Friday, December 9, 2016

நான் அவனில்லை - அறிவியல் சிறுகதை

                           நான் அவனில்லை


ரியா புள்ளி மான் போல உற்சாகத்துடன் குதித்து குதித்து நடந்தாள். அவள் பின் மாறன் புத்தகப் பையை சுமந்தபடி வந்தான். குழந்தை சிறிது நேரத்தில் சோர்வடைந்தது.

"அப்பா கால் வலிக்குது."

மாறன் குழந்தையைத் தன் தோளில் ஏற்றினான்.

மாறன் ஒரு சராசரி மனிதன். அன்பான கணவன். கனிவுமிக்க தந்தை. கடுமையான உழைப்பாளி. பொறுமையான முதலாளி.  நேர்மையான குடிமகன். எளிய நடத்தைக்கும், சிந்தனைக்கும் உரியவன். குழப்பமான உளச்சிக்கலுக்கு இடமளிக்காதவன். இவை ஒரு சராசரி மனிதனுக்குரிய குணாதிசயங்கள் என்றால் மாறன் அதற்கு முற்றிலும் பொருந்தினான்..

எல்லா தந்தையைப் போல குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்பவனும் அவன் தான்.

"கீழே இறக்குங்க அப்பா. நான் பெரிய பெண் எல்லோரும் பார்த்தா சிரிப்பாங்க.

மாறன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. பள்ளியை நெருங்கியதும் குழந்தையை இறக்கினான். விடைப் பெற்றுக் கொண்டு ரியா சிட்டென பறந்தாள்.

வீடு திரும்பி காலை உணவு முடித்து கடை திறக்கக் கிளம்பினான். மதுரையில் ஒரு துணிக்கடை நடத்தி வந்தான்.


மனைவி வனிதாவிடம் விடை பெறும் முன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். அன்றாடம் நடக்கும் விஷயம் தான். வனிதாவுக்கு இதில் ஒரு ஆனந்தம்.

அவன் நடந்து செல்வதையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். மாறன் சாலையைக் கடக்கும் போது அந்த விபரீதம் நடந்தது. ஒரு கார் அவனை அடித்து விட்டு நிற்காமல் சென்றது. அவனைச் சுற்றிக் கூட்டம் கூடியது.

வனிதா பதறியபடி ஓடி வந்தாள். உடனே ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ICUவில் சேர்க்கப்பட்டான். மூளைக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு கோமாவில் இருந்தான்.

மூன்று நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு டாக்டர் கையை விரித்தார். சென்னையில் பிரபல நியூரோ சர்ஜன் சத்யனிடம் சேர்க்கும்படி சொன்னார்.

மாறனின் உணர்வற்ற உடலுடன் வனிதா சென்னைக்குப் பயணமானாள். சிறு நூலெனத் தொங்கும் நம்பிக்கையைத் தொற்றியபடியே.

                         ----------********---------

"குழந்தைக்கு காய்ச்சல் இன்னமும் குறையலை."

ஸ்வப்னா அறைக் கதவினருகே நின்றுக் கொண்டிருந்தாள்.

ஜீவனுக்கு எழுத்து தடைபட்டது சலிப்பளித்தது. எழுதும் போது சுற்றி நடப்பது எதுவும் அவனுக்கு பொருட்டில்லை.


ஜீவன் ஒரு எழுத்தாளன். எழுத்தாளன் என்றதும் அவனைப் பற்றிய பிம்பம் உங்கள் மனதில் எழுந்திருக்கும். அவன் தனிமையானவன். உணர்வுகளின் எல்லைக் கோட்டில் வாழ்ந்திருப்பவன். தன் ஒரு வாழ்க்கையில் பல உலகங்களில் உலாவுபவன். குழந்தையின் பிறந்த நாளைக் கூட மறப்பவன்.

"மருந்து கொடுத்தாயா?"

"ம்"

"இந்நேரம் எந்த டாக்டர் இருப்பார். காலையில் பார்க்கலாம்."

ஸ்வப்னா உணர்ச்சியற்ற முகத்துடன் நகர்ந்தாள்.

ஜீவனால் அதற்கு மேல் எழுத முடியவில்லை. மகள் தியாவின் அறைக்குச் சென்றான். குழந்தை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் நெருப்பாக அடித்தது.

தன் படுக்கை அறைக்குச் சென்றான். அவன் வந்தது தெரிந்து ஸ்வப்னா மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள். ஜீவன் தலையணை சரி செய்தான். படுத்ததும் தன் கதையின் தொடர்ச்சியும், குழந்தையின் நிலையும் போட்டிபோட்டுக் கொண்டு மனதில் அலையோடியது. போட்டி முடிவில் குழந்தை ஜெயித்தது. வைத்திய செலவிற்கு என்ன செய்வது என்று குழம்பினான். அன்று தனக்கு உறக்கமில்லை என்று அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

                        --------********--------


சத்யன் அறைக்கு வந்ததும் தனக்காகக் காத்திருந்த நித்யனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். நித்யன் அதே மருத்துவமனையில் ஒரு சைக்காலஜிஸ்டாக இருந்தார். நேரம் கிடைக்கும் போது இருவரும் தத்துவம், அரசியல், வரலாறு என்று பல விஷயங்களைப் பேசுவார்கள்.

"கோமா ஸ்டேஜில் சீரியஸாக மாறன் என்று ஒரு பேஷண்ட் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆக்சிடெண்டில் மூளைக்கு பலத்த சேதம்.  அவரைப் பரிசோதனை செய்துக் கொண்டிருந்தேன். அதனால் நேரமாகி விட்டது. சரி என்ன விஷயம் திடீரென்று இந்தப் பக்கம்."

"செயற்கை மூளை மாற்றம் பற்றி உங்கள் ஆராய்ச்சி எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள வந்தேன்."

"முற்றிலும் வெற்றிகரமாக முடிந்து விட்டது. நான் முதலில் சொன்ன மாறனுக்கே இதைப் பரிசோதித்துப் பார்க்கலாமா என்று ஒரு யோசனை உள்ளது."

"அருமை. எப்படி இதை சாதித்தீர்கள்."

"முதலில் ஒரு நபரின் மூளையை ஸ்கேன் செய்து அதன் நகலை எடுத்துக் கொள்வோம். மூளையின் ஒவ்வொரு இணைப்பும் துல்லியமாக அந்த நகலில் இருக்கும். பிறகு அதன் மென்பொருள் பிரதி எடுக்கப்பட்டு ஒரு சிப்பில் ஏற்றப்படும். அந்த சிப் மூளை போன்ற வடிவான ஒரு ப்ராஸ்தேடிக் உறுப்பில் வைக்கப்படும். அந்த ப்ராஸ்தேடிக் உறுப்பு ஒரு அறுவை சிகிச்சை மூலம் பேஷன்டில் பொருத்தப்படும்."

"உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம். இந்த செயற்கை மூளை ஒரு மென்பொருள் பிரதி தானே. இது அதன் ஆதாரமான மனிதனின் மூளையின் செயல்பாட்டை அப்படியே ஓத்திருக்குமா?"

"அதிலென்ன சந்தேகம் செயற்கை மூளை பொறுத்தப்பட்டவனும், அதன் அசலான மூளையைக் கொண்ட மனிதனும் ஒரே சந்தர்பங்களில் ஒரே விதமாகத் தான் நடந்துக் கொள்வார்கள்."

"ஒரே விதமான மூளையைக் கொண்டவர்கள் ஒரே விதமாக சிந்திக்கிறார்கள் என்று இதன் அர்த்தமா. அப்படியானால் சிந்தனை என்பது மூளையிருந்து தான் தோன்றுகிறது என்று கூறுகிறீர்களா?"

"ஆம் இது ஒரு குழந்தைக்கு கூடத் தெரியுமே."

"நமது சிந்தனைகளின் தோற்றம் மூளையிலிருந்து இல்லை. நமது மரணத்திற்குப் பிறகும் சிந்தனைகளுக்கு அழிவில்லை. மூளை என்பதை நம் சிந்தனைகள் ஒரு கருவியாகத் தான் பயன்படுத்திக் கொள்கிறது. மரணத்திற்குப் பிறகு அது வேறு ஒரு உடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். நம் இந்து சித்தாந்தங்களில் கூறப்படும் மறு ஜென்மத்திற்கு லாஜிக்கலான விளக்கம் இதுவாகத் தான் இருக்கும்."

"இதெல்லாம் அறிவியல் பூர்வமான விளக்கங்கள் கிடையாது. ஒரு டாக்டராக இருந்துக் கொண்டு நீங்கள் இது போல பேசுவது சிரிப்பாக இருக்கிறது."

"ஒரு விஷயம் தெரியுமா. இருதய நோயாளிகள் இறந்தப் பிறகு அவர்களை உயிர்ப்பிக்க angiotherapy என்ற சிகிச்சை செய்வார்கள். அப்போது நோயாளியின் நெஞ்சை சில கருவிகள் கொண்டு அழுத்துவார்கள். அதில் சிலர் பிழைக்கவும் கூடும். மரணத்தைத் தொட்ட நோயாளி மீண்டும் உயிருடன் வருவார். இவர்கள் சில நிமிடங்கள் இறந்த நிலையிலிருந்து மீண்டு வந்தவர்கள். இறந்த நிலையில் அவர்கள் மூளை தன் செயல்பாட்டை இழந்து, உணர்வுகள் சிறிதும் இருக்கக் கூடாது அல்லவா. ஆனால் அவர்கள் தாங்கள் இறந்திருந்த கணங்களில் தங்களைச் சுற்றி அறையில் என்ன நடந்தது என்று தெளிவாகக் கூறினார்களாம். இதற்கென்ன பதில் சொல்கிறீர்கள்."

"எதற்கு விவாதம். நமக்குள் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். நான் மூளை மாற்றம் செய்யப் போகும் பேஷண்ட் எப்படி நடந்துக் கொள்கிறான் என்பதைப் பொறுத்து இதற்கான முடிவை நாம் அறிந்துக் கொள்ளலாம். நோயாளியும், அசலான மூளைக்கு சொந்தக்காரனும் ஒரே விதமான நடத்தை, குணாதிசயம் உடையவர்களாக இருந்தால் நான் வெற்றி பெற்றேன். இல்லையானால் நீங்கள். சரியா?"

அப்போது ஜீவன் அறைக்குள் வேகமாக நுழைந்தான்.

"என் பெண்ணிற்கு மூளைக் காய்ச்சல். நேற்று தான் அட்மிட் செய்தேன். அவளுக்கு ட்ரீட்மெண்ட் செய்ய 2 லட்சம் கேட்கிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. பணம் கொடுத்தால் தான் ட்ரீட்மெண்ட் என்று சொல்கிறார்கள். நான் 2 மாதத்தில் பணத்தைப் புரட்டி விடுவேன். சிகிச்சையைத் தொடர சொல்லுங்கள்."

சத்யன் ஜீவனை உற்றுப் பார்த்தார்.

"நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்."

"நான் ஒரு எழுத்தாளன்."

சத்யன் சில நிமிடங்கள் சிந்தனையில் இருந்தார்.

"நீங்கள் ட்ரீட்மெண்டிற்கு பணமே தர வேண்டியதில்லை. ஆனால் ஒரு சின்ன பரிசோதனை. அதற்கு நீங்கள் உதவ வேண்டும். உங்களை ஒரு ஸ்கேன் மட்டும் செய்வோம். அரை மணி நேர வேலை. அவ்வளவு தான். "

ஜீவன் ஒத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அறையை விட்டு அகன்றதும் சத்யன் நித்யனைப் பார்த்து சிரித்தார்.

"போட்டி இப்போது ஆரம்பமாகிறது."

                            ------******---------

மாறனுக்கு மாற்று மூளை பொருத்தி ஒரு மாதம் ஆகி உடல் மிகவும் தேறியிருந்தது. இருந்தாலும் வனிதா கவலையில் இருந்தாள். எப்போதும் ஒரு புத்தகத்தைப் படிப்பதும் அல்லது எழுதிக் கொண்டும் இருந்தான். தன்னிடமும், குழந்தையிடமும் நேரம் செலவழிப்பது மிகவும் குறைவு. எப்போதும் சிரித்தபடி, அனைவரையும் சிரிக்க வைக்கும் மாறன் எங்கே தொலைந்துப் போனான் என்று நினைத்தாள். தான் ஒரு அந்நியனிடம் வாழ்க்கைப்பட்டது போல உணர்ந்தாள்.

"அப்பா ஸ்கூலுக்கு நேரமாச்சு. கிளம்பி வாங்க."

மாறன் குழந்தையுடன் கிளம்பினான். ரியா புத்தகப் பையை நீட்ட மாறன் அதை அவள் தோளில் மாட்டினான்.

"எனக்கு தோள் வலிக்கும்னு நீங்க தானே தூக்கிட்டு வருவீங்க. இப்போ ஏன் இப்படி"

"நீ பெரிய பெண் ஆயிட்டே. அதனால் தான்."

சிறிது தூரம் நடந்ததும் ரியா நின்றாள்.

"கால் வலிக்குது அப்பா."

"இன்னும் கொஞ்ச தூரம் தான். நட."

ரியா மாறனை கேள்வியுடன் பார்த்தபடி நடந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் மாறன் உணவருந்தி வெளியே கிளம்பினான்.

"இவ்வளவு நாள் ரெஸ்ட் எடுத்தீங்க. இன்றைக்காவது கடைக்கு போங்களேன். ஒரு மாதமாக நான் தான் வீட்டையும் கடையையும் பாத்துக்கிறேன்."

"நீ போ. எனக்கு வேறு வேலை இருக்கிறது."

மாறன் கிளம்ப, வீட்டு வாசல் வரை வந்த வனிதா அவனிடம் ஏதோ எதிர்பார்த்தாள். அவன் அவளைப் பொருட்படுத்தாமல் செருப்பை மாட்டிக் கொண்டான்.

"நாளை வெளியூர் போகிறேன். வருவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும்."

"என்ன வேலையா போகிறீர்கள்."

"என்னை ஒரு கதை எழுத சொல்லியிருக்கிறார்கள். 20 லட்சம் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். கதை நல்லபடியாக வர வேண்டும் என்று கோவாவில் ஒரு ஓட்டலில் தனியாக தங்கி எழுத சொல்லியிருக்கிறார்கள்."

"புதுசா என்ன கதை எல்லாம். ஒரு புக் கூட முன்னாடி படிக்க மாட்டீங்க. பிசினஸ் பத்தி ஒரு அக்கறையும் இல்லாம ஏன் இப்படி மாறிட்டீங்க. நாம் டாக்டரை மறுபடியும் பார்க்கணும். உங்களுக்கு என்னவோ ஆயிடுச்சு."

மாறன் எதுவும் பேசாமல் தெருவிற்கு சென்று விட்டான்.

வனிதா உடனே டாக்டர் சத்யனை மருத்துவமனையில் சந்தித்தாள்.


"அவர் இப்போ சுத்தமா மாறிட்டார் டாக்டர். ஏதோ மூணாவது மனுஷனோட குடும்பம் நடத்துற மாதிரி இருக்கிறது. அவரைப் பழைய நிலைக்கு மாற்ற முடியாதா."

"உன் கணவனுக்கு மூளை மாற்று சிகிச்சை செய்திருக்கிறோம். அதனால் அவன் ஒரு புது மனிதன். அவன் உயிரோடிருப்பதே பெரிய விஷயம். நீ தான் அடஜஸ்ட் பண்ண வேண்டும். இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறான்."

"எப்போதும் புத்தகம் கையுமாக இருக்கிறார். பிசினஸ் மீது எந்த பொறுப்பும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார். புதிதாக கதை எல்லாம் எழுதுகிறார்."

"எல்லாம் சரி ஆகி விடும். முன்னை விட பெரிய ஆளாக உன் கணவன் வருவான். கவலைப்படாமல் போ."

அவள் சென்றதும் சத்யன் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.
-     
-       ----------***********---------

ஜீவன் என்றுமில்லாத உற்சாகத்துடன் ஸ்வப்னாவிடம் பேசினான்.

"நான் நாளை கோவா போகிறேன். வருவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும். என்னை ஒரு கதை எழுத வாய்ப்பு தந்திருக்கிறார்கள். இருபது லட்சத்திற்கு அக்ரீமெண்ட் போட்டிருக்கிறது. முன் பணம் ஐந்து லட்சம் தந்திருக்கிறார்கள். இதை யாரிடமும் சொல்லாதே. நான் எழுதும் கதை பற்றி பிறரிடம் விவாதிக்கக் கூடாது."

"தியா இன்னும் முழுதாகத் தேறவில்லை. அதற்குள் இப்படித் தனியாக விட்டுச் சென்றால் நான் எப்படி சமாளிப்பது."


"இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. ஒரு கதைக்கு ஆயிரம் கிடைப்பதற்கே அல்லாடிக் கொண்டிருந்தேன். இப்போது லட்சக் கணக்கில் கொடுக்கிறார்கள். நம் பொருளாதார சிக்கல் எல்லாம் தீர்ந்து விடும்."

ஸ்வப்னா ஓன்றும் சொல்லாமல் சமையல் அறை சென்றாள். ஜீவன் தான் எழுதப் போகும் கதைக்கான சிந்தனையில் ஆழ்ந்தான்.

                    ----------**********-------------

ஜீவன் கோவாவின் ராயல் பார்க் நட்சத்திர ஓட்டலில் ஒரு வாரமாகத் தங்கியிருந்தான். கதை மிகவும் அருமையாக உருவாகி வந்தது. தனிமை அதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கடற்கரையில் அமர்ந்து சூரியனின் உதயத்தைப் பார்ப்பதில் நேரம் கழித்தான். அவன் கற்பனைக்கு அது பெரிதும் ஊக்கமாக இருந்தது. அதே நேரம் இன்னொரு மனிதனும் அங்கு அமர்ந்து கடற்கரையை ரசிப்பதைக் கண்டான். இன்று அவனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து அவனை அணுகினான்.

"இது கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடம். அதிகம் ஆள் நடமாட்டம் கிடையாது. நாம் இருவர் மட்டும் இந்த இயற்கை அழகை ரசிக்கிறோம் இல்லையா."

"ஆம். கடலிலிருந்து விடுதலை பெறுவது போன்று சிவப்புப் பந்தாக வெளி வரும் சூரியனின் அழகை, அது வானத்தைப் பல வித வண்ணக் கலவையாக மாற்றும் விந்தையை, பல விதப் பறவைகள் விண்ணில் மலர்ச்சரம் போல பறக்கும் அழகை, குழந்தையைத் தாலாட்டுவது போன்ற கடல் அலைகளை நாம் இருவர் மட்டும் தான் பார்க்கிறோம் என்றால் நாம் வரம் பெற்றவர்கள் ஆவோம்"

இந்தப் பதிலைக் கேட்டு ஜீவன் அதிர்ந்தான். அவனிடம் இதே கேள்வியை யாராவது கேட்டிருந்தால் இந்த பதிலை தான் அவனும் சொல்லியிருப்பான்."

"உங்கள் பெயர் என்ன. நீங்கள் பேசுவதைக் கேட்டால் நீங்கள் கவிஞராக அல்லது எழுத்தாளராக இருக்க வேண்டும்."

"என் பெயர் மாறன். நான் எழுத்தாளர் எல்லாம் கிடையாது. குறிப்பிட்ட எந்தத் தொழிலும் இல்லை. நாடோடி போல சுற்றுகிறேன்."

மாறன் பொய் சொல்கிறானோ என்ற சந்தேகம் ஜீவனுக்கு சந்தேகம் வந்தது.
"என் பெயர் ஜீவன். நான் கணினித் துறையில் வேலை செய்து வருகிறேன்."

"நானும் உங்களை எழுத்தாளர் என்று தான் நினைத்தேன்."

ஜீவன் இதைக் கேட்டு துணிக்குற்றான்.

"இந்த நேரம், இந்த இடத்தில் மணிக் கணக்கில் உட்கார்ந்திருப்பவர் எழுத்தாளராகத் தானே இருக்க வேண்டும்."

பேச்சு போகும் திசை ஜீவனுக்குப் பிடிக்கவில்லை. சத்யனிடம் விடை பெற்றுக் கொண்டு தன் அறை வந்தான்.  ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்த போது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஹோட்டலுக்குள் மாறன் நுழைந்துக் கொண்டிருந்தான். அவனும் இதே ஹோட்டலில் தான் தங்கியிருக்க வேண்டும் என்று புரிந்தது. இவ்வளவு நாளாகக் கண்ணில்படாதது ஆச்சர்யம்.

ஜீவனுக்குத் தான் மேலும் அந்த ஹோட்டலில் தங்கியிருப்பது நல்லதல்ல என்று தோன்றியது. தான் கதை எழுதும் விபரங்கள் ஏதும் மற்றவர்க்குத் தெரியக்கூடாது என்று பதிப்பகத்தில் கூறியிருந்தார்கள். மாறன் முன் தன் ரகசியம் அனைத்தும் அப்பட்டமாகுமோ என்று பயந்தான். தான் நினைப்பது அனைத்தையும் அவன் பிரதிபலிப்பது வியப்பாக இருந்தது.

சிறிது தள்ளி இன்னொரு ஹோட்டலுக்கு மாறினான். அதன் பிறகு அவன் மாறனை சந்திக்கவில்லை. இரு நாட்களில் கதை எழுதி முடித்து சென்னை திரும்பினான். மாறன் அவன் நினைவிலிருந்து முற்றிலும் அகன்றான்.

கதை பதிப்பகத்தாருக்கு மிகவும் பிடித்து விட்டது. 20 லட்ச ரூபாய்க்கு காசோலையும் வாங்கி கொண்டான்.

முதல் முறையாக ஸ்வப்னாவுக்கும் குழந்தை தியாவுக்கும் துணிகள் மற்றும் பரிசுப் பொருள்கள் வாங்கி வீட்டிற்குச் சென்றான். அவர்களை இது பெரிதும் மகிழ்ச்சி அடையச் செய்தது.

                          -----------**********----------

அடுத்த நாள் ஜீவனுக்கு அதிர்ச்சி போன் கால் மூலம் வந்தது. பதிப்பகத்தின் எடிட்டர் மறுமுனையிலிருந்தார். உடனே தன்னைச் சந்திக்க வருமாறு கூறினார்.

பதிப்பகம் வந்ததும் எடிட்டர் கோபத்தின் உச்சியிலிருப்பதை ஜீவன் கண்டான்.

"என்ன கதை எழுதியிருக்கிறீர்கள். இது போலவே இன்னொரு கதை ஒரு வார்த்தை கூட மாறாமல் அப்படியே எங்களுக்கு வந்திருக்கிறது. இது வரை சுமாரான கதைகள் எழுதி வந்தீர்கள். இப்போது அப்படியே இன்னொருவரின் கதையை உருவி இருக்கிறீர்கள்."

"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. இது முற்றிலும் என் சொந்தக் கதை தான்."

"வேறு யாரிடமாவது கதையைப் பற்றி டிஸ்கஸ் செய்தீர்களா."

"இல்லை. கோவாவில் கூட நான் கதை எழுதும் போது தனிமையில் தான் இருந்தேன். யாரிடமும் பேசவில்லை. வெய்ட். இந்த இன்னொரு கதையை எழுதியது யார்?"

"மாறன் என்று ஒரு புது எழுத்தாளர்."

"எனக்கு எல்லாம் விளங்கி விட்டது. உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன். அப்போது அனைவற்றையும் தெளிவாக விளக்குகிறேன். அந்த மாறனின் அட்ரஸ் மட்டும் தாருங்கள்."

"அவர் சொந்த ஊர் மதுரை. கதையைக் கொடுப்பதற்காக சென்னை வந்தார். சைதாப்பேட்டையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார்."

எடிட்டரிடமிருந்து ஹோட்டல் அட்ரஸை வாங்கி கொண்டு ஜீவன் சைதாப்பேட்டை வந்தான். ஜீவன் அறைக் கதவைத் தட்டியபோது வனிதா திறந்தாள்.  மாறன் குளித்து விட்டு வெளியே வந்தான். ஜீவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

"ஜீவன் நீங்கள் எப்படி இங்கே. நான் இருக்குமிடம் உங்களுக்கு எப்படி தெரியும்"

"என்னிடம் நாடகம் ஆடியிருக்கிறாய். உண்மையைச் சொல் நீ ஒரு எழுத்தாளன் தானே. "

மாறன் அமைதியாக இருந்தான்.

"கோவாவில் இருக்கும்போதே எனக்கு உன் மீது சந்தேகம். ஏன் என் கதையைத் திருடினாய்?"

"உன் கதையை நான் எங்கு திருடினேன்? ஏன் இப்படி இருக்கக்கூடாது. நீ என் கதையைத் திருடிவிட்டு இப்போது நேர்மையானவன் போல நடிக்கலாம் இல்லையா."

"நான் இது வரை நூற்றுக்கணக்கில் கதைகள் எழுதியிருக்கிறேன். நீ இதற்கு முன் எத்தனை கதைகள் எழுதியிருக்கிறாய். திடீரென்று எப்படி உன்னால் இந்தக் கதை எழுத முடிந்தது."

"நீ பல கதைகள் எழுதியிருக்கலாம். நான் இதற்கு முன் எழுதாமல் இருக்கலாம். ஆனால் இதை வைத்து ஒருவரின் கற்பனையை எடை போட்டு விட முடியாது.      இந்தக் கதை நான் எழுதியதுதான்."

"உன்னிடம் பேசிப் பயனில்லை. நான் உன் மீது வழக்கு தொடுக்கப் போகிறேன்."

ஜீவன் ஹோட்டலை விட்டு கோபத்துடன் கிளம்பினான். இது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த வனிதா மாறனிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பி டாக்டர் சத்யனை சந்தித்தாள்.

"என் கணவனை நீங்கள் என்ன செய்தீர்கள். அவனுக்கு மாற்று மூளை பொருத்தியிருக்கிறேன் என்று சொன்னீர்கள். அது இறந்துப் போன வேறு ஒருவருடைய மூளையா'"

"நீ கேட்கும் விஷயங்களுக்கு எல்லாம் நான் விளக்கம் கொடுக்க முடியாது. உன் கணவன் நன்றாகத் தானே இருக்கிறான். பிறகு ஏன் இந்த படபடப்பு. "

"மாற்று மூளை சிகிச்சைக்கு அரசிடமிருந்து சட்டப்பூர்வமான அனுமதி வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா. க்ளோனிங் போல இதிலும் பல தார்மீக சிக்கல்கள் இருக்கிறது?"

"நீ என்ன சொல்ல வருகிறாய்."

"என் கணவனின் மாற்று மூளைக்கு சொந்தக்காரன் யார் என்று தெரிய வேண்டும். இல்லையென்றால். நான் அரசாங்கத்திடம் முறையிடுவேன்."

"ஜீவன் என்னும் எழுத்தாளன். அவன் இறக்கவில்லை. உயிருடன் இருக்கிறான். அவன் மூளையை ஸ் கேன் செய்து அதன் நகலைத் தான் மாறனுக்குப் பொருத்தியிருக்கிறோம்."

வனிதா வாசலில் மாறனைப் பார்த்தாள். அவளைப் பின் தொடர்ந்து வந்திருந்தான்.

"உன் கதைக்கு சொந்தக்காரன் ஜீவன். ஏன் என்றால் நீ மாறன் இல்லை. ஜீவன். உன் உடல் வேண்டுமானால் மாறனாக இருக்கலாம். ஆனால் உன் சிந்தனைகள் அனைத்தும் ஜீவன் தான்."

"என்ன உளறுகிறாய் வனிதா."

"உனக்குப் பொருத்திய மாற்று மூளை ஜீவன் மூளையின் நகல்."

ஜீவன் சிலை போல உறைந்தான்.

                       --------*********-----------

அடுத்த நாள் ஜீவன் எடிட்டரை சந்திக்கச் சென்றான்.

"மாறன் நேற்று போன் செய்தான். உன் கதையை காப்பியடித்ததாக ஒப்புக் கொண்டான். அவன் கதைக்கு நாங்கள் அளித்த 20 லட்சமும் உனக்கே கொடுக்குமாறு சொன்னான். முன் பின் கதை எழுதாத கத்துக்குட்டிகளுக்கு இது போல வாய்ப்பு கொடுத்தால் இப்படி தான் நடக்கும் போல. உன்னை சந்தேகித்தற்காக மன்னித்துக் கொள்."

"மாறன் இப்போது எங்கே"

"நேற்றே மதுரை சென்று விட்டான்."

"அவனை நான் சந்திக்க வேண்டும். அவன் மதுரை அட்ரஸ் தாருங்கள்."

அட்ரஸை வாங்கிக் கொண்டு உடனே ஒரு கார் பிடித்து ஜீவன் மதுரை வந்தான். மாறனின் வீடு பூட்டியிருந்தது.

அக்கம்பக்கம் விசாரித்தபோது மாறன் வீட்டைக் காலி செய்து வேறு ஊர் குடியேறப் போய் விட்டதாகக் கூறினார்கள். அவன் கடைக்குச் சென்ற போது மாறனின் தம்பி கடையைத் தன் பெயருக்கு மாறன் மாற்றிவிட்டதாகக் கூறினான்.

                         ----------**********------------- 

சத்யனை சந்திப்பதற்காக நித்யன் வந்திருந்தார்.

"ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தீர்களே?"

"போட்டியில் நான் ஜெயித்து விட்டேன்"

"எந்தப் போட்டி?"


"சிந்தனைகளின் தோற்றம் மூளையா அல்லது வேறா என்று விவாதித்தோம் அல்லவா. அதற்குப் பதில் கிடைத்து விட்டது. என் மாற்று மூளை பேஷண்ட் மாறனின் குணாதிசயங்கள் அப்படியே அசல் மூளையின் சொந்தக்காரனை ஒத்திருக்கிறது. அவனைப் போலவே இவனும் ஒரு கதை எழுதியிருக்கிறான். இருவரின் கதையும் ஒரு வார்த்தை கூட மாறாமல் இருக்கிறது. வேண்டுமானால் இருவரின் கதையும் படித்துப் பாருங்கள்."

"இதில் உங்கள் கை வரிசை இருக்கும் என்று நினைக்கிறேன்"

"எப்படி இல்லாமல் இருக்கும். பதிப்பகத்தின் எடிட்டரை இருவருக்கும் கதை எழுத வாய்ப்புக்கு கொடுக்கச் சொன்னதும், ஆளுக்கு 20 லட்சம் கொடுக்கச் சொன்னதும் நான் தான்."

"இதுவும் உங்கள் பரிசோதனை தான் என்று புரிகிறது."

"தோல்வியை ஒப்புக் கொண்டு நான் இழந்த 40 லட்சத்தைத் திருப்பிக் கொடுங்கள்."

"ஆர் யூ சீரியஸ்."

"அப் கோர்ஸ் ஐ ஆம்."

"செக் எடுத்துக் கொண்டு நாளை வருகிறேன். இப்போதைக்கு பையில் இந்த 20 ரூபாய் நோட் தான் இருக்கிறது. முன் பணமாக வாங்கிக் கொள்ளுங்கள்."

இரண்டு கதைகளையும் வாங்கிக் கொண்டு நித்யன் கிளம்பினார்."

அடுத்த நாள் சந்திக்கும் போது மிகவும் பரபரப்புடன் உற்சாகமாக இருந்தார்.

"சத்யன் யூ லாஸ்ட். கதைகள் அப்படியே ஒத்திருக்கிறது என்று தானே கூறினீர்கள். கடைசி ஐந்து பக்கங்களைப் படியுங்கள். இரு கதைகளின் முடிவும் வேறு. முதல் 250 பக்கங்கள் அப்படியே இருந்ததால் கடைசிப் பக்கங்களை யாரும் படிக்கவில்லை. நீயும் அந்த எடிட்டரும் உட்பட."

சத்யன் கடைசிப் பக்கங்களை படித்தார்.

"ஆம் கதையின் முடிவு முற்றிலும் வேறாக இருக்கிறது."

"இப்போது புரிகிறதா? இருவரின் சிந்தனைகளும் ஒரே விதமாக இருந்தால் முடிவு மட்டும் ஏன் மாறுபடுகிறது. மூளைக்கு அப்பாற்பட்ட ஒன்று தான் நம் சிந்தனைகளை இயக்குகிறது என்று ஒப்புக் கொள்கிறீர்களா. சிந்தனைகள் நம் மரணத்திற்குப் பிறகும் அழிவில்லை என்று நம் தத்துவங்களில் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? "

"அவ்வளவு எளிதாக அந்த முடிவிற்கு நாம் வர முடியாது. இதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஜீவனின் மூளையைப் பிரதி எடுத்த மென்பொருளில் ஏதாவது சிக்கல் இருக்கலாம். "

"உங்கள் தோல்வியை மறைக்க காரணம் தேடாதீர்கள். போட்டியில் தோற்று விட்டதை ஒப்புக் கொள்ளுங்கள். 40 லட்சம் எல்லாம் கேட்க மாட்டேன். என் 20 ரூபாய் கொடுங்கள்."

"வெயிட். இருவரின் மூளையும்,சிந்தனைகளும் ஒரே போல  இயங்க வேண்டும் என்றால். இருவரும் ஒரே விதமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். முதலில் கதை எழுதும் போது இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தார்கள். கடைசி இரண்டு நாட்கள் வேறு ஓட்டல் மாறினார்கள். அதனால் இருவரின் கற்பனையும் மாறியிருக்கலாம் அல்லவா."

"நீங்கள் சொல்வது எவ்வளவு அபத்தம் என்று உங்களுக்கே தெரியும். என் 20 ரூபாயை முதலில் தாருங்கள்."

பணத்தைப் பிடுங்கிக் கொண்டு நித்யன் கிளம்பினார். சத்யன் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார்.

                       ----------*************-----------

வனிதா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அவர்கள் கோவையில் குடியேறி 2 மாதங்கள் ஆகியிருந்தது. மாறனிடம் நிறைய மாறுதல்கள் தெரிந்தது. கோவையில் ஒரு ஜவுளி பிசினஸ் ஆரம்பித்து மிக நன்றாக நடந்துக் கொண்டிருந்தது. வியாபாரத்தில் மாறன் மிகவும் ஆர்வம் காட்டினான்.

வழக்கம் போல குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றான். ஸ்வப்னா வாசல் அருகே வந்தாள்.  வெகு நாட்கள் கழித்து முதன் முறையாக ஸ்வப்னாவின் நெற்றியில் முத்தமிட்டான்.

சிறிது தூரம் சென்ற பிறகு ரியாவின் வேகம் குறைவதை மாறன் கவனித்தான்.

"கால் வலிக்குதா பாப்பா?"

"இல்லைப்பா நானே நடக்கிறேன். நான் பெரிய பிள்ளை ஆயிட்டேன் இல்லையா?"

அன்றிரவு மாறனுக்கு உறக்கம் வரவில்லை. அவன் மனதில் பல கற்பனைகள் நதி வெள்ளம் போல சுரந்துக் கொண்டிருந்தது. தான் வெகு நாட்கள் கட்டுப்படுத்தியிருந்ததை அவனால் மேலும் தடுக்க முடியவில்லை.


வேகமாக ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தான். எவ்வளவு நேரம் எழுதினான் என்று அவனுக்கே தெரியாது. திடீரென்று ரியா உறக்கத்தில் பேசிக் கொண்டிருந்தது கேட்டு எழுதுவதை நிறுத்தினான்.

"அப்பா என்னைத் தூக்குங்க. நான் பெரிய பெண் இல்லை. கால் ரொம்ப வலிக்குது. என்னைத் தூக்குங்க."

மாறன் குழந்தையை சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான். பிறகு பெருமூச்சு விட்டு தான் எழுதியவற்றை அனைத்தும் கிழித்துப் போட்டான்.

பிறகு குழந்தையின் அருகில் படுத்து, தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"நான் அவனில்லை."
                               --------------------********-----------------------