்படி அருகில் வந்து உட்கார். சிதம்பரம் வர வேண்டும் என்று பல முறை நினைத்ததுண்டு."

எனக்கு அவரிடம் பேச வார்த்தைகள் சுலபமாக வரவில்லை.

"எவ்வளவு அழகான மலர். ஆனால் அதை சுற்றி முட்கள். இங்கு குழந்தைகள் விளையாட வருகிறார்கள். மலர்களை பறிக்கிறார்கள். அவர்கள் காயப்படக்  கூடாது அல்லவா. தினம் காலை இங்கிருக்கும் செடிகளின் முட்களை அகற்றுகிறேன்."


அந்த செடியின் எல்லா முட்களையும் அகற்றி விட்டார். கடைசி முள் சற்று சிரமமாக இருந்தது. அதை அகற்ற முயல்கையில் கிருஷ்ணனின் விரலை காயப்படுத்தியது. அவரிடமிருந்து கத்தியை வாங்கி அந்த முள்ளை நான் அகற்றினேன்.

"என் மீது உங்களுக்கு கோபம் சிறிதளவும் இல்லையா?"

“பாலா, உன் மீது எனக்கு எப்படி கோபம் வரும். உன் மீது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தான் இருக்கிறது. இந்த ரோஜா செடியின் கடைசி முள்ளையும்  அகற்றியது நீ தானே"

நான் கிருஷ்ணன் சாமியின் கால்களை பற்றியவண்ணம் தேம்பி அழுதேன். கிருஷ்ணன் என்னை கைகளால் தாங்கி அனைத்துக் கொண்டார்.

அன்று நான் முடிவு செய்தேன். என் வாழ் நாள் முழுதும் கிருஷ்ணன் சாமியை விட்டு பிரிய மாட்டேன் என்று.