Friday, April 26, 2024

மாறியிருந்தால்

                                                       மாறியிருந்தால்

                                                                       

இது என் சுயசரிதை. ஒரு கதை என்று கூட சொல்லலாம். நீங்கள் படித்த மற்ற சுயசரிதை அல்லது கதையிலிருந்து இது சற்று மாறுபட்டிருக்கும். நான் இந்தக் கதையில் என் வாழ்வின் மூன்றே ஆண்டுகளை மட்டுமே விவரித்திருக்கிறேன். என் வாழ்வின் முழு சாராம்சமாக இந்த மூன்று ஆண்டுகள் அமைந்துள்ளது. இந்த நாட்டின் சரித்திரத்தின் முக்கியமான திருப்புமுனைகள் இந்த மூன்று ஆண்டுகளில் தான் நடந்தது.

நான் இந்தக்கதையின் முதல் பகுதியை 1922 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறேன். அப்போது எனக்கு வயது ஆறு. இந்த சிறு வயதில் நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் நம் நினைவில் நிற்பதில்லை. ஆனால் எனக்கு இந்த ஆண்டு முக்கியமான வருடம். நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்த பல சம்பவங்கள் என்னுடைய இந்த சிறு வயதில் அரங்கேறியது.

நவம்பர் மாதத்தின் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. சபர்மதி ஆசிரமத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். உள்ளே அப்பாவும் தாத்தாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது என் காதில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. இருவரும் மிகவும் உணர்ச்சிகரமான விவாதத்தில் இருந்தார்கள்.

சிறு வயது முதல் என் அப்பாவை விட தாத்தாவிடம் நான் அதிகம் நெருக்கம் கொண்டிருந்தேன். என் முதிரா வயது கேள்விகளுக்குப் பொறுமையாக தாத்தா பதில் கூறுவார். அப்பா என்னிடம் நேரம் செலவிட்டது மிகவும் குறைவு. இத்தனைக்கும் தாத்தாவுக்கு வேலைகள் அதிகம்.  மோகன்தாஸ் என்பது அவரது பெயர். ஆனால் அவரை அனைவரும் தேசப்பிதா என்று தான் அழைத்தார்கள். அவரைப் பார்க்க நாள்தோறும் மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள். நான் அவரைச் சந்திக்க வந்த பெருந்தலைவர்கள் மடியில் விளையாடிய அதிர்ஷ்டக் குழந்தையாக வளர்ந்தவன். ரசிக் என்ற எனது பெயர் அவர் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்

இந்த உலகத்தை அவர் கண்களின் மூலமாகத் தான் பார்க்கத் தொடங்கினேன். 

என் ஐந்தாவது வயதிலேயே புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்தார். இதிகாசக் கதைகளை எனக்குச் சொன்னார். பின்னாளில் தனிமை உணர்வு என்னைச் சூழ்ந்தபோதெல்லாம் புத்தகங்களை நான் நாடினேன். அதற்கான வித்து தாத்தாவிடமிருந்தே வந்தது.அவர் அரசியல் மற்றும் சரித்திர புத்தகங்கள் அதிகம் படிப்பார். தல்ஸ்தாயின் 'War and Peace’ புத்தகத்தை மிகவும் புகழ்ந்துக் கூறுவார். என்னையும் படிக்கத் தூண்டுவார். ஆனால் என் ஆர்வம் அறிவியல் புத்தகங்கள் மீது சென்றது. தாத்தாவோ அறிவியல் மானுடத்துக்குத் தீங்கு விளைவிக்கும் சக்தி என்றே நம்பினார்.  இதைப் பற்றி அவரிடம் கடுமையான வாக்குவாதங்கள் நான் செய்ததுண்டு.

தாத்தாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டது கொள்கைப்பிடிப்பு. அவரைப் போலவே நானும் எளிதான மனச் சமாதானங்கள் செய்தது கிடையாது. அப்பாவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்த பிறகு, நான் மெளனமாக இருந்தாலும், என் அடி மனதில் நான் தாத்தாவின் பக்கமே இருந்தேன். சத்தியத்தின் உருவான ராஜா ஹரிச்சந்திரனை மனதில் கொண்டே ஹரிலால் என்ற பெயர் அப்பாவுக்கு வைத்தார். அப்பாவோ இதற்கு முற்றிலும் நேர் எதிர். வாழ்க்கையில் கொள்கைகள் உட்பட எதுவும் நிரந்தரம் கிடையாது என்று நினைப்பவர். 

உள்ளே நடந்த விவாதம் மீது என் கவனம் சென்றது.

"ஹரி நீ இப்போது மிக அதிகமாக குடிக்க ஆரம்பித்து இருக்கிறாய் என்று என் மருமகள் கூறினாள். இது நீ எனக்கு அளிக்கும் தண்டனையா. என் மீதுள்ள கோபத்தை இப்படித்தான் காண்பிக்கிறாயா."

"உங்கள் மீது கோபப்படும் தகுதி எனக்கு இருக்கிறதா. நான் வெறும் அற்பன். இந்த உலகில் பிறந்தது வீண். குடித்துக் குடித்து என் அழிவை நான் விரைவில் தேடிக் கொள்கிறேன். என்னைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள் அப்பா. நாட்டைப் பற்றியும் மக்களை பற்றியும் சிந்தியுங்கள்"

"அப்படி என்னால் விட முடியுமா. உன் தேவைகள் என்ன? சொல் என்னால் முடிந்ததை செய்கிறேன்."

"என்னால் இந்த ஆசிரமத்தில் வேலைகள் செய்ய இயலாது தந்தையே. என் திறமைகளை நிரூபிக்கும் சரியான வாய்ப்புகளை எனக்கு அளியுங்கள். மராட்டிய மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் நிற்க  உத்தேசித்துள்ளேன்."

"அது நீ செய்யும் பெருந்தவறாகும். பதவியைத் தேடி ஒருவன் போகக்கூடாது. நம்முடைய தகுதிகளை நாம் வளர்த்துக் கொண்டால் பதவி நம்மைத் தேடி தானே வரும்."

"அப்படியானால் உங்கள் ஆதரவு எனக்கு கிடையாது. அப்படித்தானே."

"நீ என் மகன் என்பதால் உன் மீது நான் பாரபட்சம் காண்பிக்க முடியாது. தலைமைப் பதவிக்கான ஏற்ற நபர் நீ இல்லை."

"உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து ஏது தந்தையே. என் வழியில் நான் செல்கிறேன்."

தந்தை கோபமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.

அவர் செல்வதை தாத்தா கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

                             -------********---------

அன்று மாலை தாத்தாவை சந்திக்க ஜவஹர், ராஜகோபால் மற்றும் முகம்மது அலி  வருவதாக பேச்சு பரவியது. அவர்களுடன் மிக முக்கியமான பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதால் தாத்தா மற்ற உதவியாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

இவர்கள் மூவரின் வரவை நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்ப்பதுண்டு.

ராஜகோபால் பல இதிகாசக் கதைகள் கூறுவார். தாத்தாவை விட மிக சுவையாகக் கதைகளை விவரிப்பார்.

ஜவஹர் மற்றும் முகம்மது அலி வரும் போது அவர்களுடன் டினாவும் வருவாள். அவளுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

நேரம் தவறாமல் விருந்தினர்கள் வந்தனர். அது அவர்கள் தாத்தாவுக்கு காண்பிக்கும் மரியாதை. ஏனென்றால் அவர் நேரம் தவறாமையை தான் நம்பும் அகிம்சைக்கு நிகராகக் கடைபிடித்தார்.

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தோம். பெரியவர்கள் உள்ளே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் நாங்கள் உள்ளேயும் சென்று ஓடிப் பிடித்து விளையாடினோம்.

இது முகம்மது அலிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எங்களை வெளியே சென்று விளையாடுமாறு கடிந்துக் கொண்டார்.

"சிறுவர்கள் தானே அப்படித் தான் இருப்பார்கள். இங்கே வாருங்கள்." என்று தாத்தா எங்களை அழைத்து அன்பாக பேசினார்.

டினா தாத்தாவின் மடியில் அமர்ந்தாள். நான் ஜவஹர் மடியில் அமர்ந்தேன். பெரியவர்கள் தங்கள் விவாதத்தைத் தொடர்ந்தனர்.

அலி - "சத்தியாக்கிரகப் போராட்டம் நீங்கள் எதிர்பார்க்கும் பலனை அளிக்கும் என்று நான் நம்பவில்லை. இதனால் நாடு முழுதும் குழப்பங்கள் ஏற்படும்.  சட்டரீதியாக அணுகி சுதந்திரம் அடைவது தான் சரியான வழி. சத்தியாக்கிரகம் நீங்கள் நம்பும் அகிம்சைக்கு முரண்பாடானது என்று நான் நினைக்கிறேன்"

தாத்தா - "சத்தியாக்கிரகம் அகிம்சையுடன் முரண்பட்டதல்ல. நாம் நம்முடைய எதிரிகளையும் மதிக்கிறோம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். ஆனால் நாம் கோழைகள் கிடையாது. நம் உரிமைகளை நிலைநாட்ட போராட்டம் அவசியம் தேவை. அதற்கான கருவிதான் சத்தியாக்கிரகம்."

அலி - "நீங்கள் கிலாபத் இயக்கத்திற்கு அளித்த ஆதரவு இந்திய இஸ்லாமியர்களை பிளவுபடுத்தி விட்டது. இஸ்லாமியர்களுக்குத் தேவை கல்வி மற்றும் முற்போக்கான சிந்தனை. உங்கள் நிலைப்பாடு இஸ்லாமியர்களை பழமைவாதிகளாக மாற்றி விடும்."

தாத்தா - "நீங்கள் இந்த மண்ணை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. இங்கு மேற்கத்திய நவநாகரீக சிந்தனைகள் அவ்வளவு எளிதாக ஊன்றி விடாது. இந்த பூமிக்கென்று ஒரு ஞான மரபு உள்ளது. அது இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்று எல்லா மதத்தினரையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளது."

ராஜகோபால் - "நீங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நிரூபிக்க நடக்கவிருக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு ஏன் ஜின்னாவை தேர்ந்தெடுக்கக் கூடாது."

தாத்தா - "தலைவரை நான் தேர்ந்தெடுக்க முடியாது. மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்."

ராஜகோபால் - "ஜின்னாவுக்கு எதிராக உங்கள் தரப்பிலிருந்து யாரையும் நிறுத்தாமல் இருப்பீர்களா."

தாத்தா - "தேர்தலில் போட்டி மிகவும் அவசியமானது."

தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மூவரும் தாத்தாவிடம் விடை பெற்றுச் சென்றனர்.

ராஜகோபால் அலியுடன் தனிமையில் உரையாடினார்.

முகம்மது அலி - "மோகன்தாஸ் ஒரு கபடதாரி. தன்னை ஒரு மதச்சார்பற்றவர் என்று காண்பித்துக்கொள்வதெல்லாம் வெறும் நாடகம்."

ராஜகோபால் - "நீங்கள் தலைவர் தேர்தலுக்கு நிற்பது உறுதியா?"

முகம்மது அலி - "இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக நிற்பது என்னுடைய கடமை."

ராஜகோபால் - "மோகன்தாஸின் ஆதரவின்றி நிற்பவர் யாரும் வெற்றி பெற முடியாது. அதுதான் தற்போதைய அரசியல் நிலவரம். நீங்கள் சற்று யோசித்து முடிவெடுக்க வேண்டும்."

பேசியவாறே டினாவை அழைத்துக் கொண்டு  ஆசிரமத்தை விட்டுக் கிளம்பினர்.  

                         ---------***********-----------   

நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது. அம்மா ரொட்டி, தால் சமைத்துக் கொண்டிருந்தார். நான் அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

அரசியல் செய்திகள் அனைத்தையும் தவிர்த்தேன். எனக்கு அவற்றில் ஆர்வம் இருப்பதில்லை. நடுப்பக்கத்தின் ஓரத்தில் ஒரு செய்தி என்னைக் கவர்ந்தது. விஞ்ஞானி ஐன்ஸடீனின் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். செய்தியில் உள்ள அறிவியல் தகவல்கள் பெரும்பாலும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு கேள்வி-பதில் என் கற்பனையைத் தூண்டியது.

கேள்வி - "எதிர்காலத்தில் மனிதனால் காலப்பயணம் செய்ய இயலுமா?"

பதில் - "முடியும். அதற்கான அறிவியல் சாத்தியக்கூறு உள்ளது. எதிர்காலத்திற்கும், சரித்திர காலத்திற்கும் மனிதனால் செல்ல முடியும். ஆனால் அப்படி ஒரு இயந்திரத்தை வடிவமைப்பதற்கான பொறியியல் வல்லமை அசாத்தியமானது. இன்னும் ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் கழித்து அப்படி ஒரு இயந்திரத்தை மனிதனால் உருவாக்க இயலும்."

காலப்பயணம் என்ற வார்த்தை என்னை கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்றது. நூற்றாண்டுகள் கழித்து பாரதம் சுதந்திரம் அடைந்திருக்குமா என்பதைக் காண்பதாக கற்பனை செய்துக் கொண்டேன். சரித்திரக் காலம் சென்று வீர சிவாஜி மன்னருடன் போரிடுவதாகவும், புத்தரை தரிசிப்பதாகவெல்லாம் கனவு கண்டேன்.

என் அம்மாவிடம் சென்று இதைப் பற்றி ஆர்வமாகக் கூறினேன். அம்மாவுக்கு நான் சொல்வதின் மீது கவனம் இல்லை. இருந்தாலும் நான் விடாமல் பேசிக் கொண்டிருந்தேன். அம்மாவிடம் அவள் பத்து வருடங்கள் பின்னால் சென்றால் என்ன செய்வாள் என்று கேட்டேன்.

"உன் தந்தையை மணந்திருப்பதைத் தவிர்த்திருப்பேன்."

அம்மாவின் பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒன்றும் பேசாமல் தலையணையில் முகத்தைப் புதைத்து அழுதேன்.

சிறிது நேரத்தில் அம்மா என் தலைமுடியைக் கோதுவதை உணர்ந்தேன்.

"உன் அப்பா இன்னும் வரவில்லை. நான் சென்று அவரைத் தேடுகிறேன். நீ வீட்டைப் பூட்டி பத்திரமாக இரு."

"எனக்கு பயமாக இருக்கிறது. நானும் வருகிறேன்."   

"நான் எங்கு போவேன் என்று உனக்குத் தெரியும். அங்கெல்லாம் நீ வரக்கூடாது."

நான் அடம் பிடித்ததால் அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

சில தூரம் நடந்தபின் ஒரு மதுக்கடை வந்தடைந்தோம். அங்குள்ளோர் எங்களை விசித்திரமாகப் பார்த்தனர்.

கடையின் ஒரு ஓரத்தில் அப்பா சுருண்டுப் படுத்துக் கிடந்தார். அவரை நானும் அம்மாவும் கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்து படுக்கையில் கிடத்தினோம்.

அவரிடமிருந்து புலம்பல்கள் வந்த வண்ணம் இருந்தது.

"நான் யார். தேசப்பிதாவின் மகன். அவர் தசரதன் என்றால் நான் ராமன். அவர் கிழித்த கோட்டை தாண்ட மாட்டேன். ஆனால் குடிக்க மட்டும் செய்வேன். அதை ஆண்டவனால் கூட தடுக்க முடியாது. அப்பா இது நான் உங்களுக்கு கொடுக்கும் தண்டனை கிடையாது. ஆண்டவனுக்கு கொடுக்கும் தண்டனை."

சிறிது நேரத்தில் அவரிடமிருந்து குறட்டை சத்தம் வந்தது.

நானும் அம்மாவும் அடுத்த அறை சென்று படுத்தோம்.

"அம்மா. உன் மீது நான் கோபம் கொண்டிருக்கக் கூடாது. நீ அப்பாவைத் திருமணம் செய்யாதிருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பாய்."

அம்மா என்னை அணைத்துக் கொண்டார்.

                            ————*********------

சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் பிரார்த்தனை கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது.

காந்தியடிகள் பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளிலிருந்து சில பத்திகள் வாசித்தார்.

அதன் பின்னர் பஜன் பாடல்கள் கூட்டத்திலிருந்தவர்கள் பாடினர்.

இறுதியில் காந்தியடிகள் கூட்டத்தினரை நோக்கிப் பேச ஆரம்பித்தார்.

"இந்த பிரார்த்தனை கூட்டம் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது. நீங்களும் தவறாமல் கலந்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆசிரமத்தில் ஒரு சிறுவன் இருக்கிறான். அவனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும். அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். தாத்தா நீங்கள் தினமும் கடவுளிடம் வேண்டுகிறீர்கள். நம் நாட்டுக்கு சுதந்திரம் தர கடவுளிடமே கேட்டு விடலாமே. எதற்கு சத்யாகிரகப் போராட்டம் எல்லாம். நீங்களும் கஷ்டப்படுகிறீர்கள். மக்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று அந்த சிறுவன் கேள்வி கேட்டான்."

கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர்.

"சிறுவன் மிகவும் புத்திசாலி. நிறைய கேள்விகள் கேட்பான். கேள்வி கேட்பதனால் தானே தெளிவு பிறக்கும். நம் குழந்தைகளை கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் ஆர்வத்தை நாம் முடக்கி விடக் கூடாது. சரி சிறுவன் கேள்விக்கு வருவோம்.  நாம் ஏன் இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நம் தேவைகளைக் கேட்டு பெறுவதற்கா?. இல்லை. பிரார்த்தனை நம் மனதின் ஆழத்தில் உள்ள மிருகத்தை வெளியேற்றுகிறது. கருணை எண்ணங்களின் மூலம் நம் மனதை சுத்தப்படுத்துகிறது. அதனால் நம் போராட்டம் அறப்போராட்டமாக இருக்க வேண்டும். எதிரியை நம் கருணை உள்ளத்தின் மூலம் தொட வேண்டும். அதற்கு பிரார்த்தனை மிகவும் அவசியம்."

காந்தியடிகள் பேசிக் கொண்டிருக்கும் போது உதவியாளர் அவர் காதில் மெதுவாக ஒரு துர் செய்தியைத் தெரிவித்தார்.

"சிறுவன் காணவில்லை."

காந்தியடிகள் அதிர்ச்சியில் உறைந்தார்.

"ஹே ராம். இன்னும் எவ்வளவு சோதனைகள் எனக்குத் தரப் போகிறாய்."

                       -------********-------



அடுத்த நாள் காலை அப்பா காணவில்லை. அம்மாவும் நானும் தேடித் பார்த்து எந்தப் பலனுமில்லை.

ஒரு வாரம் கழிந்ததும் அப்பா வீடு திரும்பவில்லை. அம்மா மிகவும் துவண்டுப் போயிருந்தாள். என்னுடன் சரியாகப் பேசவில்லை. அது எனக்கு மிகவும் வலித்தது. அம்மாவுக்கு அப்பா வேண்டும். எனக்கு அம்மா வேண்டும். அதற்கு நான் அப்பாவைத் தேட வேண்டும்.

"அப்பாவுடன் வருகிறேன்", என்று என்னுடைய குழந்தைத்தனமான எழுத்தில் அம்மாவுக்கு தெரிவித்து விட்டு கிளம்பினேன்.

தெருவெங்கும் அலைந்தேன். ரயில் நிலையத்தை வந்தடைந்தேன். அங்கும் தேடி அப்பா காணவில்லை. ஒரு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தேன். பசி மயக்கம் கண்ணை அடைத்தது. ரயில் கிளம்பியது கூட தெரியாமல் படுத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் என்னை டிக்கெட் பரிசோதகர் எழுப்பினார். ஏதோ கேட்டார். என்ன கேட்டார். என்பதை புரியாத நிலையில் இருந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் பரிசோதகரிடம் ஏதோ பேசினார். அவர் பணம் கொடுத்ததும் சென்று விட்டார். நான் மீண்டும் மயக்கத்தில் விழுந்தேன்.

மீண்டும் என்னை யாரோ எழுப்பினார்கள். பக்கத்தில் அமர்ந்திருந்த சீக்கியர் எனக்கு உணவளித்தார். அசுரப் பசி இருந்ததால் உணவை வேகமாக விழுங்கினேன். இன்னும் பசிக்கிறதா என்று அவர் கேட்க நான் தலையாட்டினேன். மேலும் சில சப்பாத்திகள் அவர் கொடுக்க வயிறார சாப்பிட்டேன்.

மீண்டும் தூக்கம் வந்தது. இப்போது நிம்மதியான நித்திரை. எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. கனவு வந்தது. கனவில் அப்பா வந்தார். பிறகு அம்மா வந்தார். உடனே எழுந்தேன். அம்மாவை விட்டு எவ்வளவு நாள் பிரிந்திருந்தேன் என்று எனக்குத் தெரியாது. அம்மாவிடம் போக வேண்டும் போல இருந்தது.

நான் அழ ஆரம்பித்தேன். சீக்கியர் ஏதோ கேள்விகள் கேட்டார். அவர் என்னை சமாதானம் செய்ய முயன்று தோற்றார்.

அவர் இறங்கும் இடம் வந்தது. அவருடன் எனக்கு வர சம்மதமா என்று கேட்டார். ஒரு நிமிடம் குழம்பினேன். அம்மாவின் கண்ணீர் தோய்ந்த முகம் மீண்டும் நினைவில் வந்தது. அப்பா இல்லாமல் எங்கும் போவதில்லை என்று முடிவெடுத்தேன். நான் வருவதில்லை என்பதை தெரிவித்த பிறகு அவர் இறங்கி சென்று விட்டார்.

ஒரு வாரம் ரயில் பயணத்தில் கழிந்தது. இப்போது நான் அழுவதில்லை. வீட்டிற்குத் திரும்பினால் அப்பாவுடன் தான் போக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ரயிலில் பலர் வந்து இறங்கினார்கள். வருபவர்கள் என்னிடம் பரிவாகப் பேசினார்கள். எனக்குப் பிரியமாக உணவளித்தார்கள். ஏன் தனியாக வந்தேன் என்ற அவர்களின் கேள்விகளை மட்டும் தவிர்த்தேன்..

ரயில் இறுதியாக சென்னை நகரத்திற்கு வந்து சேர்ந்தது. மீண்டும் நான் தெருக்களில் அலைய ஆரம்பித்தேன். புரியாத மொழி, புரியாத மனிதர்கள், தெரியாத இடம். ஆனால் அப்பாவைத் தேடும் என்னுடைய உறுதி தளரவில்லை.

எத்தனை நாட்கள் சுற்றினேன் என்று எனக்குத் தெரியாது. பசிக்கும் போதெல்லாம் அன்பான மனிதர்கள் எனக்கு உணவளித்தார்கள்.

அப்பாவின் புகைப்படம் என்னிடம் இருந்தது. அதைக் காண்பித்து அவரை யாராவது பார்த்தார்களா என்று விசாரித்தேன்.

யாருக்கும் தெரியவில்லை. ஒரு மதுக்கடை சென்றேன். அனைவரும் அங்கெல்லாம் நான் வரக்கூடாது என்று துரத்தினார்கள். நான் நகராமல் அழுதுக் கொண்டு அங்கேயே நின்றேன்.

கடைக்காரர் எனக்கு என்ன வேண்டும் என்று விசாரித்தேன். என் தந்தையின் புகைப்படத்தைக் காண்பித்து அவர் எங்கிருக்கிறார் என்று கேட்டேன்.

கடைக்காரர் வியப்புடன் என்னைப் பார்த்தார். 

"இவர் மோகன்தாஸின் மகன் அல்லவா. இவரை ஏன் தேடுகிறாய்."

நான் பதில் ஏதும் சொல்லவில்லை. கடைக்காரர் பலவாறு என்னை விசாரித்தார். நான் அழ ஆரம்பித்தேன்.

"சரி. சொல்கிறேன். ஒரு நாள் இங்கு வந்தார். குடித்து விட்டு மயங்கி விட்டார். நான் அவரை எழுப்பியதும் கன்னியாகுமரிக்கு செல்லும் பேருந்து எப்போது வரும் என்று கேட்டார். நான் பதிலளித்ததும் சென்று விட்டார். அவர் அநேகமாக கன்னியாகுமரி தான் சென்றிருக்க வேண்டும்.

ஒரு நாள் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்தேன். இரவானதால் கூட்டம் கலைந்திருந்தது. சுற்றிலும் மனிதர்கள் யாருமில்லை. நான் கடலின் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வயதான மனிதர் என் அருகில் வந்தமர்ந்தார்.

இந்தியில் என்னுடன் உரையாடினார். நான் யார், என் பெயரென்ன என்று கேள்விகள் கேட்டார்.

என் உண்மைப் பெயரைக் கூறாமல் ராம் என்று பதிலளித்தேன்.

"ஏன் தனியாக இருக்கிறாய்."

"என் அப்பாவைக் காணவில்லை. எனக்கு அப்பா வேண்டும்."

"உன் அப்பா இறந்து விட்டாரா."

"இல்லை எங்களை வேண்டாம் என்று விட்டுச் சென்று விட்டார். அவர் கன்னியாகுமரி சென்றிருக்கலாம் என்று ஒருவர் சொன்னார்."

"சரி. நாம் இருவரும் சேர்ந்து உன் அப்பாவைக் கண்டு பிடிக்கலாம்."

நான் சம்மதித்ததும் என்னை ஒரு பெரிய விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு உறங்கி அடுத்த நாள் கன்னியாகுமரியை நோக்கி ரயிலில் பிரயாணம் செய்தோம்.

மூன்று நாட்கள் கழித்து கன்யாகுமரி வந்தடைந்தோம்.

பெரியவர் - "இங்கு உன் தந்தையை எங்கு தேடுவது."

நான் - "இங்கு மதுக்கடைகளில் தேடலாம். பெரும்பாலும் அங்கு தான் இருப்பார்."

பெரியவரின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

மதுக்கடைகளில் விசாரித்தபோது அப்பா அருகில் ஒரு கிராமத்தில் இருப்பதாக தெரிந்தது. கயல்விழி என்பவருடன் தங்கி இருப்பதாகக் கூறினார்கள்.

அடுத்த நாள் கிராமத்தை நோக்கி ஒரு மாட்டு வண்டியில் பிரயாணித்தோம்.

வழியில் ஒரு கலவரம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. கலகக்காரர்கள் எங்கள் மாட்டு வண்டியை சுற்றி நின்றுக்கொண்டு போக விடாமல் தடுத்தனர்.

கூட்டத்தினர் நடத்திய கைகலப்பில் நான் சிக்கிக் கொண்டேன். என் உடைகள் எல்லாம் கிழிந்தது.  ஒரு மனிதன் என்னை தடியால் மண்டையில் அடித்தான்.

நான் மெதுவாக தடுமாறி நடந்தேன். அருகில் ஒரு குளம் தெரிந்தது. தாகம் எடுத்ததால் குளத்தை நோக்கிச் சென்றேன்.

என் கண்கள் இருண்டது. நான் மயக்கத்தில் ஆழ்ந்தேன்.

கண் விழித்ததும் நான் ஒரு குடிசையில் இருப்பது தெரிந்தது முதலில் பார்த்தது பெரியவரைத் தான். அவர் எப்படியோ என்னைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார். ஒரு மூதாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் கண் விழித்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

நான் - "உங்களிடமிருந்து தப்பலாம் என்று நினைத்தேன். என்னை விட மாட்டீர்கள் போலிருக்கிறதே."

பெரியவர் என் நகைச்சுவையை ரசித்து சிரித்தார்.

"உன் தந்தை இந்த கிராமத்தில் தான் இருக்கிறார். மதுரைக்கு வைத்தியத்திற்காக சென்றிருக்கிறார். நாளை வந்து விடுவார் என்று கூறினார்கள். கவலைப்படாதே எல்லாம் நல்ல விதமாக முடியும்."

அடுத்த நாள் காலை கண்விழித்தபோது யாரோ என் நெற்றியை வருடுவது போன்ற ஓர் உணர்வு.

என் தந்தை அருகிலிருப்பதைப் பார்த்து திகைத்தேன். அவர் கைகளைத் தள்ளிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

அப்பா என்னை அணைத்துக் கொண்டு அழுதார். நான் அவரிடம் பேசவில்லை. என் கோபம் அனைத்தும் கண்ணீராய் வழிந்தது.

அப்பா - "ரசிக் இனிமேல் உன்னையும் அம்மாவையும் விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன். என்னை மன்னித்து விடு."

தாத்தா இரண்டு நாட்களில் மதுரை வருவதை தந்தை தெரிவித்தார். நாங்கள் அனைவரும் தாத்தாவை சந்திப்பது என்று முடிவானது.

நாங்கள் மதுரை வந்தடைந்தோம். தாத்தா வசிக்கும் விடுதிக்கு சென்றோம். தாத்தா தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் அருகில் பாட்டியும் அமர்ந்திருந்தார்.

தாத்தா என்னையும் அப்பாவையும் கண்டதும் எங்கள் இருவரையும் அணைத்துக் கொண்டார்.

"சிறுவனே நீ சேட்டைக்காரன். எங்கள் அனைவரையும் எத்தனை சோகத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்து விட்டாய். விடா முயற்சியுடன் உன் அப்பாவைத் தேடிக் கொண்டு வந்து விட்டாயே."

அப்பா தாத்தாவின் காலில் விழுந்து வணங்கினார்.

"இனிமேல் இது போல செய்வதில்லை என்று உறுதி கொடு. உன் மகனுக்காகவும், உன் மனைவிக்காகவும் இதை நீ செய்தே ஆக வேண்டும். உன்னால் என் மருமகளும் பேரனும் மதுக்கடைகளில் எல்லாம் போவதை அறிந்து மனம் வாடுகிறது."

"உங்கள் சொல்லை நான் எப்போதும் மீறப்போவதில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன் தந்தை. இனி மதுவை நான் தொடப் போவதில்லை."

"மிக்க மகிழ்ச்சி. இதற்குப் பதிலாக நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறு. நீ பயனுடன் உன் வாழ்வை அமைத்துக் கொள்ள என்ன உதவி வேண்டும்."

அப்பா என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பெரியவர் குறுக்கிட்டு - "ஐயா. உங்கள் மகனுக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி கொடுத்தால் நாட்டுக்காக அவரும் உழைக்கும் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா."

"ஐயா நீங்கள் என் மகனையும், பேரனையும் காப்பாற்றியவர். உங்களுக்கு நான் ஆயுள் முழுதும் கடன் பட்டிருக்கிறேன். முதலில் உழைப்பைத் தர வேண்டும். அதற்குப் பிறகு தானே பதவி வரும். ஹரி முதலில் தொண்டாற்ற வேண்டும். தகுதி இருந்தால் அதன் பிறகு பதவி தானே வரும்."

பாட்டி குறுக்கிட்டு பேச முயன்றார். தாத்தாவை சந்திக்க ஜவஹர் வந்ததால் பேச்சு தடைபட்டது.

பாட்டி பெரியவரையும் அப்பாவையும் தனியே அழைத்துப் பேசினார்.

"ஐயா. நான் என் மகனை இனியும் இழக்க விரும்பவில்லை.  ஹீரோவின் நல்வாழ்விற்கு உங்கள் ஆலோசனைகளைக் கூறுங்கள்."

"நீங்கள் ராஜாஜியை சந்தித்து காங்கிரசில் தங்கள் மகனின் எதிர்காலத்தைப் பற்றி பேச வேண்டும்."

அப்பாவுக்கும் பாட்டிக்கும் இது சம்மதமாக இருந்தது. தாத்தாவை சந்திக்க பலர் வந்த வண்ணம் இருந்தனர். என்னுடன் விளையாட, பேச அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.  அதனால் நானும் தந்தையுடன் சென்னைக்குப் பிரயாணம் செய்தேன்.

ராஜகோபாலின் வீட்டில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது.  தாத்தாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் எதுவும் செய்ய இயலாது என்று அவர் கை விரித்து விட்டார்.

அடுத்த நாள் ஒரு திடீர் திருப்பம் நடந்தது. ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து பூனாவில் ஒரு காவல் நிலையம் முழுதாக எரிக்கப்பட்டது. 20 போலீசார் கொல்லப்பட்டனர். ஆங்கிலேயர் குடியிருப்பிலும் வன்முறையாளர்கள் புகுந்து 164 ஆங்கிலேயர்களைக் கொன்றனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடக்கம்.

தாத்தா இதை வன்மையாகக் கண்டித்தார். தனது சத்தியாகிரகப் போராட்டத்தைக் கைவிட்டார்.

ராஜகோபால் தந்தையை சந்திக்க அவர் வீட்டுக்கு அழைப்பு விடுத்தார்.  அங்கு முகம்மது அலி, சுபாஷ் மற்றும் பல தலைவர்கள் ஆலசோனையில் இருந்தனர். அப்பாவையும் பாட்டியையும் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

ராஜகோபால் - "சரித்திரத்தின் முக்கியமான தருவாயில் இருக்கிறோம். நாம் இன்று எடுக்கும் முடிவு இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றும். இன்று நம் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செய்த வன்முறை கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்காக மோகன்தாஸ் நம் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டது முட்டாள்தனமானது. ஆங்கிலேயர்கள் ஜாலியன்வாலாபாக்கில் நடத்திய வன்முறையை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா. அந்தக் காயம் மக்கள் மனதில் இருக்கும் அல்லவா. அதன் பின்விளைவுகள் தான் இன்று நம் மக்கள் நடத்திய வன்முறை. இது தவறு என்றாலும் புரிந்துகொள்ளக் கூடியது. மோகன்தாசின் இந்த முடிவு நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதை இருபது ஆண்டுகள் பின் தள்ளி விடும். இதை இங்கிருப்பவர்கள் ஆமோதிக்கிறீர்களா?"

அனைவரும் ஆம் என்று குரல் கொடுத்தனர்.

"நமது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யத் தான் கூடியிருக்கிறோம். வழக்கம் போல மோகன்தாஸின் எல்லா முடிவுகளையும் நமக்குள் தயக்கம் இருந்தும் ஆதரிப்பது போல இந்த முறை செய்ய முடியாது. அடுத்த மாதம் நடக்கும் கட்சி தலைவர் போட்டிக்கு நம் தரப்பில் ஒருவரை நிறுத்த வேண்டும். அது யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்."

 "மோகன்தாஸின் தரப்பில் ஜவஹர் நிற்கிறார். அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அமோகமாக இருக்கிறது. நம் தரப்பில் வலுவான தலைவர் யாரும் இல்லை."

மேற்கண்ட கருத்தை எல்லா தலைவர்களும் கூறினார்.

ராஜாஜி - "முகம்மது அலியை நம் தரப்பில் நிற்க வைக்கலாம் என்று நான் முன் மொழிகிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கூறுங்கள்." 

"முகம்மது நின்றால் கண்டிப்பாக தோற்பார். அவருக்கு ஹிந்துக்களின் மத்தியில் ஆதரவு மிகக் குறைவு"

ராஜாஜி - "இரண்டு நாட்களுக்கு முந்தைய நிலை அது. இப்போது நிலைமை முற்றிலும் தலைகீழ். மோகன்தாஸ் போராட்டத்தை வாபஸ் வாங்கியது மக்கள் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைமையில் விடுதலை கிடைப்பது நிராசை என்று மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர். இந்த தருணத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகம்மது தலைவர் பதவிக்கு நிற்பார். பொது செயலாளர் பதவிக்கு மோகன்தாஸின் மகன் ஹரிலால் நிற்பார். தேசப்பிதாவுக்கு எதிராக அவர் மகனே நிற்பது நமக்கு பெரும் பலம்."

விவாதத்திற்குப் பின் அனைத்து தலைவர்களும் இதை ஆமோதித்தனர்.

அன்று சென்னை மெரினா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் தலைவர்கள்